• Thursday 19 September, 2024 04:38 PM
  • Advertize
  • Aarudhal FM

பாலுணர்வும், பரிசுத்த வாழ்க்கையும்!

பாலுணர்வும், பரிசுத்த வாழ்க்கையும்!பாலுணர்வு இறைவனால் மனிதனுக்கு தரப்பட்ட அவசியமான ஒரு வரப்பிரசாதம். அது தூய்மையான ஒரு உணர்ச்சி! ஆனால் இறைவன் அமைத்த திருமண விதிகளுக்கு விலகிப்போய் அதனை உபயோகித்தால் அது அசுத்தத்திற்கு வழி வகுக்கும்.பாலுணர்வு ஓடுகின்ற வெள்ளம் போன்றது. அதனை அடக்கி விட நினைப்பது ஆபத்து. ஆனால் கிறிஸ்து அமைத்த வழிகளை அறிந்து அதனைக் கரைகட்டி ஒழுங்குபடுத்திவிடலாம்.பாலுணர்வு சிலருக்கு இயற்கையாகவே வேகமாக இருக்கும். அதற்காக அவர்கள் மோசமானவர்கள் அல்ல! சிலருக்கு இயற்கையாகவே அது குறைவாய் இருக்கும். அதற்காக அவர்கள் மிக நல்லவர்கள் அல்ல.சிலருக்கு ஐம்பதுகளில் பாலுணர்வின் வேகம் தணிந்து விடும். சிலருக்கு அறுபது எழுபது தாண்டினாலும் வேகம் குறைவது இல்லை அது இயற்கை அது பாவமல்ல.இயற்கையாகவே ஆண்களை எளிதில் கவரும் ஆற்றல் பெற்றவர்கள் பெண்கள், பெண்மையினால் எளிதில் இழுக்கப்படும் பலவீனமுடையவர்கள் ஆண்கள்.கிறிஸ்துவோடு நெருங்கி வாழ்வது, ஜெபங்கள், தியானம் இவைகள் மூலம் பல ஆகாத சுபாவங்கள் நம்மை விட்டு அகலும். ஆனாலும் பாலுணர்வு வேகம் குறைவது இல்லை. என்றால் அது பசி, தாகம் போன்று அவசியமான ஒன்று. அகற்றுவதற்காக தேவன் அதை நமக்குத் தரவில்லை. ஆனால், அது நம்மை ஆட்டிப்படைக்கும் எஜமானாக மாறி விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.ஒரு ஆடவனை பெண் பார்க்கும்போதும், ஒரு பெண்ணை ஆடவன் பார்க்கும் போதும் தானாகவே சில வேளை காம உணர்வு ஏற்படுவது இயற்கை. அது பாவமல்ல! அந்த இழுக்கும் சக்திகளும் ஈர்ப்பு விசைகளும் செயல்படுவதால் தான் திருமணங்கள் நடைபெறுகின்றன! ஆனால் அந்த உணர்வுகளுக்கு ஆட்பட்டு கற்பனையிலும் விலகிய சிந்தனைகளில் மூழ்கிக் கறைபடாமலிருக்க உஷாராக இருக்க வேண்டும்.விசுவாசிகளையும், ஊழியர்களையும் நெடுங்காலம் தொந்தரவு செய்யும் ஒரு சக்தி பாலுணர்வுக்கு உண்டு! பாலுணர்வின் விசைகளுக்கு நடுவில் பக்குவமாக வாழப்பழகாவிட்டால் விசுவாச வீழ்ச்சிகள் எந்த வேலையிலும் நடக்கும் அபாயம் உண்டு.பல நிலைகளில் பாவத்தின் வல்லமையை முறியடித்த வெற்றி மிக்க ஊழியர்கள் பலரை பிசாசானவன் பாலுணர்வின் வழியாக தந்திரமாக வீழ்த்தியிருக்கிறான்.பிற பாலினத்தாரோடு நெருங்கிப் பழக விரும்புதல், அதுபோன்ற நிலைகளில் தன்னுடைய கட்டுப்பாட்டின் சக்தியை அதிகமாக நம்புதல், போன்ற காரியங்களால் பாலுணர்வு பாவங்களால் வீழ்ந்துவிடும் வாய்ப்புகள் உண்டு.தங்கள் உடலின் பெரும் பகுதியை உலகத்திற்குக் காண்பிக்க விரும்புகின்ற பெண்கள், கவர்ச்சியாக காணப்பட விரும்பும் பெண்கள் ஆகியோர் பரிசுத்தப் பாதையில் செல்கின்றவர்களுக்கு பெருத்த இடறல்களாக இருப்பார்கள்.பிற பாலினரோடு பழகுதல் தவறல்ல. ஆனால் எளிதில் வித்தியாசமான உணர்வுகளால் உந்தப்பட்டு, தவறான பாதைகளில் சென்றுவிடும் பலவீனம் தனக்கு உண்டு என்ற விழிப்புணர்வோடு பழக வேண்டும்.விசுவாசிகளும், ஊழியர்களும் தங்களுக்கென்று வலுவான வரம்புகளை உருவாக்கி அதற்குள் ஜாக்கிரதையாக நடக்கத் தவறினால் தப்புவது கடினம், தப்பினாலும் தீயிலிருந்து உயிர் தப்பியது போலவே இருக்கும்.