மணிப்பூரைச் சேர்ந்த 54 வயதான கிதார் கலைஞரும் இசை ஆசிரியருமான சோங்தம் விக்ரம் சிங், தென்கிழக்கு டெல்லியின் கிலோகாரி கிராமத்தில் தான் வசித்து வந்த கட்டிடத்திற்குள் ஒரு கும்பலால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், திங்கள்கிழமை அதிகாலை உயிரிழந்தார்.
ஞாயிற்றுக்கிழமை இரவு தனது வாடகை வீட்டிற்கு வெளியே ஏற்பட்ட சத்தம் மற்றும் தொந்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட மோதலில் இந்த தாக்குதல் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
சுமார் 17 ஆண்டுகளாக டெல்லியில் வசித்து வந்த விக்ரம் சிங், தனியார் முறையில் இசை கற்பித்து வந்தார். ஞாயிற்றுக்கிழமை இரவு சுமார் 11.30 மணியளவில் குப்பையை வெளியே போடுவதற்காக தனது மூன்றாவது மாடி வீட்டிலிருந்து கீழே வந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
அப்போது, அருகில் செயல்பட்டு வரும் இரண்டு தாபாக்களில் பணிபுரியும் சிலர் அங்கு மது அருந்திக்கொண்டு சத்தம் எழுப்பியபடி இருந்ததாக கூறப்படுகிறது. அவர்களை அமைதியாக இருக்குமாறு சிங் கேட்டதைத் தொடர்ந்து அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், பின்னர் அந்த நிலைமை வன்முறையாக மாறியதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
வீட்டிற்குள் புகுந்து தாக்குதல்
மணிப்பூர் சமூக செயற்பாட்டாளர் பி. ருச்சிடா சர்மா கூறுகையில், அந்த நபர்கள் சிங்கை பின்தொடர்ந்து அவர் வசித்த மூன்றாவது மாடிக்குச் சென்றதாகவும், அங்குள்ள நடைபாதையில் அவரைப் பிடித்து தாக்கிவிட்டு பின்னர் தப்பிச் சென்றதாகவும் தெரிவித்துள்ளார்.
சிங்கின் 20 வயது மகனும் சட்டக்கல்லூரி மாணவருமான யைபாபா கூறுகையில், தனது தந்தை சத்தமிட்டுக் கொண்டிருந்ததையும், வீட்டின் முன்கதவைத் தட்டியபடி “தொங் ஹாங்கோ! தொங் ஹாங்கோ!” என்று அழைத்ததையும் கேட்டதாக தெரிவித்துள்ளார். மணிப்பூர் மொழியில் இதற்கு “கதவைத் திற” என்று பொருள்.
கதவைத் திறந்தபோது, தனது தந்தை மயக்க நிலையில் இருந்ததாகவும், அவரது சட்டை முழுவதுமாக கிழிக்கப்பட்டிருந்ததாகவும் யைபாபா கூறியுள்ளார்.
இதற்கு முன்பும் சத்தம் தொடர்பாக ஏற்பட்ட புகாரைத் தொடர்ந்து, தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படும் சிலர் தனது தந்தையை மிரட்டியதாகவும் யைபாபா காவல்துறையில் அளித்த புகாரில் தெரிவித்துள்ளார்.
சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
தாக்குதலுக்குப் பின்னர் சிங் ஒக்லாவில் உள்ள Holy Family Hospital மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அவரது ரத்த அழுத்தம் மிகவும் குறைந்திருந்ததால், மருத்துவர்களால் உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியவில்லை. சிகிச்சை பெற்று வந்த நிலையில் திங்கள்கிழமை காலை சுமார் 7 மணியளவில் அவர் உயிரிழந்தார்.
தாக்குதல் தொடர்பான அவசர அழைப்பு திங்கள்கிழமை அதிகாலை 1.38 மணிக்கு சன்லைட் காலனி காவல் நிலையத்திற்கு வந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இதையடுத்து, பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் பிரிவுகள் 103(2) மற்றும் 3(5) ஆகியவற்றின் கீழ் காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. ஐந்து அல்லது அதற்கு மேற்பட்டோர் ஒன்றிணைந்து, இனம், சாதி அல்லது சமூக அடிப்படையில் கொலை செய்வது உள்ளிட்ட குற்றங்களையும், பொதுவான நோக்கத்துடன் மேற்கொள்ளப்படும் குற்றங்களையும் இந்தப் பிரிவுகள் உள்ளடக்குகின்றன.
