
வேலைக்குக் கூலி,
குறைந்தக்கூலி
அதிக வேலை.
குறைந்த வேலை.
அதிகக் கூலி
(மத்தேயு 20:1-16)
இன்றைய உலகில்
பணிசெய்வோரிடையே
உள்ள கூக்குரல் இதுதான்
ஏற்றத் தாழ்வுகளை
ஏற்றுக்கொள்ளாத மனம்
எஜமான், கூலிக்காரன் என்ற
மன முரண்பாடுகள்
இவ்வுலகில் காணப்படும்
சமுதாயத்தின் பாதிப்புக்கள்
இதன் அடிப்படையில்
காணப்படுகின்றன.
இந்த அரசியல்
அடிப்படை உணர்வு,
சமயத்திலும் (religion)
எதிரொலிக்கிறது
இதற்கு இடையில்தான்
ஆண்டவர் இயேசு
அழகான ஒரு உவமை மூலம்
நியாயத்தையும் நீதியையும்
நிலைநிறுத்துகிறார்.
பரலோக ராஜ்யத்தைக்
குறித்துக் கூறும் உவமை
ஒவ்வொன்றும்
கூர்ந்து கவனிக்கத்தக்கவை
ஒவ்வொரு உவமையிலும்,
ஒவ்வொருவருடைய வாழ்க்கையும்
பின்னிப் பிணைந்திருக்கிறது.
வீட்டு எஜமானின்
திராட்சைத்தோட்டப் பணி
மிக முக்கியம்.
ஒவ்வொரு காலக் கட்டத்திலும்
இறைப் பணி செய்யும்
ஊழியர்களும் விசுவாசிகளும்
தேவ நீதியை எதிர்பார்த்து
காத்திருக்கின்றனர்
காலங்கள் மாறலாம்
ஊழியம் ஒன்றே
உன் உழைப்பின் நாட்கள்
அதிகமோ குறைவோ
பலன் ஒன்றே
கீழ்ப்படிதலும் செயலும் தேவை
கூட்டம் எவ்வளவு தேறும்
காணிக்கை எவ்வளவு வரும்
உயர்ந்த ஹோட்டலில்
ஒன்பது பேருக்கு
ரூம் புக் பண்ணிவிடுங்கள்
ஐயாவுக்கு சாப்பாடு
என்னென்ன என்பதை
நாளைக்கு லிஸ்ட் போட்டு
தருகிறோம்
ஐயாவுக்கு காணிக்கை குறைந்தது
பைவ் டிஜிட்டுக்கும் மேல்
இருப்பது அவசியம்
இப்படி தேவ ஊழியத்தில்
கூலி பேசி உழைப்பவர்கள் உண்டு
கூலி பேசாமல் எஜமானின்
அழைப்பையும்
தெரிந்துகொள்ளுதலையும்
அவரது வார்த்தையையும் நம்பி
கீழ்ப்படிந்து திராட்சைத்
தோட்டத்திற்கு வேலைக்குப்
போனவர்களும்
போகிறவர்களும் உண்டு
பணியாற்றும் காலம்
கூடவோ குறைவோ
உழைப்பின் தன்மைக்கு
மதிப்பு உண்டு
கடைவீதியில் சும்மா சுற்றி
அலைபவர்களுக்கும்
அழைப்பு உண்டு
வேலையற்று இருக்கிறோம்
என்பவர்களுக்கும்
தேவ அழைப்பு உண்டு
காலத்தை கணக்கிடுவதில்
பணியைக் கணக்கிடுவது மேன்மை.
அதிகாலையிலும் அழைப்பு,
மூன்றாம் மணியிலும் அழைப்பு
ஆறாம் மற்றும்
ஒன்பதாம் மணியிலும்
அழைப்பு உண்டு
ஏன்?
இந்தப் பதினோராம்
மணிவேளையிலும்
அதாவது இந்தக்
கடைசிக் காலத்திலும்
அவருடைய ஊழியத்திற்கென்று
அழைப்பு வந்துகொண்டுதானே
இருக்கிறது.
அவர் கூலி பேசி அனுப்புகிறாரா?
சும்மா கடைவீதியைச்
சுற்றாதே போ என்கிறாரா?
கடைசி நேரம் என்று
பார்க்காதே.
போ(ங்கள்)
எனச் சொல்லுகிறாரா?
ஆண்டவர் சொல்லுகிறபடி
கீழ்ப்படிந்து செல்
உண்மையுள்ள நியாதிபதி
உனக்கு நீதிசெய்வார்
அவர் பண்ணையில்
பணியாற்றுகிறவர்கள்
ஒருபோதும் வெறுமனே
திரும்பமாட்டார்கள்
இதோ எஜமான் தன் பலனோடு நம்மை
நோக்கி வரும் நேரம் நெருங்கிவிட்டது
உன் ஊழியப் பணியின் நற்பலனைப்
பெற்றுக்கொள்வது
முதலில் உன்னில்தான்
தொடங்குகிறது.
கூலி பேசி ஊழியம் செய்தால்
மனதிற்கு கொஞ்சம் சிரமம்தான்
அவரோ எஜமான்
பண்ணையும், கனிகளும்
பலன்களும் அவருடையது
அவருடையதை அவர் எடுக்க,
கொடுக்க அவருக்கு
முழு உரிமை உண்டு
இது அவர் இஷ்டத்தைச் சார்ந்தது.
ஊழியத்தில் உள்ள
கஷ்டத்தைக் குறித்தே
சொல்லிக் கூப்பாடு
போடுகிறவர்கள் உண்டு
பகலின் கஷ்டத்தையும்
வெயிலின் உஷ்ணத்தையும்
சொல்லி மற்றவர்களோடு
ஒப்பிட்டு பார்ப்பது சரியா?
மனம் தளராமல்
மனம் சலிக்காமல்,
தன் ஊழியத்தை
மற்றவர்களுடைய
ஊழியத்தோடு ஒப்பிட்டு
எரிச்சலடையாமல்
கர்த்தர் அழைத்த
அழைப்பை எண்ணி
அவர் தந்த ஊழியத்தை
மனநிறைவோடு செய்தால்
பரலோக மேன்மை
பகிர்ந்தளிக்கப்படும்
கர்த்தர் உங்களை
சீயோனிலிருந்து
ஆசீர்வதிப்பார்
அவனவனுக்கு ஏற்ற பலன்
ஏற்ற காலத்தில்
வந்துகொண்டிருக்கிறது.
எழுதியவர்:
பாஸ்டர் எஸ். விக்டர் ஜெயபால்
போதகர் / எழுத்தாளர் (1939 -2021)

=======================
தொகுப்பு:
பாஸ்டர் ஜே. இஸ்ரேல் வித்ய பிரகாஷ் M.Div.,
இயக்குனர் – இலக்கிய துறை (tcnmedia.in)

‘நல்லாசான்’
சர்வ தேச விருது (மலேசியா – 2021)
RADIO SPEAKER – AARUTHAL FM.
DAILY AT 06:00 A.M. IST