
கிறிஸ்துமஸ் கொண்டாடலாமா கொண்டாட கூடாது என்பவர்கள் சொல்லும் காரணம்…
1) பாடு மரணங்களை நினைவுகூறச் சொன்ன இயேசு கிறிஸ்து, தமது பிறப்பை கொண்டாடச் சொல்லவில்லையே?
2) கிறிஸ்து பிறந்த தினம் டிசம்பர் 25 தான் என உறுதியாக சொல்லப்படவில்லையே?
3) மத வாழ்க்கை வாழ்பவர்களுக்கு பண்டிகை தேவைதான், ஆவிக்குரியவர்களுக்கு பண்டிகை தேவைதானா?
கொண்டாடுபவர்கள் சொல்லும் காரணம்.
1) கொண்டாடக் கூடாது என்றும் வேதம் கூறவில்லையே..
எந்த உலகதலைவர்களும் தங்கள் மறைவிற்குப் பின் தனது பிறந்தநாளைக் கொண்டாட வேண்டும் என கேட்பதில்லை , இருந்தபோதும் அவரை நேசிப்பவர்கள் தாங்களாகவே வலிய கொண்டாடுகிறார்கள். எங்கள் அன்பர் இயேசுவின் மனித அவதாரத்தின் வரலாறில் இன்று ( லூக் 2:10-11) என்று சொல்லப்பட்ட அவரது பிறந்தநாளை எப்படி கொண்டாடாமல் இருப்பது?
2) நமது முன்னோர்களில் அநேகர் தங்கள் பிறந்த நாளை அறியாதவர் உண்டு. அனுமானத்தின் அடிப்படையில் அப்படிப்பட்டவர்களின் பிறந்த நாளை கொண்டாடுவதில்லையா?
3) மதப்பண்டிகையாக கொண்டாட வேண்டாம், நற்செய்தி அறிவிப்பதற்கும், ஈகைக்குணத்தை வெளிப்படுத்தவும் இந்த நாளைப் பயன்படுத்தலாமே??
இது போன்று இரு வேறு கருத்துக்கள் இருக்கும் போது, என்ன முடிவெடுப்பது.??
நாட்களை விசேஷித்துக் கொள்கிறவன் கர்த்தருக்காக விசேஷித்துக்கொள்கிறான் என்ற வசனத்தின்படி ( ரோமர்14:5-13) டிசம்பர் 25 ஐ விசேஷப் படுத்துகிறவர்கள் அதைக் கர்த்தருக்காக செய்யும் பட்சத்தில் தவறு இல்லை. மதச்சடங்காக, பாரம்பரியமாக பண்டிகை கொண்டாடுவதுதான் தவறு.
உங்கள் புரிதல் சரியாக இருந்து , இந்த நாளை சுவிசேஷத்திற்குப் பயன்படுத்தினால் உங்களால், தேசத்திற்கு நன்மைதான் உண்டாகும்.
கலை தேவ தாசன்.