பிற பாலினத்தவரோடு மனம் விட்டு ஆழமாகப் பேச விரும்புதல், அல்லது மற்றவரின் மனதை அறிய விரும்புதல் போன்றவற்றை முதலிலேயே தவிர்க்கக் கவனமாயிருக்க வேண்டும். தங்களை அறியாமலே ஒருவிதமான உணர்வு இருவருக்கோ அல்லது ஒருவருக்கு மட்டுமோ தோன்ற ஆரம்பிக்கும். அதன் விளைவாக ஒருவருக்கொருவர் மிக முக்கியமானவர்களாக மாற நேரிடும். இறுதியில் பிரிக்கமுடியாத ஒரு பிணைப்பு ஏற்பட்டுவிடும். விபரீத விளைவுகள் அதனால் வரும்.60 வயது கடந்து விட்ட நிலையில் பாலஸ்தீனிய யாசர் அரபாத் தன்னுடைய 23 வயது பெண் உதவியாளரை மணந்து கொண்டார். 30க்கு மேற்பட்ட பேரப்பிள்ளைகளை கண்ட பின்னர் காலஞ்சென்ற முன்னாள் முதல்வர் ராமராவ் தன்னிலும் 32 வயது குறைந்த திருமணமான ஒரு பெண்ணை மறுமணம் செய்து கொண்டார் காரணம் என்ன? நெருக்கங்கள் பெருகும்போது விட்டுப் பிரிய விரும்பாத ஒரு மனப்பிரச்சனை ஏற்படுவது இயற்கை. எனவே ஆரம்பத்திலிருந்தே பிற பாலினரோடு உள்ள பழக்கங்களை வரம்புகளுக்குள் நிறுத்த வேண்டும்.பிறபாலினத்தவரோடு ஏற்பட்ட பழக்கம் பிரிந்து போக முடியாத நிலைக்கு வரும்போது தன் செயலை நியாயப்படுத்தும் உணர்வு அதிகமாகும். அதன் பின்பு அவர்களை திருப்புவது கடினம். எனவே விசுவாசிகளும் ஊழியர்களும் அந்த நிலைக்குப் போகும் முன்பே தங்களைச் சரிசெய்து கொள்ளவேண்டும்.தனியாக பெண்கள் இருக்கும்போது, நெடுநேரம் பேசுதல், ஜெபித்தல், வேடிக்கை பேசுதல் போன்றவற்றை ஊழியர்கள் தவிர்க்க வேண்டும். அது போன்ற நேரங்களில் வீடு சந்திப்பைத் தவிர்க்க வேண்டும். வீணாகப் போய் ஏன் சாத்தானின் கண்ணிகளில் விழவேண்டும்.திருமணமான, திருமணமாகாத பெண்களைத் தனியாக ஊழியர்கள் எந்த ஊழியங்களுக்கும் அழைத்துச் செல்லக் கூடாது.ஒரு ஊழியர் அல்லது விசுவாசி பிறபாலினத்தவரோடு உள்ள நட்பு பிறர் பார்வையில் தவறாகத் தோன்றினால் காலதாமதமின்றி தேவையான இடைவெளியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.ஊழியரானாலும் விசுவாசியானலும் கர்த்தருக்குரிய காரியங்களில் ஈடுபடத் தங்களை எப்போதும் சுறுசுறுப்பாக வைத்திருக்க வேண்டும்.தேவனுடைய வார்த்தைகளால் இருதயத்தை நிரப்புதல், தொய்வில்லா ஜெபவாழ்க்கை, தேவப்பிரசன்னத்தில் வாழ்தல் ஆகிய அனுபவங்களால், பாலுணர்வுப் பாவங்களுக்குள் விழுந்து விடாதபடி பார்த்துக் கொள்ளலாம். ஆமென்!கர்த்தராகிய இயேசுவினாலே நாங்கள் உங்களுக்குக் கொடுத்த கட்டளைகளை அறிந்திருக்கிறீர்களே.நீங்கள் பரிசுத்தமுள்ளவர்களாகவேண்டுமென்பதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது. அந்தப்படி, நீங்கள் வேசிமார்க்கத்துக்கு விலகியிருந்து,தேவனை அறியாத அஞ்ஞானிகளைப்போல மோக இச்சைக்குட்படாமல்,உங்களில் அவனவன் தன்தன் சரீரபாண்டத்தைப் பரிசுத்தமாயும் கனமாயும் ஆண்டுகொள்ளும்படி அறிந்து:இந்த விஷயத்தில் ஒருவனும் மீறாமலும் தன் சகோதரனை வஞ்சியாமலும் இருக்கவேண்டும்; முன்னமே நாங்கள் உங்களுக்குச் சொல்லி, சாட்சியாக எச்சரித்தபடியே இப்படிப்பட்ட விஷயங்களெல்லாவற்றையுங்குறித்துக் கர்த்தர் நீதியைச் சரிக்கட்டுகிறவராயிருக்கிறார்.தேவன் நம்மை அசுத்தத்திற்கல்ல பரிசுத்தத்திற்கே அழைத்திருக்கிறார்.ஆகையால் அசட்டைபண்ணுகிறவன் மனுஷரை அல்ல, தமது பரிசுத்த ஆவியை நமக்குத் தந்தருளின தேவனையே அசட்டைபண்ணுகிறான்.(#I_தெசலோனிக்கேயர் 4:2-8) ஆமென்!! அல்லேலூயா!!!

கிறிஸ்துவின் பணியில்:- ஜாஷ்வா ( Joshua )Nanenallameyppar