• Monday 10 March, 2025 12:34 PM
  • Advertize
  • Aarudhal FM

கடன் தொல்லையால் பரிதாபம் ஜூஸில் விஷம் கலந்து குடித்து போதகர், தாய் தற்கொலை

கன்னியாகுமரி: கடன் தொல்லையால் போதகர், தனது தாயுடன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். குமரி மாவட்டம் தக்கலை அருகே பரைக்கோடு கோவில்விளையை சேர்ந்தவர் தங்கராஜ் (60). இவரது மனைவி அமுதலதா (50). இவர்களுக்கு சுமாராணி (25) என்ற மகளும், மெல்பின் ராஜ் (23) என்ற மகனும் உள்ளனர்.

இதில் மெல்பின்ராஜ் முண்டவிளையில் உள்ள கிறிஸ்தவ சபையில் போதகராக இருந்தார். இவருக்கு திருமணமாகவில்லை. சுமாராணிக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி கணவருடன், தக்கலை அருகே வசித்து வருகிறார்.சகோதரி திருமணத்துக்காக மெல்பின் ராஜ், வங்கியில் கடன் வாங்கி இருந்தார். பின்னர் வங்கி கடன் வாங்கி வீடு கட்டினார்.

இதனால் ரூ.20 லட்சம் வரை கடன் தொகை அதிகரித்துள்ளது. கடனை அடைக்க பெரும் சிரமப்பட்டுள்ளார். வங்கியில் இருந்து நோட்டீஸ் வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மெல்பின் ராஜ் மனம் உடைந்தார். பெற்றோரிடம் ஆலோசித்தார். ஆசையாக கட்டிய வீட்டை விற்று கடனை அடைக்கவும் மனம் இல்லாமல் தவித்துள்ளனர்.இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அவர் ஜூஸில் விஷம் கலந்து தந்தை தங்கராஜிடம் கொடுத்துள்ளார். விஷம் கலந்திருப்பது தெரியாமல் அவர் பனி அதிகமாக இருப்பதால் காலையில் குடிக்கிறேன் என கூறி விட்டார். பின்னர் தாய்க்கு கொடுத்து தானும் குடித்துவிட்டு உறங்க சென்றார். மற்றாரு அறையில் படுத்திருந்த தங்கராஜ் நேற்று அதிகாலை தண்ணீர் குடிக்க எழுந்து வந்தபோது, மனைவியும் மகனும் வாயில் நுரை தள்ளியபடி கிடந்ததை பார்த்து கதறினார்.சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து இருவரையும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனையில் இருவரும் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து தக்கலை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். இதில் ஜூஸில் விஷம் கலந்து குடித்தது தெரிய வந்தது. ஜூஸில் விஷம் கலந்து இருப்பது தெரிந்திருந்தால் நானும் அவர்களுடன் குடித்து இறந்திருப்பனே என தங்கராஜ் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது

நமக்காக கர்த்தர் இருக்கிறார்

1. தேற்றுவதற்கு கர்த்தர் இருக்கிறார்

பிரசங்கி 4:1; புலம்பல் 1:2,9,17,21
ஒடுக்கப்பட்டவர்களின் கண்ணீரைக் கண்டேன், அவர்களைத் தேற்றுவாரில்லை.
ஏசாயா 66:13
தாய் தேற்றுவதுபோல் நான் உங்களைத் தேற்றுவேன்.
சங்கீதம் 94:19 உம்முடைய ஆறுதல்கள் என் ஆத்துமாவைத் தேற்றுகிறது

2. விசாரிப்பதற்கு கர்த்தர் இருக்கிறார்

சங்கீதம் 142:4; எசேக்கியேல் 34:6
விசாரிப்பார் ஒருவருமில்லை
1பேதுரு 5:7
அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலை களையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள். சங்கீதம் 68:5

3. பரிதபிப்பதற்கு கர்த்தர் இருக்கிறார்

சங்கீதம் 69:20
பரிதபிக்கிறவன் ஒருவனும் இல்லை
சங்கீதம் 135:14; உபாகமம் 32:26
ஊழியக்காரர்மேல் பரிதாபப்படுவார். மத்தேயு 15:32
இயேசு: ஜனங்களுக்காகப் பரிதபிக்கிறேன் (5 அப்பம் 2 மீன்)

4. நன்மைசெய்வதற்கு கர்த்தர் இருக்கிறார்

சங்கீதம் 14:3; சங்கீதம் 53:1; ரோமர் 3:12
நன்மை செய்கிறவன் ஒருவனும் இல்லை, ஒருவனாகிலும் இல்லை.
அப்போஸ்தலர் 10:38
நன்மைசெய்கிறவராய் சுற்றித்திரிந்தார்
லூக்கா 6:35
அவர் நன்றியறியாதவர்களுக்கும் நன்மை செய்கிறாரே

5. பரிந்துபேசுவதற்கு கர்த்தர் இருக்கிறார்

எசேக்கியேல் 22:30
தேசத்தை அழிக்காதபடிக்குத் திறப்பிலே நிற்கவும்… ஒரு மனுஷனைத் தேடினேன், ஒருவனையும் காணேன்.
1யோவான் 2:1
இயேசுகிறிஸ்து நமக்காக பிதாவினிடத்தில் பரிந்துபேசு…
லூக்கா 23:34
இயேசு: பிதாவே, இவர்களுக்கு மன்னியும்.

