• Monday 16 September, 2024 08:17 PM
  • Advertize
  • Aarudhal FM
ஆவிக்குரிய சபை, ஆவியில்லா சபை என்று சபை பிரிவுகள் உண்டா?

ஆவிக்குரிய சபை, ஆவியில்லா சபை என்று சபை பிரிவுகள் உண்டா?

ஆசிரியர்: டேவிட் தன்ராஜ்

சில மனநலம் பாதிக்கப்பட்ட ஊழியர்கள் அந்நியபாஷை பேசுகிற சபைகள் ஆவிக்குரிய சபைகள் என்றும் அந்நிய பாஷை பேசாத சபைகள் ஆவியில்லா சபைகள் என்று பேசிவருகிறார்கள். என்னவோ இந்த பெந்தேகோஸ்தே சபைகள் எல்லாம் ஆவியானவரை மொத்த குத்தகைக்கு எடுத்துவிட்டதுபோலவும். இவர்கள் பார்த்து யாருக்கு ஆவி இருக்கிறது, யாருக்கு ஆவியில்லை நியாயந்தீர்ப்பது இவர்களின் அறியாமையை அப்பட்டமாக காண்பிக்கிறது. 

முதலில் இவர்களின் கள்ளத்தனம் எப்படி இருக்கிறது என்று பாருங்கள். இவர்கள் சொல்லுகிற ஆவியில்லா சபை என்பது என்னவென்றால், தென்னிந்திய திருச்சபை, லுத்தரன் சபை, மெதடிஸ்டு சபைகள், பாப்திஸ்து, மற்றும் பிரதரன் சபைகளை ஆவியில்லா சபைகள் என்று சொல்லுவார்கள். இந்த சபையை சேர்ந்த விசுவாசிகள் எல்லாம் ஆவியில்லாதவர்கள் என்றாலும் அவர்கள் காணிக்கை கொடுத்தால் அது ஆவியானவர் கொடுத்தார் என்று அப்பட்டமாக அந்தர்பல்டி அடிப்பார்கள்.  இவையெல்லாம் ஆவியில்லாத சபைகள் என்று தெரிந்தும் சபை கட்டிடம் கட்டுவதற்கு, நிலம் வாங்குவற்கு, மாதாந்திர வசூல் போன்ற காரியங்களில் கல்லா கட்டுவார்கள். இது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்?

இன்றளவும் வட இந்தியாவுக்கு மிஷனெரிகளை அனுப்பி வைப்பதில் முன்னணியில் இருப்பது இவர்கள் சொல்லுகிற அந்நியபாஷை பேசுகிற சபைகள் அல்ல, மாறாக இவர்களின் பாஷையில் சொல்லுகிற ஆவியில்லா சபைகளே…

ஆவியில்லா சபையை சேர்ந்தவர்கள் மொழிப்பெயர்த்து தந்த வேதத்தை வைத்துக்கொண்டு அந்த சபைகளை ஆவியில்லா சபைகள் என்று சொல்வது, கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் அல்லவா? இன்றுவரை எந்த பெந்தேகோஸ்தே சபையாகிலும் வேதாகம மொழிப்பெயர்ப்பு பணியில் ஈடுபட்டிருக்கிறதா? இவர்கள் சொல்லுகிற ஆவியில்லாத சபையாகிய பிரதரன் சபையை சேர்ந்த சகோ. தேவவரம் அவர்கள் ஆந்திரா மற்றும் மத்தியபிரதேச  எல்லையில் வாழ்கிற கோயா இன மக்களின் எழுத்தில்லாத மொழிக்கு எழுத்தும் உருவாக்கி அந்த மொழியில் வேதாகமத்தையும் மொழிப்பெயர்த்து இந்த முப்பது ஆண்டுகளில் அவர் சுகவீனம் அடைந்து இரண்டு கால்களும் செயல் இழந்து சக்கர நாற்காலியில் அந்த பணியை ஏறக்குறைய நிறைவு செய்து இருக்கிறார். 

இந்தியாவில் ஏறக்குறைய அனைத்து முக்கிய மொழிகளிலும் வேதாகமத்தை மொழிப்பெயர்த்தவர்கள் பர்ப்திஸ்து லுத்திரன் சபையை சேர்ந்தவர்கள். இவர்கள் எல்லாம் ஆவியில்லாத சபைகள் என்றால் இவர்கள் மொழிப்பெயர்த்து தந்த வேதாகமத்தை தூக்கியெறிந்துவிட்டு இவர்களுக்கு புதிய வேதாகமத்தை மொழிப்பெயர்க்க வேண்டியதுதானே?

thanks tamil vethaakama kalanjiyam