
பனிமலைகள் உண்டு,
எரிமலைகளும் உண்டு.
பனிமலையும் எரிமலையும்
ஒரு சேரக் கண்டிருக்கிறீர்களா?
அவன்தான் மனிதன்!
பனி உயரத்திலிருந்து வருபவை.
எரிமலைக் குழம்பு
ஆழத்திலிருந்து வருபவை.
பனி படர்ந்தால் பார்க்கப் பரிசுத்தம்.
உள்ளத்தில், உடலில் குளிர்ச்சி.
எரிமலை புகைந்தால்,
குமுறலும் கொந்தளிப்பும்.
இரண்டிற்கும் உறைநிலையும்
உருகும் நிலையும் உண்டு.
இரண்டு நிலைகளாலும்
பாதிக்கப்படும்
மனித வாழ்க்கை
எப்போதும் போராட்டம்தான்.
நான் இஸ்ரவேலுக்குப்
பனியைப் போல்
இருப்பேன் என்று
கர்த்தர் சொல்லுகிறார் (ஓசியா 14:5).
உயர்ந்த மலைகளின்
உன்னத சிகரங்களில்
பனி மூடியிருப்பது உண்டு.
தேவப் பிள்ளையே,
உன் உள்ளம்
கன்மலையாகிய
கிறிஸ்துவுக்குள் வளர வளர,
நீ வளர்ந்துகொண்டுவருகிறாய்.
வானத்தை நோக்கி
உயர்ந்து கொண்டு வருகிறாய்.
உலகமும் உலகத்துப் பிரச்சனைகளும்
உன்னைவிட்டுத்
தூரமாய் போய்க்கொண்டிருக்கிறது.
அவை உனக்குப் பாதாளமாய்
காணப்படுகிறது.
உலக துன்பங்கள் உன்னைத்
தொடமுடியாத அளவிற்கு
ஆவிக்குரிய வாழ்க்கையில்
வளர்ந்துவிட்டாய்.
உயர்ந்துள்ள மலையைப்
போல நிற்கிறாய்.
மண்ணான நீ,
இப்போது மலையாக நிற்கிறாய்.
முன்பு உன் பிரச்சனைகள் உனக்கு
மலையைப் போல நின்றன.
இப்போது உனக்கு முன் கவலைகள்
மண்ணாய்க் கரைந்து போயிற்று.
நீயோ மலையாக உயர்ந்துவிட்டாய்.
தேவ கிருபையில் உன்னில்
ஓர் அற்புதம் நிகழ்கிற நேரம் இது.
தேவன் உனக்கு வானத்து
பனியை அனுப்புகிறார்
(ஆதியாகமம் 27:28).
அவருடைய வானம் பனியைப்
பெய்துகொண்டிருக்கிறது (உபா.33:28).
அது எர்மோன் மலையின் சிகரங்களில்
இறங்கும் பனி.
சகோதரர்கள் ஒருமித்து
வாசம்பண்ணும் ஐக்கியம் (சங்கீதம் 133:3).
கர்த்தர் அதின் நடுவில் இருக்கிறார்.
அது அசையாது. தேவன்
அதற்குச் சகாயம்பண்ணுவார்.
கர்த்தராலே வருகிற பனியைப் போல
இருக்கிற நீ ( மீகா 5:7)
தேவ மகிமையினால் நிறைந்து
காணப்படுவாய்.
பனிபெய்யும்பொழுது மன்னாவும்
அதின்மேல் விழும் என்று
(எண்ணாகமம் 11:9) வசனம்
சொல்லுகிறது.
தேவ வசனமும்
வாக்குத்தத்தங்களும்
ஆசீர்வாதங்களும் அதின்மேல்
விழுந்துகொண்டே இருக்கும்.
தேவ மகிமையோடு நீ காணப்படும்போது,
அதைத் தொடர்ந்து மகிழ்ச்சியும் செழிப்பும்
சமாதானத்தின் நிறைவும் உன்னில்
பொழிந்து கொண்டிருக்கும்.
மூடுபனியே கர்த்தரைத் துதி (சங்.148:8).
பனிபடர்ந்த மலையாய் உள்ள
மனிதர்களும் வாழத்தான்
செய்கிறார்கள்.
ஆதார் அட்டையை வைத்துக்கொண்டு
திரிகிற இவர்கள்தான் அதிகம்.
உலகத்திற்கு அவர்களின்
ஒரு பக்கம் தெரிகிறது.
மறுபக்கம் அவர்களுக்குள்
மறைந்திருக்கிறது.
சமயம்பார்த்து எரிவார்கள், எகிறுவார்கள்.
மலை முகடுகள் பனிபடர்ந்து
காணப்படுவது போல் முகம் சொல்லும்.
உள்ளே எரிமலைக் குழம்பாய்
கனல் கக்கக் காத்திருக்கும்.
வாழ்க்கைச் சக்கரத்தையே
எரித்துவிட துடிக்கும் இவர்களைப் பற்றி
என்ன நினைப்பது? எப்படிச் சொல்லுவது?
ஆவியில் அனலாய் இருப்பது அவசியம்.
ஆனால், அப்படியே கனலாய்க் கனிவது
ஆளையே எரித்துவிடும்.
சிலரது சொற்கள் பலரை
உயிரோடு எரித்துக்கொண்டிருக்கின்றன.
உள்மனதில் பலரைப்
பற்றிய தீய எண்ணங்கள்
உதட்டளவில் பனிபடர்ந்த
கனிவான praise the Lord.
இந்த மாய்மாலத் தீ எங்கும்
எரிந்துகொண்டிருக்கின்றது.
பலரது உள்மனம் எரிமலை குழம்பாய்
வெளிப்படுகிற காலமிது.
பல பனிமலைகள் பற்றி
எரிந்துகொண்டுதானிருக்கின்றன.
எவ்வளவு நாட்களுக்கு இந்த நிலை?
ஆண்டவராகிய இயேசுவின் வருகை வரை.
உள் ஒன்று வைத்து புறம் ஒன்று
பேசும் மனிதர்கள்
எங்கும் சீமைக் கருவேலம் மரம் போல
நிறைந்திருக்கிறார்கள்.
இதில் பெரிய மனிதர் சிறிய மனிதர்
என்ற பேதமில்லை.
ஆவிக்குரியவர்களும் இப்படி வாழ்வது
பரிசுத்த ஆவியானவரை
ஆழமாய்த் துக்கப்படுத்துவதாகும்.
பயப்படாதே
சோதனைக்குப் பின் பொன்னாக விளங்குவாய்.
பற்றி எரிந்தாலும் பனிமலையாகவே இரு.

எழுதியவர் :
பாஸ்டர் எஸ். விக்டர் ஜெயபால் (மதுரை)

தொகுப்பு:
பாஸ்டர் ஜே. இஸ்ரேல் வித்ய பிரகாஷ் B.Com.,
Director, Literature Ministries
Radio Speaker: Aaruthal FM daily at 06:00 a.m.
(except Sunday)