6. துணை செய்வதற்கு கர்த்தர் இருக்கிறார்

ஏசாயா 63:5
துணை செய்வார் ஒருவனும் இல்லை;
ஏசாயா 50:7,9
கர்த்தராகிய ஆண்டவர் எனக்குத் துணைசெய்கிறார்
சங்கீதம் 46:1
ஆபத்துகாலத்தில் அனுகூலமான துணையுமானவர்
சங்கீதம் 70:5; 115:10-11; 2தீமோத்தேயு 4:17; ஏசாயா 41:13-14

7. விண்ணப்பம்பண்ணுவதற்கு கர்த்தர் இருக்கிறார்

ஏசாயா 59:16
ஒருவனும் விண்ணப்பம்பண்ணுகிறவன் இல்லை
ரோமர் 8:34
நமக்காக வேண்டுதல் செய்கிறவரும் அவரே
யோவான் 17:1,9,15,20இயேசுகிறிஸ்து நமக்காக விண்ணப்பம்பண்ணுகிறார்

ஆவியினாலே

நீங்கள் அவருடைய ஆவியினாலே உள்ளான மனுஷனில் வல்லமையாய்ப் பலப்படவும் எபே 3: 16

1 . ஆவியினாலே ஆராதனை செய்யுங்கள். பிலி 3 : 3, எபே 5 : 18 — 21, 6: 18, 1 கொரி 14 : 14 – 16, யூதா 1 : 20

2 . ஆவியினாலே சத்தியத்திற்கு கீழ்படியுங்கள் 1 பேது 1 : 22

3 . ஆவியினாலே சரீரத்தின் கிரியை அழியுங்கள் ரோமர் 8 : 13

4 . ஆவியினாலே உள்ளான மனுஷரில் பலப்படுங்கள் எபே 3 : 16.

5 . ஆவியினாலே அனலாயிருங்கள் ரோம 12 : 11, அப் 18 : 5

6 . ஆவியினாலே நிருணயம் பண்ணுங்கள் அப் 19:21

7 . ஆவியினாலே நடத்தப்படுங்கள் ரோம 8 : 14

8 . ஆவியினாலே காத்துகொள்ளுங்கள். 2 தீமோ 1 : 14, 1 யோவா 3 : 24

9 . ஆவியினால் வைராக்கியமாயிருங்கள். அப் 17 : 16 , 18 : 5

10 ஆவியினாலே பிரசங்கியுங்கள் 1 பேது 1 : 12, 2 பேது 1 : 21, அப். 4 : 1 , 31, 6 : 5, அப் 13 : 9

மது பாட்டில்களில் எச்சரிக்கை வாசகங்கள், படங்கள் அச்சிட வேண்டும்- அன்புமணி வலியுறுத்தல்

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் மது அருந்துவதால் குறைந்தது 7 வகையான புற்றுநோய்கள் ஏற்படும் ஆபத்து இருப்பதாகவும், இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மதுப்புட்டிகள் மீது எச்சரிக்கை வாசகங்கள் அச்சிடப்பட வேண்டும் என்றும் அமெரிக்க அரசுக்கு அந்நாட்டின் தலைமை மருத்துவர் விவேக் மூர்த்தி அலுவலகம் பரிந்துரைத்துள்ளது. இந்த பரிந்துரை அமெரிக்காவில் விரைவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இது மிகவும் வரவேற்கத்தக்க நடவடிக்கை ஆகும்.

தமிழ்நாட்டில் இதே கருத்தை கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. ”ஆல்கஹால் மற்றும் சுகாதார நிலைமை குறித்த உலக அறிக்கை -2014” என்ற தலைப்பில் பத்தாண்டுகளுக்கு முன் உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கையில் மது குடிப்பதால் 60 வகை நோய்கள் தாக்கும் என இதுவரைக் கருதப்பட்டு வந்த நிலையில், இப்போது 200 வகை நோய்கள் தாக்கும் என்று எச்சரிக்கப்பட்டிருந்தது. மது அருந்துபவர்களுக்கு கல்லீரல் இழைநார் வளர்ச்சி (liver cirrhosis), சிலவகை புற்றுநோய்கள் ஏற்படுவதுடன், நிமோனியா, காசநோய் போன்றவையும் எளிதில் தொற்றுவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அப்போதிலிருந்தே மதுவின் இந்த தீமைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று பா.ம.க. தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது. ஆனால், தமிழகத்தை ஆண்ட அரசுகள் இந்த யோசனையை கண்டுகொள்ளவில்லை.

அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் மதுவுடன் ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் விற்பனை செய்யப்படும் மது வகைகள் பல மடங்கு தரம் குறைந்தவை. மது குடிக்கும் அளவும் தமிழ்நாட்டில் மிகவும் அதிகம். இவற்றை வைத்துப்பார்க்கும்போது அமெரிக்காவில் மது அருந்துபவர்களுக்கு 10 ஆண்டுகளில் புற்றுநோய் ஏற்படும் என்றால், தமிழ்நாட்டில் மது அருந்துபவர்களுக்கு 2 ஆண்டுகளில் புற்றுநோய் ஏற்படும் ஆபத்து உள்ளது. அதனால் தான் தமிழ்நாட்டில் இத்தகைய விழிப்புணர்வு வாசகங்கள் மதுப்புட்டியில் அச்சிடப்பட வேண்டும் என்று பாமக வலியுறுத்துகிறது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக நான் பதவி வகித்தபோது தான் புகையிலைப் பொருள்கள் மீது எச்சரிக்கை வாசகங்களை அச்சிடும் முறை கடுமையாக எதிர்ப்புகளையும் மீறி நடைமுறைப்படுத்தப்பட்டது. அதன் பயனாக புகையிலைப் பழக்கம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு இருப்பதுடன் புகையிலைப் பழக்கமும் கணிசமாக குறைந்துள்ளது. இதேபோல், மதுப்பழக்கத்தின் தீமைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்.

