காப்பகத்தில் கிறிஸ்தவ போதகர் கொலை; மனநலம் பாதிக்கப்பட்டவர் கைது
திருவெறும்பூர் அருகே மனநல காப்பகத்தில் கிறிஸ்தவ மதபோதகர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக மனநலம் பாதிக்கப்பட்டவர் கைது செய்யப்பட்டார்.

திருவெறும்பூர்; பிப்ரவரி 10, 2021
கிறிஸ்தவ மதபோதகர்: திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே பூலாங்குடி காலனியில் இருந்து பழங்கனாங்குடி செல்லும் சாலையில் கிருபா மனவளர்ச்சி குன்றியோர்களுக்கான காப்பகம் உள்ளது. தனியார் பராமரித்து வரும் இந்த காப்பகத்தில் 10-க்கும் மேற்பட்ட மனவளர்ச்சி குன்றியோர் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த காப்பகத்தில் தஞ்சாவூர் மானையேறிப்பட்டியை சேர்ந்த விக்டர் ஞான ஆசீர்வாதம் (வயது 56) என்பவர் சமையல்காரராக பணியாற்றி வந்தார். மேலும் இவர் கிறிஸ்தவ மதபோதகராகவும் இருந்தார். இந்த காப்பகத்தில் கரூர் தளவாய்பாளையத்தை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட அசோக் (22) என்பவர் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்.
கொலை: நேற்று காலை விக்டர் ஞான ஆசீர்வாதம் தோசை கரண்டியால் அசோக்கை தாக்கியதாக தெரிகிறது. இதில் கோபம் அடைந்த அசோக் தண்ணீர் டம்ளரை எடுத்து விக்டர் ஞானஆசீர்வாதம் மீது தூக்கி வீசி தாக்கினார். இதில் காயம் அடைந்த விக்டர் ஞான ஆசீர்வாதத்திற்கு திடீரென வலிப்பு நோய் ஏற்பட்டது. இதையாரும் கவனிக்காததால் அவர் சிறிதுநேரத்திலேயே பரிதாபமாக இறந்தார்.இதுகுறித்த புகாரின் பேரில் நவல்பட்டு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக கொலை வழக்குப்பதிவு செய்து அசோக்கை கைது செய்தனர்.