Alexander the Great உலக வரலாற்றில் மிகச் சிறந்த போர்வீரர்களில் ஒருவராக அறியப்படுகிறார். பல நாடுகளை வென்று, பேரரசுகளை நிறுவி, தனது வீரத்தால் உலகத்தை அச்சுறுத்தியவர். அவரது பெயர் வெற்றியின் அடையாளமாக இன்று வரை பேசப்படுகிறது. ஆனால் அவரது வாழ்க்கையின் இறுதி தருணத்தில் அவர் கூறிய ஒரு வேண்டுகோள், அவர் அடைந்த வெற்றிகளை விட ஆழமான உண்மையை வெளிப்படுத்துகிறது.
நோய்வாய்ப்பட்டு மரண படுக்கையில் இருந்தபோது, அவர் தனது தளபதிகளை அழைத்து, “நான் இறந்த பிறகு, என் கைகளை சவப்பெட்டியின் வெளியில் தெரியும் வகையில் அடக்கம் செய்யுங்கள்” என்று கேட்டார். இந்த விசித்திரமான வேண்டுகோளை கேட்ட தளபதிகள் ஆச்சரியமடைந்தனர். காரணம் என்ன என்று கேட்டபோது, அவர் அமைதியாக பதிலளித்தார்:
“உலகையே வென்ற நான், இந்த உலகிற்கு வெறும் கைகளோடு வந்தேன்; இப்போது போகும் போதும் வெறும் கைகளோடு தான் செல்கிறேன் என்பதை மக்கள் அறிய வேண்டும்.”
இந்த ஒரு வாக்கியம் மனித வாழ்க்கையின் மைய உண்மையை வெளிப்படுத்துகிறது. நாம் இந்த உலகிற்கு பிறக்கும் போது எதையும் கொண்டு வருவதில்லை. நாம் இறக்கும் போது எதையும் எடுத்துச் செல்ல முடியாது. ஆனால் அந்த இரண்டிற்கும் இடையில் கிடைக்கும் குறுகிய கால வாழ்க்கையில், மனிதன் பொருள்களுக்காக போராடுகிறான், போட்டியிடுகிறான், உறவுகளை இழக்கிறான்.
இன்றைய உலகில் மனிதன் மனிதனை மதிக்காத நிலை அதிகரித்துள்ளது. சின்ன விஷயங்களுக்காக கூட சண்டைகள், பிரிவுகள், பகைகள் உருவாகின்றன. ஆனால் இறுதியில், இந்த வாழ்க்கை நிலையற்றது என்பதை நாம் மறந்து விடுகிறோம்.
நாம் வாழும் வாழ்க்கையை சற்று சிந்தித்துப் பார்ப்போம். வாழ்க்கையின் ஒரு பகுதி தூக்கத்தில் செல்கிறது; மற்றொரு பகுதி கவலைகளிலும், ஆசைகளிலும், பதட்டங்களிலும் கழிகிறது. நம் மனதில் ஓடும் எண்ணங்களில் பல பயனற்றவை. அவை நமக்கு அமைதியை தராமல், சோர்வை மட்டுமே தருகின்றன.
இறைவேதமும் வாழ்க்கையின் நிலையற்ற தன்மையை தெளிவாக எடுத்துரைக்கிறது: மனிதன் புல்லைப் போலவும், ஒரு மலரைப் போலவும் இருக்கிறான்; சிறிது காலம் பூத்து, பின்னர் மறைந்து போகிறான்.
இதனால் நாம் புரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால், இந்த வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்க வேண்டும். சேர்ப்பதற்காக அல்ல, பகிர்வதற்காக வாழ வேண்டும்.
நாம் மட்டும் சந்தோஷமாக இருப்பது போதாது. நம்மைச் சுற்றியுள்ளவர்களும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். சுயநலத்தை விட்டுவிட்டு, அன்பையும் கருணையையும் வளர்க்க வேண்டும். பிறருக்காக வாழும் மனநிலையே உண்மையான வாழ்வு. ஆகையால், நாம் சேர்க்க முடியாதவற்றிற்காக வாழ்க்கையை வீணாக்காமல் “அன்பு, மரியாதை, உதவி, நன்றியுணர்வு” உள்ளிட்ட பகிரக் கூடியவற்றில் முதலீடு செய்ய வேண்டும்.
வெறும் கைகளோடு வந்தோம்;
வெறும் கைகளோடு போவோம்;
அதற்குள் அன்பை விதைப்போம்!
– போதகர். பெ. பெவிஸ்டன்