உலக அளவில் இப்போது தென்கொரியாவில் மட்டும் தான் மதுப்புட்டிகள் மீது எச்சரிக்கை வாசகங்கள் அச்சிடும் முறை நடைமுறையில் உள்ளது. அயர்லாந்து நாட்டிலும், அமெரிக்காவிலும் இத்தகைய முறை விரைவில் நடைமுறைக்கு வரவிருக்கிறது. மதுப்புட்டிகளில் எச்சரிக்கை வாசகங்களை அச்சிடும் அதிகாரம் மாநில அரசுக்கே உள்ளது. எனவே, மது குடித்தால் பல வகை புற்றுநோய்கள் உள்ளிட்ட 200 வகையான நோய்கள் ஏற்படும் என்ற வாசகத்தையும், எச்சரிக்கைப் படத்தையும் மதுப்புட்டிகளில் பரப்பில் 80% அளவுக்கு அச்சிடும் முறையை தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

யாரை நேசிக்கின்றீர்கள்

நீங்கள் வாழ்க்கையில் யாரை அதிகமாய் நேசிக்கின்றீர்கள் என்ற கேள்வியை நான் கேட்டால். ஒருவரது அல்லது இருவரது பதிலை கூறுவீர்கள். உண்மைத்தான். நாம் யாரையும் நேசிக்காமல் இருக்க முடியாது.

  1. ஒன்று எம்மை நேசிக்காத நபர்களை நாம் நேசிப்போம். அவர்கள் மீது நம்பிக்கை வைப்போம்.
  2. இரண்டு எம்மை நேசிக்கும் நபர்களின் நேசத்தை புரிந்துகொள்ளாதவர்களாக அவர்களை தள்ளி வைப்போம். பொதுவாக இவ்விரண்டிலும் தான் முழு மனித வர்க்கமே தடுமாறுகின்றது.

உன்னை நேசிக்காத நபர்களை நீ நேசிக்கின்றாயா? அல்லது உன்னை நேசிக்கும் நபர்களின் உண்மையான அன்பை புரிந்துகொள்ளாத நபராக இருக்கின்றாயா? என்பதை நிச்சயமாக நீ சிந்திக்க வேண்டும்.

ஆமாம். விளங்க வைக்கிறேன். நான் திருமண வயதை அடைந்தபோது நான் சிந்தித்த இரு பெண்கள் ஒரு கிறிஸ்தவ நிறுவனத்தில் ஊழியம் செய்து வந்தனர். அதில் ஒரு பெண் என்னை விரும்பினாள். ஆனால் அவளது அன்பை நான் புரிந்துகொள்ள இயலவில்லை. காரணம் – நான் அதே இடத்திலிருந்த இன்னொரு பெண்ணை நேசித்ததே. சில காலம் சென்ற போதுதான் இரண்டாமவள் – நான் நேசித்தவள் – எனது நேசத்திற்கு உகந்தவள் அல்ல என்பதை உணர்ந்தேன். அதற்கிடையில் என்னை நேசித்தவள் என்னை விட்டு விலகி சென்றுவிட்டாள்.


தற்பொழுது எனக்கு இரு பிள்ளைகள் இருக்கின்றார்கள். மகனை நான் அதிகமாக நேசிப்பதினால் – அவனுக்கு செலவு செய்யும்போது எவ்வித கணக்கும் பார்ப்பதில்லை. ஆனால் மகளுக்கு செலவு செய்யும்போது கணக்கு பார்கிறேனே… ஏன்? உண்மையில் மகனை விட மகளே அதிகமாக என்மீது அன்பு காட்டுகின்றாள் என்பதை நான் நன்கு அறிந்திருந்தும் ஒரவஞ்சனை எனக்குள் தலைதுாக்குவதை உணர்ந்திருக்கிறேன்.

நான் பணிபுரியும் கிறிஸ்தவ அலுவலகத்தில் எனது உயர் அதிகாரி தான் விரும்பும் நபர்களுக்கு பதவி உயர்வு கொடுப்பதை அதிகமாக நேரங்களில் கண்டிருக்கிறேன். தான் விரும்பாத நபர்களுக்கு எவ்வித உயர்வையோ உரிய கனத்தையோ கொடுப்பதில்லை. காலப்போக்கில் அவர் யாரை நேசித்து பதவி உயர்வு கொடுத்தாரோ அவர்களே இவரோடு வேலை செய்ய முடியாது அல்லது சம்பளம் போதாது என விலகி சென்றதை கண்டிருக்கிறேன். அதேநேரம் அவர் யாரை நேசிக்காமல் ஒதுக்கினாரோ அவர்களே அவருக்கு அதிக நன்மை செய்துள்ளார்கள்.

இப்ப சொல்லுங்கள்… நாம் யாரை நேசிக்கிறோம், உங்களை நேசிப்பவர்களை அவர்களின் நேசத்தை அசட்டை செய்கின்றீர்களா அல்லது உங்களை உண்மையாக நேசிக்காதவர்களின் மாயைக்குள் அகப்பட்டுள்ளீர்களா

நீதிமொழிகள் 7 ம் அதிகாரத்தின் 22ம் 23ம் வசனம் கூறுகிறது

உடனே அவன் அவள் பின்னே சென்றான்; ஒரு மாடு அடிக்கப்படும்படி செல்வதுபோலும், ஒரு மூடன் விலங்கிடப்பட்டுத் தண்டனைக்குப் போவது போலும், ஒரு குருவி தன் பிராணணை வாங்கும் கண்ணியை அறியாமல் அதில் விழத் தீவிரிக்கிறதுபோலும், அவளுக்குப் பின்னே போனான்; அம்பு அவன் ஈரலைப் பிளந்தது

