தமிழக அரசின் நிதி உதவி பெற ஜெருசலேம் பயணம் செல்லும் கிறிஸ்தவர்கள் விண்ணப்பிக்கலாம் – கலெக்டர் தகவல்

Share this page with friends

சேலம்,

ஜெருசலேம் பயணம் செல்லும் கிறிஸ்தவர்கள் நிதிஉதவி பெற விண்ணப்பிப்பது தொடர்பாக சேலம் மாவட்ட கலெக்டர் ராமன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டை சேர்ந்த கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்வதற்காக தமிழக அரசால் நபர் ஒருவருக்கு ரூ.20 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் கிறிஸ்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இத்திட்டத்தின் கீழ் அனைத்து பிரிவினர்களை உள்ளடக்கிய 600 கிறிஸ்தவர்களும், அதில் 50 கன்னியாஸ்திரிகளும் மற்றும் அருட்சகோதரிகள் புனித பயணம் மேற்கொள்ள அனுமதித்து அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.

இப்புனித பயணம் இஸ்ரேல், எகிப்து மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளில் உள்ள பெத்லஹேம், ஜெருசலேம், நாசரேத் ஜோர்டான் நதி, கலிலேயாசமுத்திரம் மற்றும் கிறிஸ்தவ மத தொடர்புடைய பிற புனித தலங்களையும் உள்ளடக்கியது. இப்புனிதபயணம் அக்டோபர்-2019 முதல் மார்ச்-2020 வரை மேற்கொள்ள உத்தேசிக் கப்பட்டுள்ளது.

பயணக்காலம் 10 நாட்கள் வரை இருக்கும். இதற்கான விண்ணப்ப படிவங்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகங்களிலிருந்து கட்டணமின்றி பெறலாம். இதுதவிர www.bc-m-b-c-mw.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்தும் பயன்படுத்தலாம். இத்திட்டத்திற் கான நிபந்தனைகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் உரிய இணைப்புகளுடன் அஞ்சல் உறையில் ‘கிறிஸ்தவர்களின் ஜெருசலேம் புனித பயணத்திற்கான நிதியுதவி கோரும் விண்ணப்பம் 2019-20’ என்று குறிப்பிட்டு ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலச மஹால் பாரம்பரிய கட்டிடம், முதல்தளம், சேப்பாக்கம், சென்னை-5 என்ற முகவரிக்கு வருகிற 30-ந் தேதிக்குள் கிடைக்கும் வகையில் அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு சேலம் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 13, 2019

நன்றி: தினதந்தி


Share this page with friends