தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் அமைந்துள்ள 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பூண்டிமாதா பேராலய அன்னையின் பிறப்பு பெருவிழா, கொடியேற்றத்துடன் இன்று வெகு விமர்சையாக தொடங்கியது. இதையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், பிற மாநிலங்களிலிருந்தும் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.
பழமை வாய்ந்த பூண்டிமாதா பேராலயம்
திருக்காட்டுப்பள்ளியில் அமைந்துள்ள பூண்டிமாதா பேராலயம் பழமை வாய்ந்த கத்தோலிக்க திருத்தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. பசிலிக்கா அந்தஸ்து பெற்றுள்ள இந்த பேராலயத்தில், ஏசுபிரான் சிலுவையில் அறையப்பட்ட மரத்துண்டின் ஒரு பகுதி பக்தர்களின் அருளிக்கமாக வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பேராலயம் இத்தாலி நாட்டைச் சேர்ந்த கான்ஸ்டன்டைன் பெஸ்கி என்ற வீரமாமுனிவரால் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.
கொடியேற்றத்துடன் தொடங்கிய பெருவிழா
பூண்டிமாதா பேராலயத்தில் ஆண்டுதோறும் புனித அன்னை மரியாளின் பிறப்பு பெருவிழா நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான விழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.
இதையொட்டி, மாதாவின் உருவம் பொறிக்கப்பட்ட கொடி பேண்ட் வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து பேராலயம் முன்பு பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருந்த கொடிமரத்தின் முன்பாக சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
கும்பகோணம் மறைமாவட்ட ஆயர் ஜீவானந்தம் கொடியை புனிதம் செய்து, பிரம்மாண்ட கொடிமரத்தில் ஏற்றி வைத்தார்.
“மரியே வாழ்க… அன்னையே வாழ்க…”
கொடியேற்ற நிகழ்ச்சியின்போது அங்கு திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் பக்தி முழக்கங்களை எழுப்பி மாதாவை வழிபட்டனர்.
11 நாட்கள் நடைபெறும் திருவிழா
பூண்டிமாதா பேராலய அன்னையின் பிறப்பு பெருவிழா தொடர்ந்து 11 நாட்கள் நடைபெற உள்ளது. விழாவின் ஒவ்வொரு நாளும் சிறப்பு திருப்பலிகள் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வரும் செப்டம்பர் 8-ம் தேதி, மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, மல்லிகைப்பூ அலங்காரத்துடன் கூடிய ஆடம்பர தேர்பவனி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன.
பல்வேறு பகுதிகளில் இருந்து கிறிஸ்தவர்கள் பங்கேற்பு
கொடியேற்ற நிகழ்ச்சியில் பூண்டிமாதா பேராலய அதிபரும் பங்குத்தந்தையுமான சாம்சன், துணை அதிபர் ரூபன் அந்தோனிராஜ், பூண்டிமாதா தியான மைய இயக்குநர், உதவித்தந்தைகள், ஆன்மீகத்தந்தைகள், சுற்றுவட்டார பங்குத்தந்தையர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும், ஏராளமான பங்குமக்களும் விழாவில் பங்கேற்றனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களைச் சேர்ந்த கிறிஸ்தவர்களும் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.
பூண்டிமாதா பேராலயத்தில் தொடங்கியுள்ள அன்னையின் பிறப்பு பெருவிழா, அடுத்த 11 நாட்களும் சிறப்பு திருப்பலிகள் மற்றும் பல்வேறு ஆன்மிக நிகழ்வுகளுடன் நடைபெற உள்ளது.