கொரோனா காரணமாக ஸ்டார்கள்- கிறிஸ்துமஸ் மரங்கள் விற்பனை 60 சதவீதம் சரிவு

கொரோனா காரணமாக ஸ்டார்கள், கிறிஸ்துமஸ் மரங்கள் விற்பனை 60 சதவீதம் வரையில் சரிந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
கோவை:
ஏசு கிறிஸ்து பூமியில் அவதரித்த தினத்தை கிறிஸ்துமஸ் பண்டிகையாக கிறிஸ்தவர்கள் கொண்டாடி வருகின்றனர். கிறிஸ்துமஸ் பண்டிகையை வரவேற்கும் விதமாக வீடுகளில் கிறிஸ்துமஸ் மரங்களை வைத்து மின் விளக்குகளால் அலங்கரிப்படுவதுடன், வீட்டின் முகப்புகளில் பல்வேறு வண்ணங்களில் ஸ்டார்களை தொங்கவிடுவார்கள்.
இதை தவிர ஏசு கிறிஸ்து மாட்டுத்தொழுவத்தில் பிறந்ததை குறிப்பிடும் விதமாக வீடுகளில் கிறிஸ்துமஸ் குடில்கள் அமைத்து, குழந்தை பொம்மைகளை வைத்து கிறிஸ்துமஸ் பண்டிகையை வரவேற்கின்றனர். இதனால் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு 2 வாரங்களுக்கு முன்பே கிறிஸ்துமஸ் குடில்கள், மரங்கள், ஸ்டார்கள், பொம்மைகளின் விற்பனை அதிகரிக்கும். இந்த ஆண்டில் பல்வேறு வண்ணங்களிலும், விலைகளிலும் ஸ்டார்கள், கிறிஸ்துமஸ் மரங்கள், குடில்கள், பொம்மைகள், அலங்கார தோரணங்கள் உள்ளிட்டவை விற்பனைக்கு வந்துள்ளன. கிறிஸ்துமஸ் மரங்களில் பைன் ட்ரீ, ஸ்நொ ட்ரீ, தைவான் ட்ரீ, மின் விளக்கு பொருத்தப்பட்ட மரங்கள் என பல்வேறு விதங்களில் 2 அடி முதல் 10 அடி வரையிலான மரங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. அதேபோல ஸ்டார்கள், பொம்மைகளும் பல்வேறு விதங்களில் வைக்கப்பட்டுள்ளன. ஸ்டார்கள் ரூ. 100 முதல் ரூ. 2 ஆயிரம் வரையிலும், கிறிஸ்துமஸ் மரங்கள் ரூ. 150 முதல் ரூ. 3 ஆயிரம் வரையிலும் விற்கப்படுகிறது.
ஆனால் கொரோனா பாதிப்பால் எதிர்பார்த்த விற்பனை இல்லை என வியாபாரிகள் கவலை தெரிவித்தனர். கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு 2 வாரங்களுக்கு முன்பே ஸ்டார்ஸ், கிறிஸ்துமஸ் மரங்கள், குடில்கள், மணிகள், அலங்காரப் பொருள்களின் விற்பனை களைகட்டும். ஆனால் தற்போது பண்டிகைக்கு ஒருவாரமே இருக்கும் நிலையில் பெரிய அளவில் விற்பனை இல்லை. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டில் 60 சதவீதம் வரையில் விற்பனை சரிந்துள்ளது. வீடுகளுக்கு மட்டுமே வாங்கிச் செல்கின்றனர். நிறுவனங்கள், கடைகள் போன்ற மொத்த கொள்முதல் இந்த ஆண்டு முற்றிலும் சரிந்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
Thanks: Malaimalar (டிசம்பர் 18, 2020)