படோக்கி, பஞ்சாப் | ஜூன் 22, 2026
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம், படோக்கி பகுதியில், குடிநீர் அருந்தியதற்காக 40 வயதுடைய கிறிஸ்தவத் தொழிலாளி சித்தி மசீஹ் (Siddique Masih) கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவம் மனித உரிமை ஆர்வலர்களையும், கிறிஸ்தவ சமூகத்தினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
குடிநீரே உயிரைப் பறித்த சோகம்
சித்தி மசீஹ் (சாதிக்) தனது அண்ணன் ரஃபிக்குடன் தினக்கூலி அடிப்படையில் செங்கல் ஏற்றும் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். கடந்த ஜூன் 22, 2026, கடுமையான கோடை வெயிலில் வேலை செய்த அவர், தாகம் தாளாமல் அங்கிருந்த பொதுப் பயன்பாட்டு தண்ணீர் குளிரூட்டியில் இருந்து குடிநீர் அருந்தினார்.
இதைக் கண்ட சக தொழிலாளியான அகமது வர்யாம், “நீ ஒரு கிறிஸ்தவன்; இந்தத் தண்ணீரைத் தொட்டு அசுத்தப்படுத்திவிட்டாய்” என்று கூறி அவருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
மற்ற தொழிலாளர்கள் இருவரையும் பிரித்து வைத்த சில நிமிடங்களிலேயே, மறைத்து வைத்திருந்த கத்தியால் அகமது வர்யாம், சித்தி மசீஹின் கழுத்தை அறுத்துக் கொடூரமாகக் கொலை செய்ததாக விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதரவற்ற குடும்பம்
சித்தி மசீஹ் தனது குடும்பத்தின் ஒரே வருமான ஆதாரமாக இருந்தார். அவரது மறைவால், மனைவியும் நான்கு குழந்தைகளும் வாழ்வாதாரமின்றி தவித்து வருகின்றனர்.
அவரது குழந்தைகளில் ஒருவருக்கு தலசீமியா (Thalassemia) நோய் இருப்பதால், இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை இரத்தமாற்று சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது. குடும்பத்தின் பொருளாதார நிலை தற்போது மிகுந்த கவலைக்கிடமாக உள்ளது.
மீண்டும் நினைவுக்கு வந்த ஷமா–ஷாஜாத் கொலை வழக்கு
இந்த சம்பவம், 2014 நவம்பர் 4 அன்று பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் கோட் ராதா கிஷான் பகுதியில் நிகழ்ந்த கொடூரமான ஷாஜாத் மசீஹ் மற்றும் அவரது ஐந்து மாத கர்ப்பிணி மனைவி ஷமா பிபி உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தை மீண்டும் நினைவூட்டியுள்ளது.
அந்த வழக்கில், கூட்டத்தினரால் செங்கல் சூளையில் உயிருடன் எரிக்கப்பட்ட இந்த தம்பதியரின் மரணம் உலகளவில் கடும் கண்டனத்தை ஏற்படுத்தியது.
ஆனால், அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த இறுதி மூன்று நபர்களை, போதுமான சாட்சிகளும் ஆதாரங்களும் இல்லை என்ற காரணத்தால் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் ஜூலை 2026-இல் விடுதலை செய்தது.
கிறிஸ்தவ சமூகத்தில் அதிர்ச்சி
ஒருபுறம் குடிநீர் அருந்தியதற்காக கிறிஸ்தவத் தொழிலாளி கொல்லப்பட்ட சம்பவமும், மறுபுறம் பல ஆண்டுகளாக நீதி எதிர்பார்த்திருந்த ஷமா–ஷாஜாத் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டோர் விடுவிக்கப்பட்டிருப்பதும், பாகிஸ்தானில் வாழும் கிறிஸ்தவ சிறுபான்மையினரிடையே ஆழ்ந்த சோகத்தையும் பாதுகாப்பின்மை உணர்வையும் ஏற்படுத்தியுள்ளது.
மனித உரிமை அமைப்புகள், மத அடிப்படையிலான வன்முறைகளைத் தடுக்கவும், சிறுபான்மை மக்களுக்கு உரிய பாதுகாப்பையும் நீதியையும் உறுதி செய்யவும் பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.