• Wednesday 5 February, 2025 04:57 PM
  • Advertize
  • Aarudhal FM

கடன் தொல்லையால் பரிதாபம் ஜூஸில் விஷம் கலந்து குடித்து போதகர், தாய் தற்கொலை

கன்னியாகுமரி: கடன் தொல்லையால் போதகர், தனது தாயுடன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். குமரி மாவட்டம் தக்கலை அருகே பரைக்கோடு கோவில்விளையை சேர்ந்தவர் தங்கராஜ் (60). இவரது மனைவி அமுதலதா (50). இவர்களுக்கு சுமாராணி (25) என்ற மகளும், மெல்பின் ராஜ் (23) என்ற மகனும் உள்ளனர்.

இதில் மெல்பின்ராஜ் முண்டவிளையில் உள்ள கிறிஸ்தவ சபையில் போதகராக இருந்தார். இவருக்கு திருமணமாகவில்லை. சுமாராணிக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி கணவருடன், தக்கலை அருகே வசித்து வருகிறார்.சகோதரி திருமணத்துக்காக மெல்பின் ராஜ், வங்கியில் கடன் வாங்கி இருந்தார். பின்னர் வங்கி கடன் வாங்கி வீடு கட்டினார்.

இதனால் ரூ.20 லட்சம் வரை கடன் தொகை அதிகரித்துள்ளது. கடனை அடைக்க பெரும் சிரமப்பட்டுள்ளார். வங்கியில் இருந்து நோட்டீஸ் வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மெல்பின் ராஜ் மனம் உடைந்தார். பெற்றோரிடம் ஆலோசித்தார். ஆசையாக கட்டிய வீட்டை விற்று கடனை அடைக்கவும் மனம் இல்லாமல் தவித்துள்ளனர்.இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அவர் ஜூஸில் விஷம் கலந்து தந்தை தங்கராஜிடம் கொடுத்துள்ளார். விஷம் கலந்திருப்பது தெரியாமல் அவர் பனி அதிகமாக இருப்பதால் காலையில் குடிக்கிறேன் என கூறி விட்டார். பின்னர் தாய்க்கு கொடுத்து தானும் குடித்துவிட்டு உறங்க சென்றார். மற்றாரு அறையில் படுத்திருந்த தங்கராஜ் நேற்று அதிகாலை தண்ணீர் குடிக்க எழுந்து வந்தபோது, மனைவியும் மகனும் வாயில் நுரை தள்ளியபடி கிடந்ததை பார்த்து கதறினார்.சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து இருவரையும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனையில் இருவரும் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து தக்கலை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். இதில் ஜூஸில் விஷம் கலந்து குடித்தது தெரிய வந்தது. ஜூஸில் விஷம் கலந்து இருப்பது தெரிந்திருந்தால் நானும் அவர்களுடன் குடித்து இறந்திருப்பனே என தங்கராஜ் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது