By Mathivanan Maran Published: Friday, December 24, 2021, 19:13 [IST]

புவனேஸ்வர்: ஓமிக்ரான் எனும் உருமாறிய கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால் பல மாநிலங்கள் கட்டுப்பாடுகளை மீண்டும் விதித்துள்ளன. ஒடிஷாவில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்ட்டாட்டங்களுக்கு தடை விதித்து அம்மாநில அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இந்தியாவில் 358 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஓமிக்ரான் பாதிப்பில் மகாராஷ்டிரா முதலிடத்தில் இருந்து வருகிறது

2 டோஸ் கொரோனா தடுப்பூசிகளைப் போட்டுக் கொண்டவர்களுக்கும் ஓமிக்ரான் பாதிப்பு உறுதியாகி உள்ளது. வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்களால்தான் ஓமிக்ரான் பரவல் அதிகரித்திருக்கிறது என்கிறது மத்திய அரசு.

இரவு நேர ஊரடங்கு

ஓமிக்ரான் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தல் மற்றும் எச்சரிக்கைகளை விடுத்துள்ளது. உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒடிஷா அரசு

இந்நிலையில் ஒடிஷா மாநில அரசு, ஓமிக்ரான் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இது தொடர்பாக ஒடிஷா மாநில தலைமைச் செயலாளர் மொகபாத்ரா கூறியதாவது: ஓமிக்ரான் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை

கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் அதிகபட்சமாக 50 பேர் மட்டுமே கொரோனா கால கட்டுப்பாடுகளைப் பின்பற்றி கலந்து கொள்ள முடியும். இது தொடர்பாக மாவட்ட நிர்வாகங்கள் சிறப்பு உத்தரவுகளை பிறப்பித்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. டிசம்பர் 31-ந் தேதி இரவில் புத்தாண்டு தின கொண்டாட்டங்கள் முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளன. திருமணங்களைத் தவிர இதர கொண்டாட்டங்கள், விழாக்கள் அனைத்துக்கும் தடை விதிக்கப்படுகிறது.

ஒடிஷாவில் 4 பேருக்கு பாதிப்பு

துக்க நிகழ்ச்சிகள் கொரோனா கால கட்டுப்பாடுகளுடன் நடத்தப்பட வேண்டும். சமூக ஒன்றுகூடல்கள், விருந்துகள், இசை நிகழ்ச்சிகள் எதுவும் நடத்த அனுமதி கிடையாது. அனைத்து நிகழ்வுகளையும் மாவட்ட நிர்வாகங்கள் உன்னிப்பாக கவனிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா கால கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள். இவ்வாறு மொகபாத்ரா கூறினார். ஒடிஷாவில் ஓமிக்ரான் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4 ஆக பதிவாகி இருக்கிறது.