சீனாவில் அங்கீகரிக்கப்படாத தளங்களில் மதப் பதிவுகளை வெளியிடவும், இணையம் வாயிலாக குழந்தைகளுக்கு மதப் போதனை வழங்கவும் தடை விதிக்கும் புதிய விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
சீனாவின் தேசிய மத விவகார நிர்வாகம் (National Religious Affairs Administration) செப்டம்பர் 15 அன்று இந்த புதிய விதிமுறைகளை வெளியிட்டது. ஏற்கனவே நடைமுறையில் உள்ள சட்டங்கள் மற்றும் விதிமுறைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இவை, இணையத்தில் மதம் தொடர்பான உள்ளடக்கங்களை வெளியிடுவதற்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கின்றன என்று மத உரிமைகள் தொடர்பான Bitter Winter இதழ் தெரிவித்துள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட தளங்களில் மட்டுமே மதப் போதனை
புதிய விதிமுறைகளின்படி, மதப் பணியாளர்கள் ஆன்லைனில் பிரசங்கம், மதக் கல்வி அல்லது பயிற்சிகளை வழங்குவது, அரசால் பதிவு செய்யப்பட்ட மத அமைப்புகளின் இணையதளங்கள், செயலிகள், மன்றங்கள் மற்றும் “Internet Religious Information Services License” பெற்ற தளங்கள் மூலமாக மட்டுமே இருக்க வேண்டும்.
தனிப்பட்ட சமூக வலைத்தள கணக்குகள், நேரலை ஒளிபரப்புகள், WeChat குழுக்கள் மற்றும் அதிகாரப்பூர்வமற்ற இணைய மன்றங்கள் மூலம் மதப் போதனை வழங்குவதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், மத அடையாளத்தை பயன்படுத்தி பின்தொடர்பவர்களை அதிகரிப்பது அல்லது இணையப் பார்வையாளர்களை ஈர்ப்பதும் தடைசெய்யப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கு மதப் போதனை வழங்கத் தடை
புதிய விதிமுறைகளின் 10வது பிரிவு, இணையம் வழியாக சிறார்களுக்கு மதக் கருத்துகளைப் பரப்புவதையும் அவர்களிடம் மத நம்பிக்கையை உருவாக்க முயற்சிப்பதையும் தடை செய்கிறது.
குழந்தைகளை மதக் கல்வி, பயிற்சி அல்லது மத முகாம்களில் பங்கேற்க ஏற்பாடு செய்வதற்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், இணையத்தில் மத நடவடிக்கைகளுக்காக நிதி திரட்டுதல், மதப் பொருட்களை விற்பனை செய்தல் அல்லது மத நடவடிக்கைகளை வணிகமாக்குதல் ஆகியவற்றுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Generative AI பயன்படுத்தி மதப் பிரசார உள்ளடக்கங்களை உருவாக்கவோ பரப்பவோ கூடாது என்றும் விதிமுறைகள் கூறுகின்றன.
வெளிநாட்டு மத அமைப்புகளுடன் தொடர்புக்கும் கட்டுப்பாடு
சீனாவுக்கு வெளியே உள்ள மத அமைப்புகள் அல்லது “வெளிநாட்டு மத ஊடுருவல்” நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிப்பது அல்லது அதில் பங்கேற்பதும் தடைசெய்யப்பட்டுள்ளது.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையை எதிர்க்கும், அரசின் அதிகாரத்தை கவிழ்க்கத் தூண்டும் அல்லது நாட்டின் ஒற்றுமை, சமூக நிலைத்தன்மை மற்றும் இன நல்லிணக்கத்தை பாதிக்கும் வகையிலான உள்ளடக்கங்களை இணையத்தில் வெளியிடக்கூடாது என்றும் விதிமுறைகள் தெரிவிக்கின்றன.
மதப் போதனைகள் “Sinicization” எனப்படும் சீனமயமாக்கல் கொள்கையுடன் இணங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் மதப் போதனைகள் சீன அரசின் கருத்தியல் மற்றும் சமூகக் கொள்கைகளுக்கு ஏற்ப இருக்க வேண்டும் என வலியுறுத்தப்படுவதாக Bitter Winter தெரிவித்துள்ளது.
