• Saturday 19 April, 2025 02:34 PM
  • Advertize
  • Aarudhal FM

வேலூர் அரசு மருத்துவமனையில் கட்டை பையில் கடத்தப்பட்ட பிஞ்சு குழந்தை

Aug 1, 2024, 3:01 PM

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த அரவட்லா பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 25). கூலித் தொழிலாளியான இவர் தனது மனைவி சின்னியை பிரசவத்திற்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் கடந்த 27ம் தேதி அனுமதித்துள்ளார். அனுமதிக்கப்பட்ட தினமே இரவில் சின்னிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அடுத்த நாள் பிரசவ வார்டுக்கு தாயும், சேயும் மாற்றப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், காலை 9 மணி அளவில் சின்னியின் கணவர் உணவு வாங்கி கொடுத்துவிட்டு வார்டுக்கு வெளியே சென்ற நிலையில் சின்னி சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது குழந்தை அழுததாகச் சொல்லப்படுகிறது. அப்போது அங்கு இருந்த அடையாளம் தெரியாத பெண் ஒருவர் சாப்பிட்டு முடிக்கும் வரை குழந்தையை தன்னிடம் கொடுக்குமாறும், தான் பார்த்துக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனை நம்பி சின்னியும் தனது குழந்தையை அப்பெண்ணிடம் ஒப்படைத்துள்ளார். பின்னர் அப்பெண் பிஞ்சு குழந்தையுடன் திடீரென மாயமானார். இது தொடர்பாக கோவிந்தன், சின்னி தம்பதியர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், சின்னி அடையாளம் காட்டிய பெண், கையில் கட்டை பையில் குழந்தையை வைத்து கடத்திச் சென்றது தெரிய வந்துள்ளது. இது மேலும் கடத்திச் சென்ற பெண்ணை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Thanks to asianet news tamil

2 சவரன் நகைக்காக மூதாட்டியின் உடலை துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசிய தம்பதி

Jul 28, 2024, 5:24 PM

சென்னை எம்ஜிஆர் நகர் மயிலை சிவமூர்த்தி தெருவைச் சேர்ந்தவர் விஜயா (வயது 78). இவர் அருகில் உள்ள உணவகம் ஒன்றில் வேலை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனிடையே கடந்த 17ம் தேதி வழக்கம் போல் வீட்டில் இருந்து வேலைக்கு சென்ற மூதாட்டி மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இதனைத் தொடர்ந்து அவரது மகள் லோகநாயகி அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தும் விஜயா குறிந்து எந்தவித தகவலும் கிடைக்காத நிலையில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த எம்ஜிஆர் நகர் காவல் துறையினர் நடத்திய விசாரணையில் விஜயா குறித்து விசாரிக்க அவரது பக்கத்து வீட்டில் வசித்து வந்த பார்த்திபன் என்பரை நேரில் வருமாறு காவல் துறையினர் கடந்த 23ம் தேதி அழைப்பு விடுத்துள்ளனர். ஆனால் பார்த்திபன் தனது மனைவி சங்கீதாவுடன் திடீரென மாயமானார்.

இதனால் சந்தேகமடைந்த காவல் துறையினர் பார்த்திபனை தீவிரமாக தேடி வந்தனர். இறுதியில் விருதுநகரில் பதுங்கி இருந்த இருவரையும் கைது செய்த காவல் துறையினர் விஜயா குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். அப்போது தம்பதி இருவரும் சேர்ந்து மூதாட்டியை கொலை செய்ததை ஒப்புக் கொண்டனர். மேலும் அவர் அணிந்திருந்த 2 சவரன் நகைக்காக மூதாட்டியை கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி மூட்டை கட்டி அடையாற்றில் வீசியதும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

thanks to asainet news tamil

சிகிச்சைக்கு வந்த சிறுமியிடம் சில்மிஷம்; பல் மருத்துவர் போக்சோவில் கைது – புதுக்கோட்டையில் பரபரப்பு

Jul 29, 2024, 11:49 PM

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் அப்துல் மஜித் (வயது 37), பல் மரு்துவரான இவரிடம் சிகிச்சை பெறுவதற்காக திருவப்பூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி நேற்று மாலை சென்றுள்ளார். அங்கு சிறுமிக்கு சிகிச்சை அளிக்கத் தொடங்கிய நிலையில், சிறுமியிடம் மருத்துவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். முன்னதாக சிறுமியின் மீது சபலம் ஏற்பட்டு சிறுமியின் பெற்றோரிடம் குறிப்பிட்ட மருந்தை எழுதி கொடுத்து அதனை வெளியில் வாங்கி வருமாறு அனுப்பி உள்ளார்.

மருத்துவரின் பரிந்துரைப்படி குறிப்பிட்ட மருந்தை வாங்குவதற்காக சிறுமியின் பெற்றோர் சிறுமியை மருத்துவமனையிலேயே விட்டுவிட்டு வெளியே சென்றுள்ளனர். இந்த நேரத்தை பயன்படுத்திக் கொண்ட மருத்துவர் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி மருத்துவரிடம் இருந்து தப்பி வெளியே ஓடி வந்துள்ளார்.

அதே நேரத்தில் மருந்து வாங்கச் சென்ற சிறுமியின் பெற்றோரும் மருத்துவமனைக்கு வரவே சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது மருத்துவர் பாலியல் தொல்லை அளித்ததை பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறி மருத்துவர் அப்துல் மஜீத்தை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

thanks to asianet news tamil