8 பேர் கைது
இந்த வழக்கில் பாரத் குமார் (19), பிரமோத் (26), ரம்ஜான் கான் (22), விஜய் (36), தீபான்ஷு (21), மோகன் விஸ்வகர்மா (32), மன்னு (26) ஆகிய ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், 15 வயது சிறுவன் ஒருவரும் பிடிபட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் அருகிலுள்ள தாபாக்களில் டெலிவரி அல்லது பேக்கிங் பணியாளர்களாக வேலை செய்து வந்ததாகவும், ஒருவர் பீட்சா விற்பனை நிலையத்தில் பணியாற்றி வந்ததாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
தாக்குதலுக்குப் பின்னர் அந்த நபர்கள் கட்டிடத்திலிருந்து வெளியேறிச் செல்லும் காட்சிகள் பதிவானதாகக் கூறப்படும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டுள்ளன. முன்னாள் மணிப்பூர் முதலமைச்சர் என். பிரேன் சிங்கும் அந்தக் காட்சிகளில் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
தாக்குதலுக்கான காரணம் குறித்து விசாரணை
தாக்குதலுக்கான சூழ்நிலை மற்றும் நோக்கம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.
தாக்குதலுக்கான காரணம் இன்னும் முழுமையாக உறுதி செய்யப்படவில்லை என்றும், சட்டப்படி தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. விசாரணையின் போது மேலும் பல உண்மைகள் தெரியவரும் என்றும் கூறப்பட்டுள்ளது.
சிங்கின் உடல் பிரேதப் பரிசோதனை அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (AIIMS) மேற்கொள்ளப்பட்டது.
வடகிழக்கு மாநில மக்களின் பாதுகாப்பு குறித்து கவலை
விக்ரம் சிங்கின் மரணம் அரசியல் ரீதியாகவும் கடுமையான எதிர்வினைகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, டெல்லியில் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த மக்களின் பாதுகாப்பு குறித்து மீண்டும் கவலை எழுந்துள்ளது.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, டெல்லியில் குறிப்பாக வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த மக்களுக்கு எதிராக அதிகரித்து வரும் சட்டவிரோத செயல்கள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சகமும் டெல்லி காவல்துறையும் இதுகுறித்து என்ன நடவடிக்கை எடுத்து வருகின்றன என்றும், தலைநகரில் வசிக்கும் வடகிழக்கு மாநில குடும்பங்கள் தங்களை பாதுகாப்பாக உணர முடியுமா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னாள் மணிப்பூர் முதலமைச்சர் என். பிரேன் சிங், விக்ரம் சிங்கின் மரணம் தன்னை மிகவும் வேதனைப்படுத்தியுள்ளதாக தெரிவித்து, டெல்லி காவல்துறை விரைவாக விசாரணை நடத்தி நீதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
மணிப்பூர் முதலமைச்சர் கெம்சந்த் யும்னாம் வெளியிட்ட அறிக்கையில், இசை மற்றும் மணிப்பூரின் கலாசார வாழ்க்கைக்கு விக்ரம் சிங் ஆற்றிய மதிப்புமிக்க பங்களிப்பு என்றும் நினைவுகூரப்படும் என்று தெரிவித்துள்ளார்.
முழுமையான விசாரணைக்கு கோரிக்கை
வடகிழக்கு மாணவர்கள் சங்கம், டெல்லி பல்கலைக்கழகம் மற்றும் வடகிழக்கு ஊடக மன்றம் ஆகியவை இந்தக் கொலைக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்த வழக்கில் நியாயமான மற்றும் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தலைநகரில் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த மக்களுக்கு எதிராக குறிவைத்து நடத்தப்படும் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருவதாக வெளியாகும் தகவல்கள் கவலை அளிப்பதாக வடகிழக்கு ஊடக மன்றம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த தாக்குதலுக்கு பின்னால் இன அல்லது அடையாள அடிப்படையிலான காரணம் இருக்கிறதா என்பதையும் விசாரணையாளர்கள் கருத்தில் கொள்ள வேண்டும் என்று அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
சன்லைட் காலனி காவல் நிலையத்திற்கு வெளியே வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த சமூகத்தினர் மற்றும் சிவில் சமூக அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தாக்குதலில் தொடர்புடைய அனைவரையும் கண்டறிந்து, அவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.
