துர் உபதேசங்கள் உருவாவது எப்படி? என்ற கேள்விக்கு இலகுவில் பதிலளித்துவிட முடியாது. எனினும் இவற்றைக் குறித்து சரியான இறையியல் அறிவினை நீங்கள் பெற்றுக்கொள்ள வேண்டும்.

புதிய ஏற்பாட்டு சபையின் ஆரம்பகாலம் முதல் தவறான உபதேசங்கள் சபைக்குள் நுழைந்துவிட்டன. இன்னும் சொல்லப்போனால் அப்போஸ்தலர்கள் காலம் முடிவதற்கு முன்பே கள்ள உபதேசங்கள் முளைத்துவிட்டன. வெளிப்படுத்தின விசேஷப்புத்தகத்திலும்கூட துர்உபதேசங்கள் சபைகளில் இருப்பதை ஆண்டவர் சுட்டிக்காட்டுவதை நாம் காணலாம். விதை விதைக்கும் எல்லா இடங்களிலும் களையும் முளைக்கும். கிறிஸ்துவின் சரீரமாகிய சபையில் உள்ள ஒவ்வொரு கிறிஸ்தவனும் வேதவசன தெளிவுள்ளவர்களாய் இருக்கவேண்டும். இக்கட்டுரையானது கண்களை தெளிவிக்கும் கலிக்கமாக இருக்கட்டும் என நான் வாஞ்சிக்கின்றேன்.

துர் உபதேசங்களின் பிறப்பிடம்:

1. வேதவசனங்களை தவறாகப் புரிந்து கொண்டு அதற்கேற்ப உபதேசித்தல்.

2. தங்கள் சுய கருத்துக்கு ஏற்புடைய வசனங்களைத் தேடி அதையே உபதேசமாக்குதல்.

3. வேத வசனங்களின் அடிப்படை போதனையையே நோக்காமல் ஒரு குறிப்பிட்ட வசனத்தை மட்டும் எடுத்துக்கொண்டு அதை உபதேசமாக்குதல்.

4. சொப்பனங்கள், தீர்க்கதரிசனங்கள், வெளிப்பாடுகளை தங்கள் சொந்த உபதேசங்களுக்கு அடித்தளமாக்குதல்.

5. தனிப்பட்டவர்களின் அனுபவங்களை வேத உபதேசம்போல போதிப்பது.

தவறான போதனை யாரிடம் இருந்து வரும்?

தவறான போதனை எவரிடமிருந்தும் வரலாம் என்பது, சற்று அதிர்ச்சியளிக்கக்கூடிய கசப்பான ஒரு உண்மைதான். ஆனபடியால் எல்லாருமே தவறான போதனையைத்தான் செய்கிறார்கள் என்று தவறாக எண்ணிவிடக்கூடாது. எவரும் தவறுசெய்ய முடியும் என்ற ஆபத்து உள்ளது என்பதையே நான் இங்கு உங்கள் முன் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். தேவனால் வல்லமையாய் பயன்படுத்தப்படும் ஊழியர்களும் தவறாய் போதிக்கும் ஆபத்துக்கள் உண்டு. வல்லமையான ஒரு ஊழியர் மூலம் பலத்த செய்கைகள் திரளாக நடக்கும்போது அவருடைய போதனைகள் யாவும் சரி என்று கண்ணை மூடிக்கொண்டு ஏற்றுக் கொள்ளக் கூடாது. ஆனால் இப்போது வழக்கமாக அதுதான் நடந்துகொண்டிருக்கிறது.பொதுவாக அற்புதங்கள் ஆவிக்குரியவர்களின் கண்களை மங்கசெய்து நிதானிப்பை மழுங்கச் செய்கின்றன என்பது உண்மை. ஒருவர் தேவனுக்கு தன்னை ஒப்புக்கொடுத்து தேவசமுகத்தில் காத்திருந்து ஜெபிக்கும்போது, தேவன் அவரை கிருபையாக பயன்படுத்த ஆரம்பிக்கிறார். அவருக்கு இருக்கிற திறமைகளின் நிமித்தமாகவோ அல்லது அவர் அதிக வசனம் தெரிந்தவர் என்பதினாலோ அல்ல, கிருபையினால் மாத்திரமே தேவன் ஒருவரை பயன்படுத்துகிறார். மேலும் வஞ்சிக்கப்பட்ட ஒரு கூட்ட உலக மக்கள் இப்போதும் தவறான போதனைகளில் மயங்கி மற்றவர்களையும் வஞ்சிக்கும்படி காத்துகொண்டிருக்கின்றனர். இப்படிப்பட்டவர்களிடமிருந்து நம்மைப் பாது காத்துக்கொள்ள வேண்டியது இன்றியமையாதது. சரி, நாம் துர்உபதேசங்களின் பிறப்பிடத்தை சற்று ஆராயலாமா?

