உலகையே வியக்கவைத்த அருட்சகோதரியின் புன்னகை
News
  
World
  

உலகையே வியக்கவைத்த அருட்சகோதரியின் புன்னகை

நீங்கள் காணும் இந்த புகைப்படம் உலகையே வியக்க வைத்த ஒரு புகைப்படம். அழகிய புன்னகையுடன் அமைதியான ஒரு முக பார்வையோடு கண்கள் மூடி இருக்கிறது. தூக்கத்தில் கனவு காண்கிறார்கள் என்று சிந்திக்கத் தோன்றலாம் இதனை பார்க்கும் போது. ஆனால் உண்மையில் நீங்கள் காணும் இந்த சகோதரிக்கு உயிர் இல்லை என்பதை உங்களால் நம்ப முடிகிறதா? நடந்தது என்ன? அதைத்தான் விளக்குகிறது இந்த பக்கம்.

மீசையை முறுக்கி கொண்டு நான் எதற்கும் அஞ்சாதவன் பயம் என்பதே எனக்கு இல்லை என்று வீரவசனம் பேசியவர்களும் மரண நேரத்தில் மரண கலையோடு மரித்துப்போனதை நாம் சரித்திரத்தில் பார்த்திருக்கிறோம். ஆனால் அர்ஜென்டினா நாட்டில் புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட அருட்சகோதரி ஒருவர் சிரித்தபடியே மரணமடைந்துள்ளார்.

அவருடைய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. தலைநகர் பியூனஸ் அயர்ஸை சேர்ந்தவர் அருட்சகோதரி சிசிலியா மரியா. 43 வயதான அவருக்கு புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அன்பும் கனிவும் நிறைந்த மரியா நோய் குறித்து கவலைப்படாமல் தொடர்ந்து பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் புற்றுநோயின் தீவிரத்தால் சரீரம் உருக்குலைந்து போனது. சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போதும் அனைவரிடமும் அன்பை பகிர்ந்து கொண்டார். மருத்துவமனையில் இருந்த போது இவர்கள் மூலம் மன ஆறுதல் பெற்றவர்கள் பலர். இந்நிலையில் தேவன் அழைக்கும் நேரம் வந்த போது இறைவன் மடியில் இளைப்பாற சென்றுவிட்டார்.

மரிக்கும் முன்பு “அனைவரும் அன்பை பகிர்ந்து கொள்ளுங்கள்” என்று சொல்லிக்கொண்டேயிருந்தார். நோயின் தீவிரம் கொஞ்சம் கூட பாதிக்காமல் புன்னகையோடு உயிரிழந்த அருட்சகோதரியின் உதடுகள் சிரித்தபடியே பல மணி நேரங்கள் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன் என்ற வசனத்தின் ஆதாரமாய் சிரித்த முகத்தோடு மரணத்தை எதிர்கொண்ட சகோதரியின் விசுவாசம் வியக்கத்தக்கதே..

ஆம் ஒவ்வொரு கிறிஸ்தவனின் நம்பிக்கை மரணம் என்பது முடிவு அல்ல, நித்திய வாழ்க்கைக்கான ஆரம்பம். மரணம் என்பது இழப்பு அல்ல, மரணம் என்பது ஆதாயம். மரண பயத்தினால் வாடும் அன்பரே.. தேவனை சார்ந்துகொள்ளுங்கள்.நாம் வாழும் வரை தேவன் நம்மோடு, நாம் மரிக்கும்போது நாம் அவரோடு..

புற்று நோயினால் உடல் நலிவடைந்தாலும் இந்த நம்பிக்கை தான் அருட்சகோதரியின் உள்ளத்துக்குள் ஆழமாய் வேரூன்றி இருந்தது.

2016 ஆம் ஆண்டு நடந்த இந்த சம்பவமும் எடுக்கப்பட்ட இந்த புகைப்படமும் இன்று வரை பலரது வாழ்வில் நம்பிக்கையை கொண்டு வருகிறது.

Post Tags: