
தமிழக அரசின் புதிய நல்வாழ்வு மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் அரசு ஊழியர்களுக்கு கட்டணமில்லா சிகிச்சையை உறுதிபடுத்திட தமிழக முதல்வர்க்கு உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் சகோ.ஜெபசிங் கோரிக்கை.
தமிழக அரசு ஆசிரியர், அரசு ஊழியர்கள், மற்றும் ஓய்வூதியர்களுக்கு புதிய நல்வாழ்வு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் பணி புரியும் அரசு ஊழியர், ஆசிரியர் மற்றும் ஒய்வூதியர்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்குவதற்காக அரசு ஆண்டிற்கு ஒரு அரசு ஊழியர்க்கு ரூபாய் 2100/ செலுத்தி வருகிறது. அதை மாதந்தோறும் ரூ 180/அவர்களது மாத ஊதியத்தில் பிடித்தம் செய்து வருகிறது.
2016 முதல் 2020 முடிய 4 ஆண்டுகளுக்கு பல்வேறு நோய்களுக்கு அறுவை சிகிச்சை செய்வோர்க்கு ரூ 4 லட்சம் வரை எனவும் சில குறிப்பிட்ட அறுவை சிகிச்சைகளுக்கு 7 லட்சத்து 50 ஆயிரம் எனவும் இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் எனவும் இத்திட்டத்தில் கரோனா சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு நோய்கள் இணைக்கப்பட்டு தமிழக அரசு இந்த சிறப்பான உன்னதமான திட்டத்தை வழங்கி ஆணையிட்டது.
இதன் அடிப்படையில் தமிழக அரசின் மேற்கண்ட புதிய நல் வாழ்வு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தினை செயல்படுத்தும் ஒப்பந்தத்தினை யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனம் பெற்றுள்ளது. இந்நிறுவனம் துணை ஒப்பந்த அடிப்படையில் எம்.டி இந்தியா காப்பீட்டு நிறுவனத்திற்கு துணை ஒப்பந்தம் வழங்கியுள்ளது.
இத்திட்டத்தை செயல்படுத்த மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்பட்டுள்ளனர். தமிழக அரசின் சார்பில் ஒரு இணை இயக்குநரும் நியமிக்கப்பட்டுள்ளார்
இத்திட்டத்தின் கீழ் அரசு ஊழியர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் போது தமிழக அரசின் ஆணைப்படி சிகிச்சைக்கான முழுக் கட்டணத்தையும் வழங்குவதில்லை. காப்பீட்டு நிறுவனம் சிகிச்சைக்கான மொத்த தொகையில் 25% முதல் 50% . வரை மட்டுமே வழங்குகிறது. சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை காப்பீட்டு நிறுவனம் அளித்த தொகை போக மீதிம் பணத்தை நோயாளிகளை கட்ட சொல்வது மற்றும் கரோனா நோய்க்கு காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்க மறுப்பது போன்ற செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தமிழக அரசின் அரசு ஊழியர்களுக்கு என ஏற்படுத்தப்பட்ட உன்னதமான திட்டமான புதிய நல்வாழ்வு மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க மறுப்பது அவமதிக்கும் செயலாக உள்ளது.
தமிழக அரசின் இந்த சிறந்த திட்டத்தின்படி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் ஆகியோர் கட்டணமில்லா சிகிச்சையை உறுதிப்படுத்திட மக்கள் நலம் காக்கும் தங்கள் அரசு உரிய நடவடிக்கை எடுக்க உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் சார்பில் கேட்டுக்கொள்கிறோம் என தலைமை செய்தி தொடர்பாளர் சகோ.ஜெபசிங் அறிக்கையில் தெரிவித்துள்ளார்