1. வேதவசனங்களை தவறாகப் புரிந்து கொண்டு அதற்கேற்ப உபதேசித்தல்:

நான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள்தான் என்று முட்டாள்தனமாக வாதம் செய்பவர்களைப் பார்த்திருக்கிறீர்களா? இவர்களும் அப்படிப்பட்டவர்கள்தான். வேதவசனத்தின் உண்மையான பொருளை விளங்கிக்கொள்ளாமல் இவர்களின் தலையில் உதிப்பது எதுவோ அதையே உபதேசமாக்குகின்றனர். தமது தலையறிவைக் கொண்டு உபதேசத்தை போதிக்கின்றனர். இப்படிப்பட்ட தவறான புரிந்துகொள்ளுதல்களுக்கு பல உதாரணங்களை நாம் வேதாகமத்திலிருந்தும், சரித்திரத்திலிருந்தும் உதாரணமாகக் கூறலாம். உதாரணமாக தமிழ் வேத புத்தகத்தில் “அந்திக்கிறிஸ்து” என்ற பதத்தை எடுத்துக்கொள்வார்கள். இதில் “அந்தி” என்பது மாலையைக் குறிக்கிறது. அப்படியானால் கடைசிக்காலத்தில் எழும்பும் கிறிஸ்துதான் அந்திக்கிறிஸ்து என்பார். ஆனால் கிறிஸ்துவுக்கு எதிரானவன் என்பதுதான் அந்திக்கிறிஸ்து என்ற பதத்தின் சரியான பொருள். இப்படிப்பட்ட குழப்பங்கள் துர்உபதேசங்கள் என்னும் அரசியலில் சர்வசாதாரணம். அவைகளை நாம் கண்டுகொள்ளவோ பின்பற்றவோ கூடாது.

2. தங்கள் சுய கருத்துக்கு ஏற்புடைய வசனங்களைத் தேடி அதையே உபதேசமாக்குதல்:

போதிப்பவர் எப்போதும் வேதாகமத்தின் கருத்தையே வலியுறுத்தி போதிக்க வேண்டும். தன் சொந்தக் கருத்தை நிலைநிறுத்துவதற்காக ஒருவர் வேதத்தை பயன்படுத்தினால் அது துர் உபதேசத்தில் அவரைக் கொண்டுபோய் விட்டுவிடும். பொதுவாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளைப் போன்று பாவத்தைப் பாவம் என்று கண்டிக்காத புது உபதேசம் இருந்தால் திரளானபேர் சபையில் சீக்கிரம் சேர்வார்கள். செய்ய வேண்டியது பாவத்தைக்குறித்து கடுமையாக பேசாமல், பாவம் செய்வது தவறல்ல என்று போதிக்கவேண்டும். அவ்வளவுதான். அமெரிக்காவில் ஒரு போதகர் இப்படியாக சொன்னார். ஆண்டவராகிய இயேசு அனைத்து பாவங்களுக்காகவும் மரித்துவிட்டார். அதாவது நாம் செய்த, செய்து கொண்டிருக்கிற, செய்யப் போகிற பாவங்கள் எல்லாவற்றிற்காகவும் அவர் சிலுவையில் கிரயம் செலுத்திவிட்டார். ஆகவே நாம் இஷ்டம்போல் வாழலாம். உலக சிற்றின்பங்களில் திளைக்கலாம், மனம்போனபடி நடக்கலாம் என போதனை செய்தார். இதுபோன்ற பிழையான சபைகளில் கலந்து கொள்ளக்கூடாது.சிலர் “அபிஷேகமே உங்களுக்கு சகலத்தையும் குறித்தும் போதிக்கிறது” என்ற வசனத்தைக் காட்டி உங்களைத் திசை திருப்ப முயல்வார்கள். ஆனால் இதைவிட சபை கூடிவருதல் என்பது மிகவும் முக்கியமானது ஆகும். இதன் சுவையை உணர்ந்து அதன் முக்கியத்துவத்தை உணர்ந்துகொண்ட கிறிஸ்தவன் மட்டுமே ஒழுங்காய் தவறாது சபைக்கு செல்வான். உண்மைக் கிறிஸ்தவனால் ஆராதிக்காமல் இருக்க முடியாது.

