
சென்னை: கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தேவாலயங்களில் திருவிருந்து கொடுக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.இதுகுறித்து தமிழக தலைமை செயலாளர் சண்முகம் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் நேற்று அனுப்பியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:தமிழகத்தில் கொரோனா ஊரடங்கை தொடர்ந்து அளிக்கப்பட்ட தளர்வுகளை அடுத்து, செப்டம்பர் மாதம் முதல் வழிபாட்டு தலங்களுக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.கிறிஸ்தவர்கள் தற்போது கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட உள்ளனர். அவர்கள் ஆலய ஆராதனை நடத்த சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அதன்படி, கிறிஸ்தவ ஆலயங்களில் திருவிருந்து நடத்த அனுமதி அளிக்கப்படவில்லை.இந்த நிலையில் வருகிற 25ம் தேதி கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட உள்ளனர். அவர்களின் வழிபாடுகளின் முக்கிய நிகழ்வாக திருவிருந்து ஆராதனைக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.இந்த திருவிருந்தில் பங்கேற்பவர்களுக்கு அப்பம் மற்றும் திராட்சை ரசம் தனித்தனி கப்புகளில் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.
டிசம்பர் 3, 2020
நன்றி: தினகரன்