
மீனைப் பிடிக்க
தூண்டில் வேண்டும்
பறவையைப் பிடிக்க
கண்ணி வேண்டும்
மானைப் பிடிக்க
வலை வேண்டும்
யானையைப் பிடிக்க
பள்ளம் தோண்ட வேண்டும்
மக்களைப் பிடிக்க
ஒரு 24 மணி நேர
செய்தித் சேனல் போதும்!
அண்மைச் செய்தியை,
ஒருவித சப்தத்துடன் சொல்லி,
அதுக்குன்னே மீசிக் அடிச்சு
அடிவயிற்றில் புளியைக் கரைச்சு,
இரத்தக்கொதிப்பை
உண்டாக்கி
புயலப் பத்தியும்
அந்த பயலைப் பத்தியும்
திரும்பத் திரும்பச் சொல்லி
சுகவாசியை சுகவீனமாக்கி
படுக்கையில் இருப்போரை
மரணப்படுக்கையில் தள்ளி
ஐயையோ
நாற்பது வருஷத்துக்கு முன்னாடி
இப்படியெல்லாம் அக்கபோரு
ஏதுமில்லை
ஆல் இந்தியா ரேடியோ,
செய்திகள் வாசிப்பது
சரோஜ் நாராயணசாமி
எப்படி இருக்கும் தெரியுமா?
இந்தியா முழுசும் சுகமா இருந்துச்சு
இப்ப T.V யைத் தொறந்தா
நெஞ்சு பதபதக்குது
மனசு விட்டுப்போகுது
சேத்துவச்ச தைரியமெல்லாம்
செத்துப் போகுது
நித்தமும் சாவுகளை
பார்த்தது போதுமையா
முன்பெல்லாம் மயானத்தில்
அமைதி இருந்துச்சு
இப்பல்லாம் மயானத்தில் கூச்சலும்
வீட்ல அமைதியும் இருக்கு
வீடும் தெருவும்
மயானமாகிக்கிட்டு இருக்கு
ஏய்,
தொல்லைதரும்
தொலைகாட்சிப் பெட்டியே
உனக்கொரு
முகக்கவசம் போட்டால் நலமாயிருக்கும்
ஏதாச்சும் நல்ல விஷயம் இருந்தா சொல்லு,
இல்லாட்டி எங்களை விட்டுடு
தொல்லை பண்ணாத!
“பக்திவிருத்திக்கு ஏதுவான
நல்ல வார்த்தை உண்டானால்
அதையே கேட்கிறவனுக்குப்
பிரயோஜனமுண்டாகும்படி
பேசுங்கள்” (எபேசியர் 4;29)
இது
ஒரு சாமானியனின் குரல்
நான் ஒரு கிராமத்துக்காரன்
என்னத்தச் சொல்ல…
எண்ணத்தில் உதித்தது,
எனவே எழுதினேன்

ஜே. இஸ்ரேல் வித்ய பிரகாஷ் B.Com