நீங்கள் நினையாத நேரத்தில் மனுஷகுமாரன் வருவார் (லூக்கா 12:40)
உங்கள் உள்ளத்தில் இயேசு வருகிறார் என்று எண்ணம் அடிக்கடி வருகிறதா ? ஏனென்றால் நாம் நினையாத நேரத்தில் (வருகையை) இயேசு வருவார் என்று வேதம் கூறுகிறது. இயேசுவின் வருகை ஒரு நிமிஷத்தில், ஒரு இமைப்பொழுதில் (கண் முடி திறக்கும் நேரம்) நடக்கும். அடிக்கடி வருகையை நினைக்க வேண்டும். இரவு நேரத்தில் தூக்கத்தில் எழுந்தால் கூட இயேசு வருவார் என்ற எண்ணம் வேண்டும்.
பூமிக்குரிய காரியங்கள் நம்மை அமிழ்த்து போடாதபடி பார்த்துக் கொள்ள வேண்டும். பூமிக்குரிய காரியங்கள் நம்மை பின்னிட்டு இழுக்காதபடி பார்த்துக் கொள்ள வேண்டும் (லோத்தின் மனைவி)
“கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மை அவரோடேகூட எழுப்பி, உன்னதங்களிலே அவரோடேகூட உட்காரவும் செய்தார்”
(எபேசியர் 2:7) இப்பொழுது நாம் இயேசுவுடன் உன்னதங்களில் அமர்ந்து இருக்கிறோம். அரண்மனையில் இருக்கிறவன் சாக்கடையை நினைக்கமாட்டான். உன்னதத்தில் உட்கார வைத்த உனது எண்ணம் எவ்வாறு உள்ளது ? “நமது இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய மகிமையின் பிரசன்னமாகுதலுக்கும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்படி நமக்குப் போதிக்கிறது (தீத்து 2:13) “இயேசு பரலோகத்திலிருந்து வருவதை நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறதையும் அறிவிக்கிறார்களே” (1 தெச 1:10). தெசலோனிக்கே சபையார் ஆண்டவருடைய வருகையை எதிர்பார்த்து ஜீவித்தார்கள் என்று மக்கெதோனியாவிலும் ஆகாயாவிலுள்ள விசுவாசிகள் சாட்சி கொடுத்தார்கள் (1 தெச 1:7). கொரிந்து சபையாரும் ஆண்டவர் வருகைக்கு காத்து இருந்தார்கள் “நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வெளிப்படுவதற்குக் காத்திருக்கிறீர்கள்” (1 கொரி 1:7)
உலக காரியங்களை (படிப்பு, வேலை, குடும்பம்) செய்து கொண்டே இருங்கள் ஆனால் அவைகள் மத்தியிலும் வருகையை நினைத்து கொண்டே இருக்க வேண்டும் (2 பேர் வயலில் – ஒருவன் ஏற்றுக் கொள்ளப்படுவான் (மத் 24:40). கைவிடப்பட்ட கூட்டத்தில் நாம் இருக்க கூடாது. அந்தகால பரிசுத்தவான்கள் ஒருவரை ஒருவர் பார்க்கும் போது “மாரநாதா” (இயேசு வருகிறார்) என்று கூறினார்கள். அவ்விதமான மோட்ச நாட்டின் தியானம் நம்மை இன்னும் அதிகமாக பரிசுத்தத்தில் வளரவும் நாம் பாவ கறை திரைகளை அகற்றி பூரண பரிசுத்தராகவும் நமக்கு உதவியாக இருக்கும்.
வருகையின் எண்ணம் இருந்தால்தான் வருகையில் எடுத்துக் கொள்ளப்பட முடியும். நான் நினைக்கும் நேரத்தில் கர்த்தர் வரமாட்டார். நினையாத நேரத்தில் வருவார். கர்த்தர் வருகையை மற்றவர்களுக்கு நாம் ஞாபகப்படுத்த வேண்டும்.
பாடுகளின் மத்தியில் யோபுவின் நினைவை பாருங்கள் “என் மீட்பர் கடைசி நாளில் பூமியின் மேல் நிற்பார்” (யோபு 19:25) “தேவன் தாமே கட்டி உண்டாக்கின அஸ்திபாரங்களுள்ள நகரத்துக்கு அவன் (ஆபிரகாம்) காத்திருந்தான்” (எபிரேயர் 11:10) முற்பிதாக்களின் எண்ணம் வருகை.
ஊழியர்களே ! ஆண்டவருடைய வருகையை “இயேசு வருகிறார்” என்று ஒவ்வொரு பிரசங்கத்திலும் உங்கள் சபை மக்களுக்கு சொல்லுங்கள். அடியேன் கடந்த இரண்டு வருடமாக சென்னையில் உள்ள ஒரு ஆவிக்குரிய சபைக்கு செல்கிறேன். சபை ஊழியர் ஒரு நாள்கூட ஆண்டவருடைய வருகையை பற்றி பேசியது கிடையாது. “இம்மைக்காக மாத்திரம் நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கையுள்ளவர்களாயிருந்தால், எல்லா மனுஷரைப்பார்க்கிலும் பரிதபிக்கப்படத்தக்கவர்களாயிருப்போம்” (1 கொரி 15:19)
பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுங்கள். (கொலோசெயர் 3:2)
இதோ சீக்கிரமாய் வருகிறேன் (வெளி 22:12)
உங்கள் இருதயங்கள் பெருந்திண்டியினாலும் வெறியினாலும் லவுகீக கவலைகளினாலும் பாரமடையாதபடிக்கும், *நீங்கள் நினையாத நேரத்தில்* அந்த நாள் உங்கள்மேல் வராதபடிக்கும் எச்சரிக்கையாயிருங்கள் (லூக்கா 21:34)