நன்மையைத் தேடுங்கள்…

நீங்கள் பிழைக்கும்படிக்குத் தீமையை அல்ல, நன்மையைத் தேடுங்கள்; அப்பொழுது நீங்கள் சொல்லுகிறபடியே சேனைகளின் தேவனாகிய கர்த்தர் உங்களோடே இருப்பார்..ஆமோஸ் 5:14

தீமையை அநுபவிப்பவர்கள் யாரால் தீமை நடந்ததோ அவர்களை ஆசீர்வதிக்கமாட்டார்கள். நம்பியவர்களுக்கு துரோகம் செய்வது தீமை.. மனச்சாட்சிக்கு விரோதமாக செயல்படுவது தீமையை சார்ந்தது. தீமையின் பலனை சந்ததிகள் அநுபவிப்பவர்கள்.

நீங்கள் நன்மையை தேடவேண்டும்.. தீமைக்கு விலகி இருங்கள். உங்களால் எவ்வளவு நன்மை செய்ய முடியுமோ செய்யுங்கள்.. நன்மையை தேடுங்கள்.. நன்மைக்கு நிச்சயம் ஆண்டவர் உங்களுக்கு நல்ல பலன் தருவார். வாழ்ந்திருக்கச் செய்வார்..

நீங்கள் செய்கிற நன்மை ஒரு நாளும் வீணாகாது.. மனிதர்கள் நீங்கள் செய்த நன்மையை மறந்துப்போகலாம். உங்களுக்கே தீமை செய்து இருக்கலாம். கவலைப்படாதீங்கள்.. நீங்கள் செய்த நன்மையை ஆண்டவர் மறக்க மாட்டார்..

நீங்கள் நன்மையை தேடும்போது நீங்கள் சொல்லுகிறபடி ஆண்டவர் உங்களோடு இருப்பார். உங்கள் சொல் கேட்கப்படும்.. ஆண்டவர் உங்களோடு இருந்து உங்கள் காரியங்களை வெற்றி அடையச்செய்வார். ஆண்டவரை நம்புங்கள்..!!!

தேவை அற்ற போட்டி

தேவை அற்ற போட்டிகள் உங்களை திசை திருப்பிவிடும்!

ஒரு நாள் வழக்கம் போல நான் ஜாகிங் செய்து கொண்டிருந்த போது, எனக்கு முன்னால் சற்றுத் தொலைவில் ஒருவர் ஜாகிங் பண்ணிக் கொண்டு போய் கொண்டிருந்ததைப் பார்த்தேன்.

அவர் கொஞ்சம் மெதுவாக ஓடிக் கொண்டிருந்தார் என்று தோன்றியது.

சட்டென்று மனதில் ஒரு எண்ணம்.

அவரை முந்திக் கொண்டு ஓடவேண்டும் என்று ஒரு உந்துதல். என் வீட்டுக்குப் போவதற்கு இன்னும் நான்கு ஐந்து தெருக்கள் தாண்ட வேண்டும். அதற்குள் அவரை பிடித்து விடலாம் என்று நினைத்து வேகமாக ஓட ஆரம்பித்தேன்.

மெதுவாய் அவரை நெருங்கிக் கொண்டிருதேன். அவரை முந்துவதற்கு இன்னும் சில 1௦௦ அடிகளே இருந்தன என் வேகத்தை சட்டென்று கூட்டினேன்.

இப்போது என்னைப் பார்ப்பவர்கள் நான் ஏதோ ஒலிம்பிக்ஸ் பந்தயத்தில் கலந்து கொள்ள பயிற்சி மேற்கொண்டிருக்கிறேனோ என்று நினைப்பார்கள்! அவரைப் பிடித்து விட வேண்டும் என்ற முடிவுடன் ஓடி…… ஓடி……அவரைப் பிடித்தே விட்டேன் கடைசியில்! உள்ளுக்குள் ஒரு பெருமிதம்!

‘அப்பாடி, முந்தி விட்டேன்!’

பின்னால் திரும்பிப் பார்த்தேன் அவர் போக்கில் அவர் வந்து கொண்டிருந்தார் அவருக்கு நான் அவருடன் போட்டி போட்டதே தெரியாது!

சந்தோஷம் சற்று அடங்கிய பின் தான் தெரிந்தது, நான் என் பாதையை தவற விட்டு விட்டதை உணர்ந்தேன்!

அவரைத் தோற்கடிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் ஓடிய நான், நான் திரும்ப வேண்டிய தெருவை விட்டு விட்டு ஆறு தெருக்கள் தாண்டி வந்து விட்டேன்.

இப்போது வந்த வழியே திரும்பி அத்தனை தூரத்தையும் கடந்து நான் என் வீட்டிற்கு போக வேண்டும்.

இதேபோலத்தான் நம் வாழ்விலும் சிலசமயம் நடக்கிறது, இல்லையா?

நம்முடன் வேலை செய்பவர்களுடனும், அண்டை அயலில் இருப்பவர்களுடனும், நண்பர்களுடனும், குடும்பத்தவர்களுடனும் போட்டி போட்டு அவர்களை மிஞ்ச வேண்டும் என்றோ, அல்லது அவர்களை விட நாம் பெரியவர்கள் என்றோ நிரூபிக்க முயலும் போதும் இதே தான் நடக்கிறது இல்லையா?

நம்முடைய நேரத்தையும் சக்தியையும் மற்றவர்களை விட வெற்றிகரமானவர்கள் / முக்கியமானவர்கள் என்று நிரூபிப்பதிலேயே செலவழிக்கிறோம். நம்முடைய பொறுப்புகளை மறக்கிறோம். நாம் பயணம் செய்ய வேண்டிய பாதைகளை மறக்கிறோம்.

நமக்கென்று கடவுள் கொடுத்திருக்கும் வேலைகளை செய்யத் தவறுகிறோம்.

இந்த மாதிரியான ஆரோக்கியமில்லாத போட்டி முடிவில்லாத ஒரு சுழல். இந்தச் சுழலில் மாட்டிக் கொண்டுவிட்டால் வெளியே வருவது கடினம்.

எப்போதுமே நம்மைவிட சிலர் முன்னால் இருப்பார்கள்.

ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். நம்மால் முடிந்த அளவு நல்லவர்களாக இருக்க நம்மால் முடியும், யாருடனும் போட்டி போடாமலேயே!

வாழ்க்கையில், பிறருடன் அனாவசிய போட்டியை தவிர்த்து நம் வாழ்க்கை ஓட்டப் பந்தயத்தில் கவனம் செலுத்துவோம். நாமும் நன்றாக வாழ்ந்து பிறரையும் வாழ விடுவோம்!

எல்லோரையும் துரத்துவதே வாழ்க்கை என்று நினைத்து சொந்த வாழ்க்கையை தொலைக்காமல் இருப்போம்

இரட்சிக்கப்பட்ட கிறிஸ்தவ விசுவாசி எப்படிபட்டவராக இருக்கவேண்டும்

  1. 👉 நற்போதகத்தில் தேறினவனாயிருக்க வேண்டும். — 1Tim 4:6
  2. 👉🏾 நற்கந்தமாய் ஜீவிக்க வேண்டும். — Luk 1:19
  3. 👉 நற்சாட்சியாக இருக்கவேண்டும். — Act 6:3 / Act 16:2 / Luk 4:22
  4. 👉🏾 நற்குணமுள்ளவர்களாயிருக்க வேண்டும். — Act 17:11 / Rom 15:14 / Gal 5:22 / Eph 5:9
  5. 👉 நற்கனி கொடுக்கிறவர்களாயிருக்க வேண்டும். — Jas 3:17 / John 15:8
  6. 👉🏾 நற்கிரியை செய்கிறவர்களாயிருக்க வேண்டும். — _Matt 5:16 / Matt 26:10 / Col 1:10 / 1Tim 2:10 / 1Tim 5:10
  7. 👉 நற்செய்தி அறிவிக்கிறவர்களாயிருக்க வேண்டும். — Luk 1:19 / Luk 2:10 / Luk 8:1 / 1Thess 3:6 / 2King 7:9 / Rom 10:14- 15 / Rom 1:14-16
  8. 👉🏾 உத்தமனாய் நடந்து, நீதியை நடப்பித்து, மனதாரச் சத்தியத்தைப் பேசுகிறவனாக இருக்க வேண்டும். — Ps 15:2
  9. 👉 கீழ்ப்படிதல் உள்ளவர்களாக இருக்க வேண்டும். — Rom 16:19
  10. 👉🏾 கோணலும் மாறுபாடுமான சந்ததியின் நடுவிலே குற்றமற்றவர்களும் கபடற்றவர்களும், தேவனுடைய மாசற்ற பிள்ளைகளுமாக இருக்க வேண்டும். — Phil 2:15
  11. 👉 மாம்சத்திற்கேற்ற ஞானத்தோடே நடவாமல் இருக்க வேண்டும். — 2Cor 1:12
  12. 👉🏾 தேவபக்தியுள்ளவனாக இருக்க வேண்டும். — Acts 10:2
  13. 👉 தன்வீட்டாரனைவரோடும் தேவனுக்குப் பயந்தவனுமாயிருந்து, ஜனங்களுக்கு மிகுந்த தருமங்களைச் செய்கிறவராக இருக்க வேண்டும். — Acts 10:2
  14. 👉🏾 சகல யூதராலும் நல்லவனென்று சாட்சிபெற்றவர்களாவும் இருக்க வேண்டும். — Acts 22:12
  15. 👉 தேவவசனத்தைக் கலப்பாய்ப் பேசாமல், துப்புரவாகவும், தேவனால் அருளப்பட்டபிரகாரமாகவும், கிறிஸ்துவுக்குள் தேவசந்நிதியில் பேசுகிறவர்களாக இருக்கவேண்டும். — 2Cor 2:17
  16. 👉🏾 அப்போஸ்தலருடைய உபதேசத்திலும், அந்நியோந்நியத்திலும், அப்பம் பிட்குதலிலும், ஜெபம்பண்ணுதலிலும் உறுதியாய்த் தரித்திரவர்களாக இருக்க வேண்டும். — Acts 2:42
  17. 👉 நற்கிரியைகளைச் செய்யப் பக்திவைராக்கியமுள்ளவர்களாகவும் இருக்க வேண்டும். — Tit 2:14 / Tit 3:8
  18. 👉🏾 எஜமான் வரும்போது, விழித்திருக்கிறவர்களாகக் இருக்க வேண்டும். — Luk 12:37
  19. 👉 இருதயத்தில் சுத்தமுள்ளவர்களாக இருக்க வேண்டும். — Matt 5:8
  20. 👉🏾 கிறிஸ்துவின் சத்தத்திற்குச் செவிகொடுத்து, கிறிஸ்துக்கு பின்செல்லுகிறவராக இருக்க வேண்டும். — John 10:27

“உள்ளதைக் கொடுத்த உள்ளங்கள்”

1) அடையைக் கொடுத்த விதவை:

1 இராஜாக்கள் 17:13(8-16)

[13]அப்பொழுது எலியா அவளைப் பார்த்து: பயப்படாதே; நீ போய் உன் வார்த்தையின்படி ஆயத்தப்படுத்து; ஆனாலும் முதல் அதிலே எனக்கு ஒரு சிறிய அடையைப் பண்ணி என்னிடத்தில் கொண்டுவா; பின்பு உனக்கும் உன் குமாரனுக்கும் பண்ணலாம்.

