ஒரு கிராமத்தில் சடையன் என்ற ஆடு வியாபாரி வாழ்ந்து வந்தான். அவன் வாழ்க்கை மிகவும் எளிமையானது. ஆட்டுக் குட்டிகளை வாங்கி விற்று தான் அவன் குடும்பத்தை நடத்திக் கொண்டிருந்தான். ஒரு நாள் அவசரமாக ஒரு ஆட்டுக்குட்டி வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அதனால், அவன் தனது பன்னிரெண்டு வயது மகனிடம் பணம் கொடுத்து, பக்கத்து கிராமத்திற்குச் சென்று உடனடியாக ஒரு ஆட்டுக்குட்டி வாங்கி வரும்படி அனுப்பினான்.
சிறுவன் தந்தையின் வார்த்தையை ஏற்று, அந்த கிராமத் திற்குச் சென்று ஒரு நல்ல ஆட்டுக்குட்டியை வாங்கினான். அதை ஒரு சிறிய சாக்குப் பையில் வைத்து மகிழ்ச்சியுடன் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தான். அவன் தனது கடமையை நிறைவேற்றியதாக எண்ணி மனதளவில் சந்தோஷமாக இருந்தான்.
ஆனால் வீட்டிற்கு திரும்பும் வழியில், ஒரு இடத்தில் கால்பந்தாட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அந்த விளையாட்டின் உற்சாகம் அவனை கவர்ந்தது. சிறுவன் தன் கையில் இருந்த பையை கீழே வைத்துவிட்டு, அந்த விளையாட்டைப் பார்ப்பதில் முழுமையாக மூழ்கிப் போனான். தந்தை அவசரமாக கொடுத்த பணியும், அவன் மேற்கொண்ட பொறுப்பும் அவன் மனதில் இருந்து முற்றிலும் மறைந்துவிட்டது.
அந்த நேரத்தில், அங்கு இருந்த ஒரு குறும்புக் குழந்தை இந்தச் சூழ்நிலையை கவனித்தான். அவன் மெதுவாக அந்தச் சாக்குப் பையைத் திறந்து, உள்ளிருந்த ஆட்டுக் குட்டியை எடுத்துவிட்டு, அதற்குப் பதிலாக ஒரு நாய்க் குட்டியை வைத்து விட்டான். விளையாட்டு முடிந்ததும், சிறுவன் எதுவும் அறியாமல் பையை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு திரும்பினான்.
வீட்டிற்கு வந்தவுடன், அவன் பையைத் தந்தையிடம் கொடுத்தான். அதைத் திறந்து பார்த்த சடையன், அதில் நாய்க்குட்டி இருப்பதை கண்டு கடும் கோபமடைந்தான். அவன் மகனை திட்டியும் அடித்தும், “மீண்டும் சென்று சரியான ஆட்டுக் குட்டியை வாங்கி வா” என்று அனுப்பினான்.
சிறுவன் மீண்டும் அதே பாதையில் சென்றான். அங்கே இன்னும் கால்பந்தாட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அவன் மீண்டும் அதே தவறை செய்தான். பையை கீழே வைத்து, விளையாட்டைப் பார்க்கத் தொடங்கினான். மீண்டும் அதே குறும்புக் குழந்தை, நாய்க்குட்டியை எடுத்துவிட்டு, ஒரு ஆட்டுக்குட்டியை வைத்துவிட்டான். விளையாட்டு முடிந்ததும், சிறுவன் பையை எடுத்துக்கொண்டு வியாபாரியிடம் சென்று, “என்னை ஏமாற்றி விட்டார்கள்” என்று கோபத்துடன் கூறினான். ஆனால் பையைத் திறந்து பார்த்த வியாபாரி, அதில் ஆட்டுக்குட்டி இருப்பதை கண்டு, சிறுவனின் வார்த்தையை நம்பவில்லை. அவன் மீண்டும் மன வேதனையுடன் திரும்பி வந்தான். இங்கேயும் அவன் பாடம் கற்றுக்கொள்ளவில்லை. மீண்டும் விளையாட்டின் மீது ஈர்க்கப்பட்டு, பையை கீழே வைத்து விளையாட்டைப் பார்க்க ஆரம்பித்தான். இந்த முறை அந்த குறும்புக் குழந்தை, ஆட்டுக்குட்டியை எடுத்து விட்டு மீண்டும் நாய்க்குட்டியை வைத்துவிட்டான்.
