
தேவாலய ஊழியரை பணி நீக்கம் செய்த நிர்வாகம் – தேவாலய ஊசி கோபுரத்தில் நின்று போராட்டம்

தூத்துக்குடி – நாசரேத் சிஎஸ்ஐ திருமண்டலத்திற்குட்பட்ட நாசரேத் C S I திருச்சபைக்கு கீழ் ஊழியராக அகஸ்டின் என்பவர், கடந்த 17 ஆண்டுகளாக பணியாற்றி வந்த நிலையில், தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதனால் மனம் உடைந்த அகஸ்டின், மற்றும் அவரது மனைவி, மகன்களுடன் ஆலயத்தின் கோபுரத்தின் மீது ஏறி குடும்பத்துடன் நின்று தற்கொலை மிரட்டல் விடுத்தார்.
பொது மக்கள் கூடி வந்து சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். காவல் துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த, டி.எஸ்.பி. நாகராஜன், நாசரேத் காவல்துறை ஆய்வாளர் சகாயசாந்தி தலைமையிலான போலீசார் மற்றும் தீயணைப்பு நிலைய அதிகாரி மாரியப்பன் ஆகியோர், அவர்களிடம், பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் சமரச பேச்சுவார்த்தைக்கு பிறகு அகஸ்டின் இறங்கி வந்தார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சில மணி நேரங்கள் பரபரப்பு நிலவியது.