அடடே.. இந்த கிறிஸ்துமஸ் குடிலை பாருங்களேன்.. செம விழிப்புணர்வு.. அசத்திய அரசு பள்ளி ஆசிரியர்!
By Rayar A Updated: Friday, December 24, 2021, 20:25 [IST]
புதுச்சேரி: கொரோனா தடுப்பூசி அனைவரும் போட்டுக்கொள்ள வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 150 சிரஞ்சி ஊசிகளை கொண்டு கிறிஸ்துமஸ் குடில் அமைத்துள்ள அரசு பள்ளி ஆசிரியரை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
புதுச்சேரி: மருந்து பாட்டில் உள்ளே குழந்தை ஏசு பிறப்பது போன்ற குடில்… அசத்திய ஓவிய ஆசிரியர்! இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாளை கொண்டாடும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் தங்கள் இல்லங்களில் குடில் அமைத்து வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

வித்தியாசமான கிறிஸ்துமஸ் குடில்
இந்த நிலையில் நாளை கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாப்பட உள்ள நிலையில் புதுச்சேரி மாநிலம் அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த ஓவிய ஆசிரியரான சுந்தரராசு தனது வீட்டில் வித்தியாசமான முறையில் அமைத்துள்ள குடில் அனைவரையும் கவர்ந்துள்ளது. கொரோனா தொடர்ந்து மக்களை அச்சுறுத்தி வருவதால் இது தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு எற்படுத்தும் வகையில் குடில் அமைத்துள்ளார் சுந்தரராசு.

தடுப்பூசி கொண்டு குடில்
கொரோனாவில் இருந்து அனைவரும் தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்றால் அதற்கு தடுப்பூசி போட வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 150 ஊசிகள் மற்றும் கொரோனா மருந்து பாட்டில்களை கொண்டு குடில் அமைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார் ஆசிரியர் சுந்தரராசு.
டாக்டர் போல் முககவசம்
அவர் அமைத்துள்ள குடிலில் கிறிஸ்துமஸ் தாத்தா டாக்டர் போல் முககவசம், கையுறை அணிந்து ஊசி போட தயாராக இருப்பது போன்று வடிவமைத்துள்ளார். மேலும் 150 சிரஞ்சி ஊசிகளை கொண்டு குடில் அமைத்துள்ளார். இந்த குடிலின் நடுவில் 4 அடி உயர பெரிய அளவில் 2 சிரஞ்சி ஊசிகள் மற்றும் 2 அடி உயரத்தில் கொரோனா மருந்து பாட்டில் போன்று அலங்கரித்து வைக்கப்பட்டு அந்த மருந்து பாட்டிலின் உள்ளே குழந்தை ஏசு பிறப்பது போன்ற மாட்டு தொழுவமும், அருகில் மாதா, மற்றும் பலர் இருப்பது போலவும் அமைத்து அசத்தியுள்ளார்.

மக்கள் பாராட்டு
கொரோனா சிரஞ்சி ஊசி மற்றும் மருந்து பாட்டில்களால் ஆன கிறிஸ்துமஸ் குடிலை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து ரசித்து வருகின்றனர். மேலும், இப்படியும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தலாம் என்று உணர்த்திய ஓவிய ஆசிரியர் சுந்தர்ராசுக்கு மக்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். ஆசிரியர் சுந்தர்ராசு ஆண்டுதோறும் ஏதாவது ஒரு வித்தியாசமான முறையில் கிறிஸ்துமஸ் குடில் அமைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