வீட்டிற்கு வந்தபோது, பையைத் திறந்து பார்த்த தந்தை மீண்டும் கோபத்தில் வெடித்தான். சிறுவனை கடுமை யாகத் திட்டினான். இப்போது சிறுவனுக்கு எங்கு தவறு நடந்தது என்பது புரியவில்லை. அவன் குழப்பத்துடன், துன்ப த்துடன் நாய்க்குட்டியை நோக்கி, “ஏய் நாய்க்குட்டி! நீ நாய்க் குட்டியாகவே இரு, அல்லது ஆட்டுக்குட்டியாகவே இரு; இப்படி இரட்டை வேடம் போடாதே!” என்று கூறினான்.
இறைமக்களே, இந்தச் சம்பவம் சிரிப்பைத் தரக் கூடியதாக இருந்தாலும், அதில் மறைந்திருக்கும் உண்மை மிகவும் ஆழமானது. இங்கே இரண்டு முக்கியமான பாடங்கள் நமக்கு கிடைக்கின்றன.
முதலாவது பொறுப்பின்மை. அந்தச் சிறுவனுக்கு ஒரு பொறுப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் அவன் அதை அலட்சியப் படுத்தினான். வேலைக்கு பதிலாக வேடிக்கையை முன்னிலைப் படுத்தினான். அதன் விளைவாக, அவன் தொடர்ந்து பிரச்ச னைகளில் சிக்கிக்கொண்டான். வாழ்க்கையிலும் இதே போல் தான். நமக்கு கொடுக்கப்பட்ட பொறுப்புகளை நாம் கவனிக் காமல் விட்டால், அதன் விளைவுகளை நாமே அனுபவிக்க வேண்டி வரும்.
இரண்டாவது இரட்டை வாழ்க்கை. அந்தச் சிறுவன் நாய்க்குட்டியை நோக்கி சொன்ன வார்த்தைகள், நம்மை சிந்திக்க வைக்கின்றன. நம்மில் பலர் வாழ்க்கையில் இரட்டை வேடம் போடுகிறோம். ஆலயத்தில் நாம் மிகவும் அமைதியானவ ர்களாகவும், பக்தியுள்ளவர்களாகவும் தோன்றுகிறோம். ஆனால் வீட்டிலும், வேலை இடங்களிலும் முற்றிலும் மாறுபட்ட வர்களாக நடக்கிறோம்.
நம் வெளிப்புற வாழ்க்கையும், உள்ளார்ந்த வாழ்க் கையும் ஒன்றாக இல்லையென்றால், அது உண்மையான வாழ்க்கை அல்ல. அது ஒரு நடிப்பு. தேவன் இப்படிப்பட்ட வாழ்க்கையை விரும்புவதில்லை. அவர் விரும்புவது நம் உள்ளமும், நம் செயல்களும் ஒன்றாய் இருப்பது. இறைவேதம் கூறுகிறது: “தன் வேலையில் ஜாக்கிரதையாயிருக்கிறவனை நீ கண்டால், அவன் நீசருக்கு முன்பாக நில்லாமல், ராஜாக்களுக்கு முன்பாக நிற்பான்.” இந்த வசனம் நமக்கு பொறுப்புடனும் நேர்மையுடனும் வாழவேண்டிய அவசியத்தை நினைவூட்டுகிறது.
இறைமக்களே, நாம் எங்கு இருந்தாலும் ஒரே சுபாவத் துடன் இருக்க வேண்டும். வீட்டில் ஒரு விதம், வெளியே ஒரு விதம் என்ற வாழ்க்கை தேவனுக்குப் பிரியமல்ல. உண்மை யான மாற்றம் உள்ளத்திலிருந்து தொடங்க வேண்டும். ஆகையால், உங்கள் பொறுப்புகளை மதியுங்கள். உங்களுக்கு கொடுக்கப்பட்ட காரியங்களில் கவனமாக இருங்கள். உங்கள் வாழ்க்கையில் இரட்டை வேடம் இருக்காதபடி காத்துக் கொள்ளுங்கள். உள்ளமும் செயல்களும் ஒன்றாய் இருக்கும் நேர்மையான வாழ்க்கையை வாழுங்கள்.
முடிவாக, நாம் நினைவில் கொள்ள வேண்டியது இதுதான்:
· பொறுப்பின்மை பிரச்சினைகளை உருவாக்கும்
· இரட்டை வாழ்க்கை அமைதியை கெடுக்கும்
ஆனால், நேர்மையான மனமும், பொறுப்பான வாழ்க்கையும் நம்மை ஆசீர்வாதமான பாதைக்கு நடத்தும்.
– போதகர். பெ. பெவிஸ்டன்