ஒரு மலையின் அடிவாரத்தில், இரண்டு பாறைகள் நீண்ட காலமாக மழையிலும் காற்றிலும் கிடந்து வந்தன. காலப்போக்கில் அவற்றின் மேல் தூசி படிந்து, பாசி பிடித்து, அவை உயிரற்ற பொருள்களாக அசைவின்றி கிடந்தன. அந்த இரு பாறைகளில் ஒன்று தன்னுடைய நிலையை எண்ணி வருந்தத் தொடங்கியது.
“நாம் ஏன் இப்படியே ஒரு அவலட்சணமான கல்லாகவே கிடக்க வேண்டும்? வேறு ஒரு வடிவம் எடுக்க முடியாதா? உயர்ந்த நிலைக்கு மாற முடியாதா?” என்று அது சிந்தித்தது. அந்த எண்ணத்தை அது அருகில் இருந்த மற்றொரு பாறையுடன் பகிர்ந்தது.
அதை கேட்ட இரண்டாவது பாறை, “நாம் எங்கு இருந்தாலும், எப்படியிருந்தாலும் கல்லாகத்தான் இருப்போம். மாற்றம் தேவை இல்லை. இப்படியே அமைதியாக இருப்பதே நல்லது” என்று பதிலளித்தது. மாற்றத்திற்கான ஆசை முதல் பாறையின் உள்ளத்தில் வளர்ந்துகொண்டே இருந்தது; ஆனால் இரண்டாவது பாறை தனது பழைய நிலையை விட்டுச் செல்லத் தயங்கியது.
சில நாட்கள் கழித்து, சிற்பிகளைக் கொண்ட ஒரு குழு அந்த இடத்திற்கு வந்தது. அவர்கள் அங்கிருந்த பல பாறைகளையும் ஆராய்ந்து பார்த்தனர். இறுதியில், இந்த இரண்டு பாறைகளே சிறந்தவை என்று முடிவு செய்தனர். “நாளை வந்து இவ்விரு பாறைகளையும் எடுத்துச் செல்வோம்” என்று தலைமைச் சிற்பி கூறி சென்றார்.
அந்த இரவு முதல்பாறைக்கு மிகுந்த மகிழ்ச்சி. “நாம் எதிர்பார்த்த மாற்றம் வந்துவிட்டது! நாம் இனி ஒரு சிற்பமாக, ஒரு அழகான வடிவமாக மாறப்போகிறோம்!” என்று அது குதூகலித்தது. ஆனால் இரண்டாவது பாறை பயத்தால் நிறைந்திருந்தது. “அவர்கள் நம்மை சுத்தியால் அடிப்பார்கள், உளியால் செதுக்குவார்கள். அது மிகுந்த வலி தரும். நான் அந்த வேதனையை தாங்க முடியாது. எனவே அவர்கள் என்னை எடுத்துச் செல்ல முடியாதபடி நான் கடினமாக மாறி பூமியோடு ஒட்டிக்கொள்வேன்” என்று முடிவு செய்தது.
மறுநாள் சிற்பிகள் வந்தனர். அவர்கள் முதல்பாறையை எளிதாக எடுத்துச் சென்றனர். ஆனால் இரண்டாவது பாறை நிலத்தோடு ஒட்டிக்கொண்டிருந்ததால் அதை எடுக்க முடிய வில்லை. “ஒரு பாறையே போதும்” என்று எண்ணி, அவர்கள் முதல்பாறையை மட்டும் எடுத்துச் சென்றனர்.
அவர்கள் எடுத்துச் சென்ற அந்த பாறை பல சோதனைகளை சந்தித்தது. சுத்தியால் அடிக்கப்பட்டது. உளியால் செதுக்கப்பட்டது. பல முறை உடைக்கப்பட்டு மீண்டும் வடிவமைக்கப்பட்டது. அந்த எல்லா வலிகளையும் தாங்கிய பிறகு, அது ஒரு அழகான வீரச் சிலையாக மாறியது. மாற்றத்தை ஏற்றுக் கொண்டதால், அந்த பாறையின் உள்ளிருந்த “வீரன்” வெளிப்பட்டான்.
