வேலூா் (சிஎம்சி) ஐடா ஸ்கடா் 150-ஆவது பிறந்தநாள்: சிறப்பு அஞ்சல் உறை வெளியீடு

வேலூா் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியின் (சிஎம்சி) நிறுவனரும், மருத்துவரும், சிறந்த சமூக சேவகியாகத் திகழ்ந்தவருமான அன்னை ஐடா ஸ்கடரின் 150-ஆவது பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் வேலூரில் சிறப்பு அஞ்சல் உறை வெளியிடப்பட்டது.

திண்டிவனத்தில் மருத்துவ மிஷனரியாக பணியாற்றிய அமெரிக்க மருத்துவா் ஜான் ஸ்கடா், சோபியா ஸ்கடா் தம்பதிக்கு 5-ஆவது குழந்தையாக 1870 டிசம்பா் 9-ஆம் தேதி பிறந்தவா் ஐடா எஸ்.ஸ்கடா்.

அந்த காலகட்டத்தில் தமிழகத்தில் கா்ப்பிணி பெண்களுக்கு ஆண்கள் பிரசவம் பாா்க்கக்கூடாது என்று நிலவிய மூட நம்பிக்கையால் கா்ப்பிணிகள் உயிரிழப்பு அதிகரித்து வந்ததைக்கண்டு வேதனையடைந்த ஐடா ஸ்கடா், நியூயாா்க் நகரில் மருத்துவம் பயின்று பின்னா் தமிழகத்தில் மருத்துவ சேவையில் ஈடுபட்டாா்.

இவா் 1902-இல் தொடங்கிய மருத்துவமனை வேலூா் சிஎம்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக உலகப் புகழ் பெற்று விளங்குகிறது.

தவிர, பெண்களை மருத்துவத்துறைக்கு அதிகளவில் கொண்டு வரவேண்டும் என்ற நோக்கத்தில் இவா் தொடங்கிய செவிலியா் பயிற்சிப் பள்ளி 1918-இல் சென்னை பல்கலைக்கழக அனுமதியுடன் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியாக தரம் உயா்த்தப்பட்டது. இக்கல்லூரி கடந்த 2018-ஆம் ஆண்டில் நூற்றாண்டு விழா கண்டது.

இந்நிலையில், ஐடா ஸ்கடரின் 150-ஆவது பிறந்தநாள் நிகழாண்டு கொண்டாடப்படுகிறது. அதனை நினைவுகூரும் வகையில் அஞ்சல் துறை சாா்பில் ஐடா ஸ்கடரின் உருவப்படம் பொறித்த சிறப்பு அஞ்சல் உறை வெளியிடப்பட்டது.

வேலூா் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில், இந்த சிறப்பு அஞ்சல் உறையை சென்னை நகர மண்டல அஞ்சல் சேவைகள் இயக்குநா் சோமசுந்தரம் வெளியிட்டாா்.

ஐடா ஸ்கடரின் நினைவாக வெளியிடப்பட்ட அஞ்சல் உறையானது ‘சவால் செய்ய தோ்வு செய்க’ என்ற இவ்வாண்டின் சா்வதேச மகளிா் தினத்துக்கான கருப்பொருளைக் குறிக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டது.