நேரலை வழிபாடுகளுக்கும் கட்டுப்பாடு
13வது பிரிவின்படி, பதிவு செய்யப்பட்ட அதிகாரப்பூர்வ தளங்களைத் தவிர, மதப் பணியாளர்கள்:
- நேரலை ஒளிபரப்புகள்
- குறும்படங்கள்
- ஆன்லைன் கூட்டங்கள்
- WeChat குழுக்கள்
- WeChat Moments
போன்றவற்றின் மூலம் மதப் பிரசங்கம் செய்யக் கூடாது.
மேலும், ஆன்லைன் வழியாக வழிபாடு, மதச் சடங்குகள், திருமுழுக்கு (Baptism), வேதாகமப் பாடம், தியானம், “healing” உள்ளிட்ட மதத் தன்மை கொண்ட நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதற்கும் பங்கேற்பதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
ஆன்லைன் நிதி திரட்டவும் தடை
14வது பிரிவு, இணையம் வழியாக மத நடவடிக்கைகளுக்காக நிதி திரட்டுவதையும், மதக் கட்டிடங்களை அமைப்பதற்காக ஆன்லைனில் நன்கொடைகள் கோருவதையும் தடை செய்கிறது.
அதேபோல், பொருட்களை விற்பனை செய்தல், நேரலை விற்பனை, ஆன்லைன் வெகுமதிகள் பெறுதல் மற்றும் வணிக நிகழ்ச்சிகளில் பங்கேற்பது போன்ற நடவடிக்கைகளுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
மத அமைப்புகளின் உள்புற வெளியீடுகள் அல்லது சட்டவிரோதமாகக் கருதப்படும் மத வெளியீடுகளை இணையத்தில் பகிர்வதற்கும் 15வது பிரிவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
விதிகளை மீறினால் நடவடிக்கை
இந்த விதிமுறைகளை மீறும் மதப் பணியாளர்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் தங்கள் நடவடிக்கைகளை திருத்துமாறு உத்தரவிடப்படலாம்.
மீறல்கள் தொடர்ந்தால், இணைய தகவல் அலுவலகம், தொலைத்தொடர்பு துறை, காவல்துறை மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் உள்ளிட்ட துறைகளுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படும்.
கடுமையான சந்தர்ப்பங்களில், மத நடவடிக்கைகளை நிறுத்த உத்தரவிடுதல், மதப் பணியாளர் அந்தஸ்தை ரத்து செய்தல் மற்றும் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்தல் போன்ற தண்டனைகள் வழங்கப்படலாம்.
மேலும், விதிகளை மீறும் கணக்குகளை எச்சரித்தல், கட்டுப்படுத்துதல் அல்லது முழுமையாக மூடுதல் போன்ற நடவடிக்கைகளை ஆன்லைன் தளங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கும்.
வெளிநாட்டு மதப் பணியாளர்களுக்கும் பொருந்தும்
சீனாவைச் சேர்ந்த மதப் பணியாளர்கள் மட்டுமின்றி, வெளிநாட்டு இணையதளங்கள் மூலம் சீனாவில் ஆன்லைன் மத நடவடிக்கைகளை மேற்கொள்ளும் மதப் பணியாளர்களும் இந்த விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என 18வது பிரிவு குறிப்பிடுகிறது.
மேலும், ஹாங்காங், மக்காவ் மற்றும் தைவானைச் சேர்ந்த மதப் பணியாளர்கள், அத்துடன் வெளிநாட்டு மதப் பணியாளர்களும் சீனாவுக்குள் ஆன்லைன் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது இந்த விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்தவர்களுக்கு அதிகரிக்கும் சவால்கள்
இணையவழி ஊழியம் மற்றும் டிஜிட்டல் மதப் பிரசாரம் அதிகரித்து வரும் நிலையில், இந்த புதிய விதிமுறைகள் சீனாவில் மதச் சுதந்திரத்திற்கு மேலும் கட்டுப்பாடுகளை ஏற்படுத்தக்கூடும் என்று Bitter Winter தெரிவித்துள்ளது.
Open Doors வெளியிட்ட 2025 World Watch List-ல், கிறிஸ்தவர்களாக வாழ்வது மிகவும் கடினமான 50 நாடுகளில் சீனா 15வது இடத்தில் இருந்தது.
இந்த புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வருவதன் மூலம், சீனாவில் கிறிஸ்தவர்கள் இணையம் வழியாக தங்கள் விசுவாசத்தைப் பகிர்வதிலும், வழிபாடு மற்றும் மதக் கல்வியை ஆன்லைனில் மேற்கொள்வதிலும் மேலும் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை உருவாகியுள்ளது.