டெல்லியில் உள்ள மணிப்பூர் அமைப்புகள், பிரேதப் பரிசோதனை முடிந்திருந்தாலும், வழக்கு ஒரு முடிவுக்கு வரும் வரை விக்ரம் சிங்கின் உடலை மணிப்பூருக்கு அனுப்புவதை தாமதப்படுத்த விரும்புவதாக தெரிவித்துள்ளன.
எனினும், தாக்குதலுக்கு இன அடிப்படையிலான காரணம் இருந்தது என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை என்றும், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
இசை உலகில் விக்ரம் சிங்கின் பங்களிப்பு
மணிப்பூரில் இருந்த காலத்திலேயே விக்ரம் சிங் மேற்கத்திய இசைத் துறையில் தனக்கென ஒரு பெயரை உருவாக்கியிருந்தார்.
பின்னர் டெல்லிக்கு இடம்பெயர்வதற்கு முன்பு, Ultra Vires, Phoenix மற்றும் Eastern Dark உள்ளிட்ட இசைக்குழுக்களில் முன்னணி கிதார் கலைஞராக அவர் பணியாற்றியுள்ளார்.
டெல்லியில் அவர் Rock’n’Roots என்ற இசைத் திட்டத்திலும் பங்கேற்றார். ராஜஸ்தானைச் சேர்ந்த நாட்டுப்புற இசைக் கலைஞர் மாமே கானுடன் இணைந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.
மேலும், பல ஆண்டுகளாக பல்வேறு இசை நிகழ்ச்சிகள் மற்றும் கலாசார நிகழ்வுகளில் மற்ற கலைஞர்களுடன் இணைந்து அவர் பங்கேற்றுள்ளார்.
தனக்கென சிறிய இசைப் பள்ளியையும் நடத்தி வந்த அவர், டெல்லி ஸ்கூல் ஆஃப் மியூசிக்கிலும் பல ஆண்டுகளாக இசை கற்பித்து வந்தார்.
இசைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்
விக்ரம் சிங்கின் குடும்பத்திலும் இசைக்கு முக்கிய இடம் இருந்தது.
அவரது 86 வயதான தாயார் சோங்தம் ஒங்பி கமலா தேவி, பாரம்பரிய மற்றும் சமகால மணிப்பூர் இசைப் பாடகியாக தனக்கென ஒரு பெயரைப் பெற்றவர்.
அவரது 96 வயதான தந்தை டாக்டர் சோங்தம் பிரேந்திர சிங், மகன் உயிரிழந்த தகவலை இதுவரை அறியவில்லை. வயது முதிர்ந்த தந்தைக்கு இந்த அதிர்ச்சியைத் தாங்க முடியாது என்று குடும்பத்தினர் அஞ்சுவதால் அவரிடம் தகவல் தெரிவிக்கவில்லை என்று அவரது சகோதரர் விவேக் தெரிவித்துள்ளார்.
விக்ரம் சிங்கின் தாயாரும் மகனின் மரணத்தால் மிகுந்த துயரத்தில் இருப்பதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், திரைப்பட இயக்குநர் லட்சுமிப்ரியா தேவியும் அவரது உறவினராவார். அவர் இயக்கிய ‘Boong’ திரைப்படம், BAFTA விருதை வென்ற முதல் இந்திய தயாரிப்பாக குறிப்பிடப்படுகிறது.
விக்ரம் சிங்கிற்கு அவரது மனைவி ஜ்யோத்ஸ்னா மற்றும் 20 வயதான மகன் யைபாபா ஆகியோர் உள்ளனர். ஜ்யோத்ஸ்னா ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் மூத்த ஆலோசகர் பொறுப்பில் பணியாற்றி வருகிறார்.