இந்நேரம், இரண்டாவது பாறை அதே இடத்தில் இருந்தது. மாற்றத்தைத் தவிர்த்ததால், அது எந்த உயர்வையும் அடையவில்லை. காலப்போக்கில், அது மலையேறும் மனித ர்களின் காலடிப் படியாக மாறிவிட்டது. அதன் உள்ளிலும் திறன் இருந்தது. அதிலும் ஒரு “வீரன்” மறைந்திருந்தான். ஆனால் மாற்றத்தை ஏற்காத மனப்பான்மை, அதை அந்த நிலையிலேயே நிறுத்திவிட்டது.
இறைமக்களே, இந்தக் கதை நமக்கு ஒரு ஆழமான உண்மையை கற்றுத்தருகிறது. வாழ்க்கையில் அனைவருக்கும் வாய்ப்புகள் வருகின்றன. ஆனால் அந்த வாய்ப்புகளை பயன்படுத்துவது, மாற்றத்தை ஏற்றுக்கொள்வது நம் மன நிலையைப் பொறுத்தது. மாற்றம் எப்போதும் சுலபமானது அல்ல. அது வலியையும் சோதனைகளையும் கொண்டதாக இருக்கும். ஆனால் அந்த வலிகளுக்குள் தான் வளர்ச்சி மறைந்து கிடக்கிறது. சோதனைகளைத் தவிர்க்க முயற்சித்தால், உயர்வையும் தவறவிட வேண்டி வரும்.
இன்றைய வாழ்க்கையில் பலர் சவால்களைப் பார்த்து பயந்து விடுகின்றனர். “இது கஷ்டம்”, “இது வலி தரும்”, “இதில் என்ன அவசியம்?” என்று எண்ணி முயற்சியை விட்டு விடுகின்றனர். ஆனால் அந்த சவால்களே நம்மை வடிவ மைக்கும் உளியாக இருக்கிறது என்பதை நாம் மறந்து விடுகிறோம்.
இறைமக்களே, உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை எதிர்பாருங்கள். சவால்களை எதிர்கொள்ளத் தயார் ஆகுங்கள். வாழ்க்கை மேடு பள்ளங்களால் நிரம்பியதே. ஆனால் அந்த பாதையில் முன்னேறும் மனப்பான்மை உள்ளவர்களே உயர்வை அடைகின்றனர். உங்களுக்குள் புதைந்து கிடக்கும் உள்ளாற்றலை வெளிக்கொணர வேண்டும். அதற்கு உங்கள் மனதை இறைவனுடைய வார்த்தைகளால் நிரப்புங்கள். அப்போது அந்த உள்ளாற்றல் பேராற்றலாக மாறும்.
இறைவேதம் கூறுகிறது: “இதோ, நான் புதிய காரியத்தைச் செய்கிறேன்; இப்பொழுதே அது தோன்றும்; நீங்கள் அதை அறியீர்களா? நான் வனாந்தரத்திலே வழியையும், அவாந்தர வெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவேன்” (ஏசாயா 43:19). மேலும், “பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி, கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்” (பிலிப்பியர் 3:14) என்று பக்தன் கூறியதுபோல, நாமும் முன்னேற்றத்தை நோக்கி ஓட வேண்டும்.
எனவே இறைமக்களே, மாற்றத்தை அஞ்சாதீர்கள். வலியைத் தவிர்க்காதீர்கள். சோதனைகளைத் தாங்குங்கள். அப்போது தான் உங்கள் வாழ்க்கை ஒரு சாதாரண கல்லாக அல்ல, ஒரு சிறப்பான சிற்பமாக மாறும். உங்களுக்குள் மறைந்திருக்கும் வீரனை வெளிக்கொணருங்கள்!
– போதகர். பெ. பெவிஸ்டன்