3. வேதவசனங்களின் அடிப்படை போதனையை நோக்காமல் ஒரு குறிப்பிட்ட வசனத்தைமட்டும் எடுத்துக்கொண்டு அதையே உபதேசமாக்குதல்.

இதற்கு பல உதாரணங்களை வேதாகமத்திலிருந்தே கூறலாம். முதலாவதாக, “…ஸ்திரீயைத் தொடாமலிருக்கிறது மனுஷனுக்கு நல்லது” (1கொரி.7:1) அப்படியானால் ஒருவரும் திருமணம் செய்துகொள்ளக் கூடாதல்லவா? இரண்டாவதாக, “அதிக ஆக்கினையை அடைவோம் என்று அறிந்து, உங்களில் அநேகர் போதகராகாதிருப்பீர்களாக” (யாக்.3:1) அப்படியானால் ஒருவரும் போதகர்களாகக் கூடாது! இப்படிப்பட்ட ஒரு வசனங்களை துர்உபதேசங்களில் ஏராளமாக உபயோகிப்பர். இவற்றைக் குறித்து நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஒருபோதும் தேவ சத்தியத்தை இத்தகைய பிழையான உபதேசங்கள் திரித்துவிடவோ அழித்துவிடவோ முடியாது.

4. சொப்பனங்கள், தீர்க்கதரிசனங்கள், வெளிப்பாடுகளைத் தங்கள் சொந்த உபதேசங்களுக்கு அடித்தளமாக்குதல்:

பரிசுத்த வேதாகமமே எந்த கிறிஸ்தவ உபதேசத்திற்கும் அடிப்படையாக இருக்க வேண்டும். மாறாக தாங்கள் கண்ட சொப்பனங்கள், தரிசனங்கள், வெளிப்பாடுகளின் அடிப்படையில் வேதாகமத்திற்கு புதிய விளக்கம் கொடுக்க முயல்வது என்றுமே ஆபத்தானது ஆகும். அது தீமையை விளைவிக்கும். தேவன் மனிதனுக்கு சொல்ல வேண்டிய நற்செய்தியை ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் மூலமாய் சொல்லிவிட்டார். பரிசுத்த ஆவியானவர் பல ஆவிக்குரிய இரகசியங்களை நிருபங்களில் எழுதியுள்ளார். இதற்கு மாறாக கர்த்தர் எனக்கு புதிதாக வெளிப்படுத்தினார் என்று யாராவது கூறினால் அது வேதத்திற்கு ஒத்திருக்கிறதா என்று ஒப்பிட்டுப் பார்ப்பதுதான் நாம் செய்ய வேண்டிய முதலாவது வேலை. தேவன் ஒருபோதும் மாறாதவர். அவர் தாம் எழுதிக் கொடுத்த வேதாகமத்தில் இருப்பதற்கு மாறாக எதையும் கூறுவதில்லை. தேவனுடைய வார்த்தைகள் என்றுமே மாறாதவைகள்.ஒரு காலத்தில் பிரபலமான அற்புதங்களைச் செய்யும் பிரசங்கியாரைப் பலர் பின்பற்றினார்கள். பிரச்சனை என்னவெனில் அவர் கண்ட தரிசனங்களை உபதேசமாக்கியதுதான். இன்று பல பிரிவுகளாக அவரது உபதேசம் பிரிந்து சிதறி கிடக்கும் சபைகளைச் சேர்ந்த பலர் இதைப் பின்பற்றுபவர்களாக மாறியுள்ளனர். தரிசனங்கள், சொப்பனங்கள், வெளிப்பாடுகள் என்று வரும்போது நாம் மிகவும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்.நாம் நம்பவேண்டியது பரிசுத்த வேதாகமத்தை மாத்திரமே. அதுவே நம்முடைய அஸ்திபாரம். நாம் காண்கிற, கேட்கிற, கேள்விப் படுகிற, சொப்பனங்கள் தரிசனங்கள் எதுவும் கர்த்தர் தரும் வெளிப்பாடுகள் என்று சொல்வதற்கில்லை. ஆகவே ஜாக்கிரதை!