2) அப்பத்தைக் கொடுத்த சிறுவன்:

யோவான் 6:9(1-13)

[9]இங்கே ஒரு பையன் இருக்கிறான், அவன் கையில் ஐந்து வாற்கோதுமை அப்பங்களும் இரண்டு மீன்களும் உண்டு

3) காணிக்கைக் கொடுத்த விதவை:

லூக்கா 21:4(1-4)

[4]அவர்களெல்லாரும் தங்கள் பரிபூரணத்திலிருந்தெடுத்து தேவனுக்கென்று காணிக்கை போட்டார்கள்; இவளோ தன் வறுமையிலிருந்து தன் ஜீவனத்துக்கு உண்டாயிருந்ததெல்லாம் போட்டுவிட்டாள் என்றார்.

4) பொருட்களைக் கொடுத்த தாவீது:

1 நாளாகமம் 29:3(1-15)

[3]இன்னும் என் தேவனுடைய ஆலயத்தின்மேல் நான் வைத்திருக்கிற வாஞ்சையினால், பரிசுத்த ஆலயத்துக்காக நான் சவதரித்த அனைத்தையும் தவிர, எனக்குச் சொந்தமான பொன்னையும் வெள்ளியையும் என் தேவனுடைய ஆலயத்துக்கென்று கொடுக்கிறேன்.

5) மகனைக் கொடுத்த ஆபிரகாம்:

ஆதியாகமம் 22:2(1-18)

[2]அப்பொழுது அவர்: உன் புத்திரனும், உன் ஏகசுதனும், உன் நேசகுமாரனுமாகிய ஈசாக்கை நீ இப்பொழுது அழைத்துக்கொண்டு, மோரியா தேசத்துக்குப் போய், அங்கே நான் உனக்குக் குறிக்கும் மலைகள் ஒன்றின்மேல் அவனைத் தகனபலியாகப் பலியிடு என்றார்.

6) மகளைக் கொடுத்த யெப்தா:

============================

நியாயாதிபதிகள் 11:31(1-40)

[31]நான் அம்மோன் புத்திரரிடத்திலிருந்து சமாதானத்தோடே திரும்பி வரும்போது, என் வீட்டு வாசற்படியிலிருந்து எனக்கு எதிர்கொண்டு வருவது எதுவோ அது கர்த்தருக்கு உரியதாகும், அதைச் சர்வாங்கதகனபலியாகச் செலுத்துவேன் என்றான்.

7) ஜீவனைக் கொடுத்த இயேசு:

1 யோவான் 3:16

[16]அவர் தம்முடைய ஜீவனை நமக்காகக் கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம்; நாமும் சகோதரருக்காக ஜீவனைக்கொடுக்கக் கடனாளிகளாயிருக்கிறோம்.

யோவான் 3:16; யோவான் 10:11.

Thanks to  elolam mission

இளையோரும், இணைய தளங்களும்

விண்ணரசு, கடலில் வீசப்பட்டு எல்லா வகையான மீன்களையும் வாரிக் கொண்டுவரும் வலைக்கு ஒப்பாகும். அந்த வலையானது நல்ல மீன்களையும், கெட்ட மீன்களையும் இழுத்து வருகிறது. நல்லவை கூடையில் சேர்க்கப்படும், கெட்டவை வெளியே கொட்டப்படும் என இயேசு ஒரு முறை விண்ணரசைக் குறித்து உவமை ஒன்றைச் சொன்னார். அதை இன்றைய இணைய வலையோடும் ஒப்பிடலாம்.

இணைய வலையானது டிஜிடல் தகவல்களை சகட்டு மேனிக்கு அள்ளிக் கொண்டு வந்து கொட்டுகிறது. அவற்றிலிருந்து நல்லவற்றைப் பொறுக்கி கூடையில் வைக்க வேண்டும், கெட்டவற்றை வெளியிலே கொட்ட வேண்டும். அப்போது அந்த வலை பயனுள்ளதாய் இருக்கும். அதை விட்டு விட்டு, நல்லவற்றை நிராகரித்து விட்டு தீயவற்றைத் தேர்ந்தெடுக்கும் போது வலையானது நமது கழுத்தை இறுக்கும் சுருக்காக மாறிவிடுகிறது.

சிறு வயதுக் கதைகளில் வேடன் வலையை விரித்து, அதில் தானியத்தை பரப்பி வைப்பான். அந்தத் தானியத்தின் வசீகரத்தைக் கண்டு பறவைகள் அதில் வந்து அமரும் போது அவை வலையில் சிக்கிக் கொள்ளும். அவற்றை அவன் வந்து சாவாகாசமாகப் பிடித்துச் செல்வான். இன்றைக்கு இணையமும் அப்படித் தான், பல வசீகரத் தானியங்களை வலைத் தளங்களில் விரித்து வைத்து இளைஞர்களின் ஆர்வத்தை தவறான வழியில் இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றன.

குறிப்பாக சமூக வலைத்தளங்கள் போன்றவற்றில் எந்த ஒரு தனிநபர் தகவலையும் கொடுக்காமல் இருப்பது மிக மிக முக்கியம். குறிப்பாக இளம் பெண்கள் இந்த வலையில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பது நிம்மதியான வாழ்க்கைக்கு அவசியம். ஒரு தேவையற்ற புகைப்படமோ, ஒரு தேவையற்ற மின்னஞ்சலோ, ஒரு தேவையற்ற வாட்சப் உரையாடலோ போதும் காலமெல்லாம் நமது நிம்மதியைக் குழி தோண்டிப் புதைக்க.

