கிறிஸ்துமஸ் விழாவையொட்டி பாலப்பள்ளம் பகுதியில் ரூ.20 லட்சம் செலவில் பாபிலோன் தொங்கும் தோட்டத்தின் வடிவில் பிரம்மாண்ட கிறிஸ்துமஸ் குடில்
Written by – ZEE Bureau | Last Updated : Dec 24, 2021, 08:45 AM IST
குமரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். கிறிஸ்துமஸ் பண்டிகையை வரவேற்கும் விதமாக தேவாலயங்கள் மட்டுமின்றி வீடுகள், வணிக வளாகங்கள் என அனைத்து இடங்களிலும் நட்சத்திரங்கள் மற்றும் கிறிஸ்துமஸ் குடில்கள் அமைப்பார்கள். மேலும் வண்ண விளக்குகள் மூலம் கட்டிடங்களை ஜொலிக்க வைப்பார்கள்.
அதிலும் கிறிஸ்துமஸ் (Christmas the celebration of Jesus Chirst’s brithday) குடில்களை பொறுத்தவரை ஊருக்கு ஊர் இளைஞர்கள் போட்டி போட்டு சுற்றுலா தலங்கள் போன்று பொதுமக்களை கவரும் வகையில் வித்தியாசமாக அமைத்து கொண்டாடுவர்.
அந்த வகையில் பாலப்பள்ளம் பகுதியில் உள்ள இளைஞர்கள் இந்த ஆண்டு ரூ.20 லட்சம் மதிப்பில் பாபிலோன் தொங்கும் தோட்டம் வடிவில் பிரம்மாண்ட குடில் ஒன்றை அமைத்துள்ளனர்.
இந்த பிரம்மாண்ட கிறிஸ்துமஸ் குடில் நேற்று இரவு திறக்கப்பட்டது. குடிலை மத்திக்கோடு சேகரத்து சபை ஆயர் ஸ்டீபன் திறந்து வைத்தார்.
இந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நிகழ்ச்சியில், ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ., மத்திக்கோடு சேகரத்து துணை ஆயர் ஸ்டீபன்ராஜ், கிறிஸ்துபுரம் சபை ஆயர் ஹரால்டு அனித், சகாயநகர் பங்குபணியாளர் ஆரோக்கிய ஜோஸ், வின் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் அன்ட் ஜீவன் சேரிட்டி தலைவர் சதீஷ், செயலாளர் பாலகிருஷ்ணன், பொருளாளர் ஹெல்டன் செல்வகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த குடில் இன்று காலை முதல் பொதுமக்கள் பார்வைக்காக அனுமதிக்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை வின்ஸ்டார் ஸ்போட்ஸ்கிளப் மற்றும் ஜீவன் சேரிட்டி அமைப்பினர் செய்துள்ளனர்.