
எச்சரிக்கையாக இருங்கள்

பாபிலீஸ் என்கிற ஒரு பலசாலியான மனிதன் 1911ஆம் ஆண்டு நயகரா நீர்வீழ்ச்சியின் மீது ஸ்பெஷலாக வடிவமைக்கப்பட்ட ஸ்டீல் டிரம்மில் கடந்து சென்றார். எதிர்பாராத விதமாக சிறு காயங்கள் அவருக்கு ஏற்பட்டாலும், அதில் தப்பிப் பிழைத்துக் கொண்டார். ஏனென்றால் அவர் படைக்கப்போகும் சாதனை ஆபத்தானது என்பதால், அதிக கவனத்தோடு வடிவமைக்கப்பட்ட டிரம் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் சிறு காயங்களுடன் உயிர் பிழைத்தார். ஆனால், பாபிலீச் சில ஆண்டுகளுக்குப் பிறகு நியூசிலாந்து தேசத்தில் ஒரு தெருவில் நடந்து சென்றபோது, தெருவில் கிடந்த ஆரஞ்சு பழத் தோலினால் கால் வழுக்கி விழுந்து காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு போகப்பட்டார். காயம் பலமாயிருந்தது மட்டுமல்லாமல், அதனால் ஏற்பட்ட பக்க விளைவுகளினால் சரீரம் அதிகமாய் பாதிக்கப்பட்டு மிகவும் பலவீனமாகி இறந்து விட்டார்.
நயகரா நீர்வீழ்ச்சியை விட, தெருவில் நடந்தது அவரின் உயிருக்கு ஆபத்தை விளைவித்தது.நம்முடைய ஆவிக்குரிய ஜீவியத்திலும், கிறிஸ்தவ வாழ்க்கையிலும் வெளியரங்கமாக தெரியும் பெரிய பாவங்கள் நம்மை ஆட்கொள்ளாதபடி மிகவும் கவனத்தோடு நடந்து கொள்கிறோம். கொலை, கொள்ளை, விபச்சாரம், மற்றவர்களின் பொருளை அபகரித்தல், போதை மருந்துகளுக்கு அடிமையாவது போன்ற பெரிய பாவங்கள் நம்மை பாதிக்காதபடி அதிக கவனத்தோடு நடந்து கொள்கிறோம். ஏனென்றால் இவைகள் எல்லாம் இலகுவாக வெளியே தெரிந்து விடக்கூடிய பாவங்கள். என்பதால். ஆனால் உள்ளான பாவங்கள், அதாவது, எரிச்சல் பொறாமை, கோபம், வைராக்கியம், புறங்கூறுதல், விபச்சார சிந்தனைகள், யாரும் பார்க்கவில்லை என்று அந்தரங்கமாக செய்கிற காரியங்கள் மற்றும் பார்க்கும் காட்சிகள் ஆகியவற்றில் கவனமாக இல்லாவிட்டால் நம்முடைய ஆவிக்குரிய ஓட்டத்தை தடை செய்வது மட்டுமல்ல, சிலவேளைகளில் கிறிஸ்தவ வாழ்வில் பின்வாங்கும் செய்துவிடுகிறது.
எனவே, மேற்கூறிய சுபாவங்களில் உள்ள ஆபத்தை உணர்ந்து கவனமாக செயல் படுவோம். ஆமென்.
I கொரிந்தியர் 10:12
இப்படியிருக்க, தன்னை நிற்கிறவனென்று எண்ணுகிறவன் விழாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்கக்கடவன்.