
“மெய்யாகவே அவர் ஜனங்களைச் சிநேகிக்கிறார்; அவருடைய பரிசுத்தவான்கள் எல்லாரும் உம்முடைய கையில் இருக்கிறார்கள்; அவர்கள் உம்முடைய பாதத்தில் விழுந்து, உம்முடைய வார்த்தைகளினால் போதனையடைவார்கள்’ (உபா. 33:3).
வேதத்தின் ஒவ்வொரு பக்கமும் கூறும் நற்செய்தி என்ன? “தேவன் ஜனங்களை நேசிக்கிறார்” என்பதுதான். ‘மெய்யாகவே அவர் ஜனங்களை நேசிக்கிறார்’ என்று மோசே சொல்லுகிறார்
மோசே, முதல் நாற்பது ஆண்டுகளை பார்வோனுடைய அரண்மனையிலே செலவழித்தார். பிறந்ததுமே நாணற்பெட்டியிலே பாதுகாக்கப்பட்டு, அற்புதமாக பார்வோனுடைய அரண்மனைக்கு தன்னைக் கொண்டு சென்றதே கர்த்தருடைய அன்பு என்பதை உணர்ந்தார். அடுத்த நாற்பது ஆண்டுகள், தன் மாமனாராகிய எத்திரோவின் வீட்டில் இருந்தது கர்த்தர் தனக்கு அன்புடன் பயிற்சி கொடுக்கவே என்பதை உணர்ந்தார். மேலும், அடுத்த நாற்பது ஆண்டுகள் கர்த்தருடைய அன்பையும், சிநேகிதத்தையும் அளவில்லாமல் உணர்ந்தார்.
கர்த்தர் தம்முடைய ஜனங்களை சிநேகித்து, பார்வோனுடைய அடிமைத்தனத்திலிருந்து விடுவித்ததைக் கண்டு மோசே பரவசமடைந்தார். ஜனங்கள் மீது அன்பு வைத்து, தேவ தூதர்களின் உணவாகிய வானத்து மன்னாவைக் கொடுத்து போஷித்தார் என்பதையெல்லாம் அவர் சிந்தித்துப் பார்த்தார். ஆகவே தன்னுடைய நூற்று இருபதாவது வயதில் ஜனங்களை எல்லாம் தன்னன்டை கூட்டிவந்து அந்த அன்பின் செய்தியைக் கூறும்படி தீர்மானித்தார்.
அந்த செய்தி “மெய்யாகவே அவர் ஜனங்களை சிநேகிக்கிறார்” என்பதாகும். அவரே அன்பின் ஆரம்பம். அவரே அன்பின் நிறைவானவர். அன்புக்கு அல்பாவும் அவர்தான், ஒமோகாவும் அவர்தான். நான் இருக்கிறவராகவே இருக்கிறேன் என்று சொன்னவர் (யாத். 3:14) அன்பில் மாறாதவராயிருக்கிறார்.
ஒருவேளை உங்களுடைய உள்ளம், ஒரு உத்தமமான சிநேகிதரை நாடக்கூடும். உங்களுடைய உள்ளம் அன்புக்காக ஏங்கக்கூடும். வாழ்க்கையிலே பலவிதமான குழப்பங்கள், பாரங்கள்,நெருக்கங்களினாலே யாரிடத்தில் போவேன், யார் எனக்கு அன்பு காண்பிப்பார்கள் என்று உள்ளம் ஏங்கலாம். இன்று இயேசு உங்களை அன்போடுகூட அழைக்கிறார். இயேசு சொன்னார், “அநாதி சிநேகத்தால் உன்னைச் சிநேகித்தேன்; ஆதலால் காருணியத்தால் உன்னை இழுத்துக்கொள்ளுகிறேன்” (எரே. 31:3).
நம்முடைய தேவன் அன்புள்ளவர். அவர் அன்பாகவே இருக்கிறார் என்று வேதம் சொல்லுகிறது (1 யோவான் 4:8). ஆண்டவர் உங்களை அளவற்ற அன்பினால் சிநேகிக்கிறார். அந்த சிநேகம்தானே உங்களுக்காக தியாகபலியாக வார்க்கப்பட்டது. அவரது சரீரம் கல்வாரியில் கிழிக்கப்பட்டது. அந்த சிநேகம்தானே இரத்தத்தின் பெருந்துளிகளாய் கீழே விழுந்தது. அந்த சிநேகிதம்தானே அவருடைய விலாவிலிருந்து திறக்கப்பட்ட ஊற்றாய் மாறியது. ஆ! அந்த சிநேகிதத்தின் உச்சிதத்திற்காக அவரைத் துதிப்பீர்களாக!
நினைவிற்கு:- “தம்முடைய ஒரே பேறான குமாரானாலே நாம் பிழைக்கும்படிக்குத் தேவன் அவரை இவ்வுலகத்திலே அனுப்பினதினால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது” (1 யோவான் 4:9).