5. தனிப்பட்டவர்களின் அனுபவங்களை வேத உபதேசம் போல போதிப்பது:

தேவன் சிலரை ஒரு சில குறிப்பிட்ட அனுபவங்கள் மூலமாக நடத்துகிறார். அதற்காக அவர் அதையே உபதேசமாக்கிவிடக் கூடாது. ஒரு தேவ ஊழியர் தன் தலைமுடியை பராமரிப்பதில் அதிக நேரம் பணம் செலவழித்தாராம். ஒருநாள் தேவன் அவரை மொட்டை அடிக்கும்படி கூறினாராம். மொட்டையடித்த அந்த ஊழியர் எல்லாரும் என்னைப்போல் மொட்டை அடியுங்கள் என்று சபையில் போதித்தால் எப்படியிருக்கும்? ஆனால் இன்று பல ஆவிக்குரிய சபைகளிலும்கூட இந்தப் போக்கையே காணக்கூடியதாக இருக்கின்றது. இந்த விஷயத்திலே ஒவ்வொரு கிறிஸ்தவனும் விழிப்பாய் ஜாக்கிரதையாயிருக்க வேண்டும். இல்லையேல் வஞ்சிக்கப்பட்டு ஏமாந்துவிட வேண்டியதுதான். மேற்சொன்ன சம்பவத்தை நான் வாசிக்கும்போது சிறுவயதில் படித்த மொட்டை வால் நரி என்ற பஞ்ச தந்திர கதைதான் நினைவுக்கு வருகிறது. அந்த கதையில் விபத்து ஒன்றில் தனது வாலை இழந்த ஒரு நரி அந்தக் காட்டிலிருந்த அனைத்து நரிகளும் வாலை வெட்டிக்கொண்டு மொட்டையாயிருக்க தந்திரம் செய்ததாம். அதுபோன்று வஞ்சிக்கப்பட்ட பலர் தங்களோடு கூட்டு சேர்க்க ஒரு கூட்டம் மக்களை ஏமாற்றி வஞ்சிக்கின்றனர்.தவறான போதனைகளைக் குறித்து, மேலே நாம் கண்டவையெல்லாம் ஒரு மாதிரி சாம்பிள்தான். நாம் விழிப்பாயிருந்தால் எவரும் நம்மை வீழ்த்திவிட இயலாது. அதுமட்டுமல்ல, நாம் எளிதாய் தவறான உபதேசங்களை அடையாளம் கண்டுகொள்ளலாம். இந்த துர் உபதேசப் போதனையில் என்னதான் இருக்கிறது என்று பார்ப்போமே என்று துணிகரங்கொண்டு எவரும் கள்ள உபதேசங்களில் மாட்டிவிடாதீர்கள். பின்பு ஆழம் தெரியாமல் காலை விட்ட கதையாகிவிடும். தேவனைப் பற்றிய சரியான அறிவும் வேதாகம அடிப்படை அறிவும் இருந்தால் நாம் எத்தகைய உபதேசங்களையும் இனங்கண்டு கொள்ளலாம்.

நாம் நம்மை சுத்திகரிக்கும் உபதேசத்தில் இருக்கிறோமா? சிந்தித்துப் பார்ப்போமாக. கர்த்தர் தாமே நம்மை வழிநடத்துவாராக

சாத்தான் சபையின் உதவி நிறுவனர் ரியான் சுவிஜெலார் இயேசுவை ஏற்றுக்கொண்டு அங்கிருந்து ராஜினாமா செய்து வெளியேறிய அண்மைச்செய்தி https://tcnmedia.in/satan-church-co-founder-met-by-jesus-riaan-swiegelaar-resigned/