காலங்கள் கடந்தாலும் சோதனைகள் தீர்வதில்லை. ஒவ்வொரு காலத்திலும் சாத்தான் தனது சோதனையை வேறு வேறு விதமாகத் தந்து கொண்டே இருப்பான். ஆதியில் பழத்தைக் காட்டி ஏவாளை வசீகரித்த சாத்தான், இன்றைக்கு தளத்தைக் காட்டி இளைஞர்களை இழுக்கப் பார்க்கிறான்.

ஒன்று மட்டும் மனதில் கொள்ள வேண்டும். சாத்தானால் சோதனைகளைத் தர மட்டுமே முடியும், அதில் விழுவதா இல்லையா எனும் முடிவு நம்மிடமே இருக்கிறது. பழத்தைச் சாப்பிடும் ஆசையை சாத்தான் தூண்டினான், ஏவாள் விழுந்தாள். பாவத்தை அரவணைத்தாள். கல்லை அப்பமாய் மாற்றிச் சாப்பிட இயேசுவின் ஆசையைத் தூண்டினான். இயேசு நிமிர்ந்தார், புனிதத்தை தேர்ந்தெடுத்தார். அது தான் வித்தியாசம். சோதனைகளின் வசீகரத்தில் வழுக்கிவிட்டால், ஆன்மிக முதுகெலும்பு உடைந்து போகும் என்பதில் சந்தேகமில்லை.

இன்றைய தொழில்நுட்ப உலகில் அனைத்துமே இணைய இழைகளால் இறுக்கிக் கட்டப்பட்டிருக்கின்றன. எனவே இணையத்தைத் தவிர்த்துவிட்டு வாழ்ந்தல் என்பது ஏறக்குறைய சாத்தியமற்ற நிலை என்று கூடச் சொல்லலாம். இந்த சூழலில் கவனமாக வாழவேண்டியது நமது தேவை. எப்படி இயேசு அழைத்தபோது, “வலைகளை விட்டு விட்டு” இயேசுவை சீடர்கள் பிந்தொடர்ந்தார்களோ, அது போல நாம் ‘இணைய வலையை’ விட்டுவிட்டு இயேசுவைப் பின்செல்லத் தயாராய் இருக்க வேண்டும்.

எல்லாவற்றிலும் நன்மையும் தீமையும் இரண்டறக் கலந்தே இருக்கின்றன. நன்மையைப் பற்றிக் கொள்வதும், தீமையை விட்டுச் செல்வதும் நமது கையில் தான் இருக்கிறது. இயேசு “வலப்பக்கமாக வலைகளை வீசுங்கள்” என்றார். வலப்பக்கம் என்பது விண்ணகத்தின் பக்கம். வலப்பக்கமாய் வீசும் வலை என்பது நல்ல விஷயங்களைப் பெற்றுக் கொள்ள இணையத்தைப் பயன்படுத்துதல் என்றும் புரிந்து கொள்ளலாம்.

இணைய தளத்தைத் தவிர்த்தல் சாத்தியமற்ற இன்றைய சூழலில் எப்படியெல்லாம் இணையத்தை நல்லமுறையில் பயன்படுத்தலாம் என்பதைப் புரிந்து கொள்வது பயனளிக்கும்.

1. கலைகளை வளர்க்கலாம்.

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நமது கலைகளை வளர்த்தெடுக்க இணையம் நமக்கு வாய்ப்புகளைத் தருகிறது. அதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஒரு இசைக்கலைஞன் எந்த ஒரு இசைக்கருவியையும் வாங்காமலேயே பாடல்களுக்கு இசையமைக்க முடியும். செலவில்லாமலேயே பாடி ஒரு பாடலை தரமான முறையில் உருவாக்கவும் முடியும். எந்த கலை நமக்குப் பிடித்திருக்கிறதோ, அந்தக் கலையைக் குறித்த அதிக தகவல்களை இணையம் இலவசமாகவே அள்ளித் தருகிறது.

எழுத்தாளர்கள் தளங்களை ஆரம்பித்து தங்கள் சிந்தனைகளை எழுதி வைக்கலாம். ஓவியர்கள் டிஜிடல் ஓவியங்களை அழகாக உருவாக்கலாம். பாடகர்கள் தங்களுடைய குரலை பதிவேற்றி அங்கீகாரம் பெறலாம். இப்படி எந்த ஒரு கலையையும் வளர்க்கலாம். இந்த கலைகளையெல்லாம் இறைவனுடைய மகிமைக்காகச் செய்யும் போது அவை அர்த்தம் பெறும்.

2. சிந்தனைகளைப் பகிரலாம்.

இன்றைக்கு இணையதளத்தை மிகவும் பாசிட்டிவாகப் பயன்படுத்தும் ஏராளமான இளைஞர்கள் இருக்கிறார்கள். உதாரணமாக யூடியூப் சேனலை எடுத்துக் கொண்டால், நிறைய கிறிஸ்தவ படைப்புகள் சார்ந்த தளங்கள் இருக்கின்றன. நம்முடைய சிந்தனைகளை வீடியோவாகப் பதிவுசெய்து வைக்கும்போது அவை சர்வதேச அளவில் மக்களுக்குப் பயனளிக்கின்றன. தொலைக்காட்சியைப் போல, ‘ஆன்லைன் தொலைக்காட்சிகள்’ உருவாக்குவதும் எளிதாகியிருக்கிறது. இவையெல்லாம் இளைஞர்கள் தங்களுடைய சிந்தனையை நல்ல முறையில் காட்சிப்படுத்த உதவும்.

தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்கள், தன்னம்பிக்கை சார்ந்த விஷயங்கள், கிறிஸ்தவம் சார்ந்தவ விஷயங்கள் என சமூகத்துக்குத் தேவையான, பலருக்கும் பயனளிக்கக் கூடிய விஷயங்களை இத்தகைய இணைய தளங்களில் பதிவிடலாம். கிறிஸ்தவ மதிப்பீடுகளுக்கு எதிரான எதையும் பதிவிடக் கூடாது என்பது மட்டுமே சிந்தையில் கொள்ள வேண்டிய விஷயம்.

3. தொடர்பில் இருக்கலாம்.

நண்பர்களோடும், உறவினர்களோடும், ஆசிரியர்களோடும், ஆன்மிக வழிகாட்டிகளோடும் எப்போதும் தொடர்பில் இருப்பதற்கு இன்றைக்கு இணையம் உதவுகிறது. முன்பு இத்தகைய வசதிகள் இல்லை. நேரடியாகவோ, கடிதம் மூலமாகவோ தான் தொடர்பு கொள்ள முடியும் எனும் நிலை இருந்தது. இந்த தொடர்பு விஷயத்தை நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்பதை வைத்தே நன்மையும் தீமையும் முடிவு செய்யப்படுகிறது. தேவையற்ற அரட்டைகளில் மூழ்கி, டிஜிடல் வெளிச்சத்தில் நாளெல்லாம் புதைந்து கிடந்தால் நமது வாழ்க்கையும், ஆரோக்கியமும் பாழாகிவிடும்.

தேவையான அன்பையும், நட்பையும் இணையத்தின் மூலம் பகிரவும், பெறவும் செய்தால் நாட்கள் இனிமையாகும். எந்த வகையிலும் நேரடியான மனித உறவுகளை, சந்திப்புகளை, அரவணைப்பை இந்த டிஜிடல் பரிவர்த்தனை இடமாற்றம் செய்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

4. தொழில்கள் செய்யலாம்.

இன்றைக்கு ஃபிரீலேன்சர்கள், அதாவது சுதந்திரமாக தொழிலைச் செய்பவர்கள் அதிகரித்து விட்டார்கள். அவர்களுக்கு இணைய தளங்கள் களம் அமைத்துக் கொடுக்கின்றன. வீட்டில் இருந்தபடியே வேலைகளைச் செய்யவும், அவற்றை இணையத்திலேயே பதிவேற்றி பணம் பெற்றுக் கொள்வதுமான கிரவுட் சோர்சிங் முறையிலான வேலைகள் அதிகம் காணப்படுகின்றன. நாணயமான, நல்ல வருமானத்தை ஈட்டித் தரக்கூடிய பணிகளை இளைஞர்கள் தேடிக் கண்டுபிடிக்கலாம்.

அதே நேரம், இணையத்தில் ஏமாற்றுபவர்களும் ஏராளம் உண்டு என்பதால் விழிப்புடன் இருக்க வேண்டியதும் அவசியம். தவறான செயல்களில் ஈடுபடுவது நமது அமைதியான வாழ்க்கையையே மிக எளிதில் அழித்து விடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

5. நேரத்தை மிச்சப்படுத்தலாம்

இணையமும், இணையதளங்களும் நமக்கு நிறைய நேரத்தை மிச்சப்படுத்தித் தருகின்றன. ஒரு ரிக்கார்ட் எழுதவே லைப்ரரிகளில் மாதக் கணக்கில் நூல்களைப் புரட்டிய காலங்கள் மலையேறிவிட்டன. இன்றைக்கு இருக்கும் இடத்திலிருந்து கொண்டே தகவல்களை உலகில் எந்த மூலையிலிருந்தும் இழுத்து எடுக்கலாம். மிக எளிதாகக் கிடைக்கின்ற தகவல்கள் நமக்கு நேரத்தை மிச்சப்படுத்தித் தருகின்றன. இருந்த இடத்திலிருந்தே செய்து முடிக்கின்ற வங்கி வேலைகள் நமக்கு நேரத்தை சேமித்துத் தருகின்றன.

இப்படி மிச்சப்படுகின்ற நேரங்களை மனித நேயப் பணிகளுக்கும், இறைமகன் இயேசுவின் நற்செய்தியை அறிவிக்கும் பணிக்கும் நாம் செலவிட வேண்டும். அப்போது நமக்கு விண்னகத்தில் நல்ல பலன் கிடைக்கும்.

இப்படி இணைய தளங்களை நல்ல முறையில் பயன்படுத்துவதற்கு நமக்கு ஏராளமான வாய்ப்புகள் இருக்கின்றன. இணைய தளங்கள் இன்றைக்கு இறை தளங்களாகவும் இருக்கின்றன, சாத்தானின் தளங்களாகவும் இருக்கின்றன. எதை நாம் தெரிந்தெடுக்கிறோம் என்பதில் இருக்கிறது நமது பயணத்தின் வெற்றி.

இணைய தளங்களை நாம் பயன்படுத்தும்போது ஒரே ஒரு கேள்வியை மட்டும் கேட்போம். இந்த இணைய தளத்தை நானும் இயேசுவும் ஒன்றாக அமர்ந்து பார்க்க முடியுமா ? “முடியும்” என நீங்கள் தைரியமாகச் சொல்ல முடிந்தால் அந்தத் தளத்தைப் பாருங்கள். இல்லையேல் தவிர்த்து விடுங்கள். நீங்கள் பாவத்தில் விழ மாட்டீர்கள்.

thanks to Bro. சேவியர்