ஒரு மேடைப் பேச்சாளர் தனது உரையின் போது, தனது சட்டைப் பையிலிருந்து ஒரு 500 ரூபாய் நோட்டைப் எடுத்தார். அதை உயர்த்திக் காட்டி, “இது என்ன?” என்று பார்வையாளர்களைக் கேட்டார். உடனே அனைவரும் ஒரே சப்தமாக, “500 ரூபாய் நோட்டு” என்று பதிலளித்தனர்.
அவர் சிரித்தபடி அந்த நோட்டைப் பிடித்து நசுக்கி, தரையில் போட்டார். பின்னர் அதை எடுத்துக் காட்டி, “இப்போது இது என்ன?” என்று மீண்டும் கேட்டார். அப்போதும் அனைவரும், “இது 500 ரூபாய் நோட்டுதான்” என்று பதிலளித்தனர்.
அதன்பின் அவர் அந்த நோட்டின் மேல் முத்திரை குத்தி, “இப்போது இதன் மதிப்பு மாறிவிட்டதா?” என்று கேட்டார். அதற்கும் மக்கள் ஒரே சப்தமாக, “இல்லை, இது இன்னும் 500 ரூபாய்தான்” என்று பதிலளித்தனர்.
அப்போது அந்த மேடைப் பேச்சாளர் கூறினார்: “நாம் அந்த நோட்டைப் கசக்கியாலும், தரையில் போட்டாலும், முத்திரை குத்தினாலும், அது தன் மதிப்பை இழக்கவில்லை. அதுபோல, நாமும் வாழ்க்கையில் எத்தனை சோதனைகள் வந்தாலும், எத்தனை இழிவுகள் நேர்ந்தாலும், நம்முடைய மதிப்பையும் தனித்தன்மையையும் இழக்கக்கூடாது. சூழ்நிலை கள் மாறலாம்; ஆனால் நம் குணமும் அடையாளமும் மாறக்கூடாது.”
அவர் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென, “இந்த 500 ரூபாய் யாருக்கு வேண்டும்?” என்று கேட்டார். உடனே அங்கே இருந்த அனைவரும் தங்கள் கைகளை உயர்த்தி, “எனக்கு வேண்டும்” என்று ஆர்வமாகக் கூறினர்.
ஆனால் அந்த பெரிய கூட்டத்தில், ஒரே ஒரு இளம் வாலிபன் மட்டுமே திடீரென எழுந்து, மேடைக்கு ஓடி வந்து, அந்த 500 ரூபாயை எடுத்துக்கொண்டான்.
அதைப் பார்த்து பேச்சாளர் கூறினார்: “பார்த்தீர்களா? இந்த கூட்டத்தில் உள்ள அனைவருக்கும் அந்த 500 ரூபாய் வேண்டும். ஆனால் அதை பெறுவதற்கான நடவடிக்கை எடுத்தவர் ஒருவரே. வாய்ப்பு எல்லோருக்கும் கிடைக்கிறது; ஆனால் அதை பயன்படுத்திக் கொள்வது சிலருக்கே சாத்தியமாகிறது.”
அவர் தொடர்ந்து, “நம்மைச் சுற்றி வாய்ப்புகள் ஏராளமாக இருக்கின்றன. ஆனால் பலர் ‘வாய்ப்பு தானாக வந்து விழும்’ என்று காத்திருக்கிறார்கள். சிலர் மட்டும் துணிந்து முன்னேறி, அந்த வாய்ப்பை பிடித்து தங்கள் வாழ்க்கையை மாற்றிக் கொள்கிறார்கள்” என்று கூறி தனது உரையை முடித்தார்.
அந்த உரை முடிந்ததும், மக்கள் உற்சாகமாக கைதட்டி அவரது கருத்தை பாராட்டினர்.
இறைமக்களே, இந்த நிகழ்வு நமக்கு இரண்டு முக்கியமான உண்மைகளை கற்றுக்கொடுக்கிறது:
· முதலாவது நம் மதிப்பு.
· இரண்டாவது நம் வாய்ப்பு.
இந்த உலகத்தில் மனிதனைத் தவிர மற்ற எல்லாவற்றும் தங்களது இயல்பையும் மதிப்பையும் தக்கவைத்துக்கொள்கின்றன. ஆனால் மனிதன் தான் பல சமயங்களில் தனது மதிப்பை மறந்து, சூழ்நிலைகளுக்கேற்ப தன்னை மாற்றிக் கொள்கிறான்.
ஒரு காலத்தில் மனிதர்கள் தங்கள் தன்மானத்தைக் காக்கும் விதத்தில் வாழ்ந்தனர். தங்கள் மதிப்பிற்கு களங்கம் வந்தால், அதற்காக உயிரையும் தியாகம் செய்தார்கள். ஆனால் இன்று பலர் தங்கள் மதிப்பை இழந்து, உலகத்தின் பார்வைக்கேற்ப வாழ முயல்கிறார்கள். இதற்குக் காரணம் என்ன? அதை ஆராய்ந்தால் ஒரு உண்மை தெளிவாகிறது.
முன்னோர் காலத்தில் மனிதன் உலகத்தை ஆட்சி செய்தான். இன்று உலகமே மனிதனை ஆட்சி செய்கிறது. மனிதன் தனது மதிப்பை உலகத்திடம் ஒப்படைத்துவிட்டான். அதன் விளைவாக, உலகம் அவனது மதிப்பை சிதைத்து விட்டது.
இறைவேதத்தில் ஏசா தனது சேஷ்டபுத்திரபாக்கியத்தை மதிக்காமல் விற்றுவிட்டான். பின்னர் அதன் மதிப்பை உணர்ந்தபோது, அதை மீண்டும் பெற முடியவில்லை. ஆனால் யோசேப்பு, கடினமான சோதனை களிலும் கூட தன் நீதியையும் மதிப்பையும் காத்துக் கொண்டான். அதனால் தான் அவன் உயர்ந்த பதவிக்கு உயர்த்தப்பட்டான்.
அன்பான இறைமக்களே, நம்முடைய மதிப்பை காத்துக்கொள்வது நம்முடைய கையில் உள்ளது. அதை இழப்பதும், பாதுகாப்பதும் நம் தீர்மானங்களின் மூலம் தான்.
அதேபோல், நமக்குக் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வதும் நம்முடைய பொறுப்பு.
இறைவேதம் கூறுகிறது: “குறித்த காலத்துக்குத் தரிசனம் இன்னும் வைக்கப்பட்டிருக்கிறது; முடிவிலே அது விளங்கும்; அது பொய் சொல்லாது. அது தாமதித்தாலும் அதற்குக் காத்திரு; அது நிச்சயமாய் வரும்; அது தாமதிப்பதில்லை” (ஆபகூக் 2:3).
எனவே, உங்கள் மதிப்பை எக்காரணம் கொண்டும் இழக்காதீர்கள். உங்கள் வாய்ப்புகளை தவறவிடாதீர்கள். தேவன் கொடுத்த தனித்துவத்தையும் காலத்தையும் உணர்ந்து, உறுதியாய் முன்னேறுங்கள்.
– போதகர். பெ. பெவிஸ்டன்