“நான் தேவனுக்கும் மனுஷருக்கும் முன்பாக எப்பொழுதும் குற்றமற்ற மனச்சாட்சியை உடையவனாயிருக்கப் பிரயாசப்படுகிறேன்.” (அப்போஸ்தலர் 24:16)
கிறிஸ்தவ வாழ்க்கையில் மிகவும் முக்கியமான ஒன்றாக மனசாட்சி காணப்படுகிறது. மனிதன் மற்றவர்களை ஏமாற்றலாம், தனது தவறுகளை மறைக்கலாம், ஆனால் தனது மனசாட்சியிடமிருந்து தப்பிச் செல்ல முடியாது. அது நம்முடைய வாழ்க்கையின் இறுதிவரை நம்மோடு பயணிக்கிறது.
மனசாட்சி என்பது தேவன் மனிதனுக்குள் வைத்திருக்கும் ஒரு உள்ளார்ந்த சாட்சியாகும். நாம் தவறு செய்யும்போது எச்சரிக்கிறது; சரியான வழியில் நடக்கும்போது சாட்சியளிக்கிறது. தேவனுடைய வார்த்தையாலும் பரிசுத்த ஆவியானவரின் செயலாலும் வழிநடத்தப்படும் மனசாட்சி ஒளிவீசும் விளக்கைப் போன்றது.
அப்போஸ்தலனாகிய பவுல் தனது வாழ்க்கையில் குற்றமற்ற மனசாட்சியை காத்துக்கொள்ள முயற்சித்தார். தேவனுக்கு முன்பாக மட்டுமல்ல, மனிதர்களுக்கும் முன்பாக நேர்மையாக வாழ விரும்பினார். அதனால்தான், “விசுவாசமும் நல்மனசாட்சியும் உடையவனாயிரு” (1 தீமோத்தேயு 1:19) என்று தீமோத்தேயுவுக்கும் அறிவுறுத்தினார்.
நம்முடைய ஊழியங்களும் ஜெபங்களும் தேவனுக்குப் பிரியமானவைகளாக இருக்க வேண்டுமானால், நமது மனசாட்சி சுத்தமாக இருக்க வேண்டும். மறைவான பாவங்கள், பொய்கள், வஞ்சனைகள், மன்னிக்காத மனப்பான்மை ஆகியவை மனசாட்சியை கறைப்படுத்துகின்றன.
மனசாட்சி பேசும்போது அதை அலட்சியப்படுத்தக்கூடாது. சிறிய தவறுகளிலும் அது நம்மை எச்சரிக்க வேண்டும். வார்த்தையில் தவறினாலும், செயல்களில் தவறினாலும், உடனடியாக தேவனிடம் அறிக்கையிட்டு சரிசெய்துக்கொள்ள வேண்டும். மனசாட்சி தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கும்போது அதை அடக்கிவிட்டால், இருதயம் கடினமாகிவிடும்.
தானியேல் தனது எதிரிகளால் குற்றம் சுமத்த முடியாதவனாகக் காணப்பட்டான். காரணம், அவன் தேவனுக்கும் மனிதருக்கும் முன்பாக நேர்மையான வாழ்க்கை வாழ்ந்தான். (தானியேல் 6:4,22)
ஒவ்வொரு நாளும் நமது இருதயத்தை ஆராய்ந்து பார்க்க வேண்டும். யாரிடமாவது தவறு செய்திருந்தால் ஒப்புரவாக வேண்டும். யாரையும் மன்னிக்காமல் வைத்திருந்தால் மன்னிக்க வேண்டும். தேவனுடைய சமூகத்தில் சுத்தமான மனசாட்சியோடு நிற்க வேண்டும்.
உலகம் ஒருநாள் நம்மை மறந்துவிடலாம். மனிதர்கள் நம்மை ஒதுக்கிவிடலாம். ஆனால் தேவனுக்கு முன்பாக சுத்தமான மனசாட்சியுடன் வாழ்கிறவர்களை அவர் ஒருபோதும் கைவிடமாட்டார்.
ஆகவே, தேவப்பிள்ளையே, உன் மனசாட்சியை கறைப்படுத்த அனுமதிக்காதே. கிறிஸ்துவின் இரத்தத்தினால் கழுவப்பட்ட சுத்தமான மனசாட்சியோடு தேவனுக்கும் மனிதருக்கும் முன்பாக நடக்க முயற்சி செய். அதுவே பரிசுத்த வாழ்க்கையின் அடித்தளமாகும்.