தங்கத்தை தனக்குத் தேவையான அழகிய வடிவத்திற்குக் கொண்டு வர, தங்கக் கொல்லன் அதைச் சுத்தியலால் மீண்டும் மீண்டும் அடித்துக்கொண்டிருந்தான். ஒவ்வொரு அடியும் தங்கத்தின் மீது விழுந்தபோதும், அது பெரிய சத்தம் எதுவும் எழுப்பவில்லை. அமைதியாக அந்த வலியைத் தாங்கிக்கொண்டு, கொல்லன் விரும்பிய அழகிய வடிவமாக மாறிக்கொண்டிருந்தது.
அதே நேரத்தில், ஒரு இரும்புத் துண்டை ஒரு குறிப்பிட்ட வடிவத்திற்குக் கொண்டு வர, இரும்புச் சுத்தியலால் அதை அடிக்கத் தொடங்கினார்கள். ஒவ்வொரு முறையும் சுத்தியல் இரும்பின் மீது விழும்போது, “டமார்… டமார்…” என்று அந்த இடமே அதிரும் அளவுக்குப் பெரும் சத்தம் கேட்டது.
இதைக் கவனித்த தங்கம் இரும்பிடம், “உன்னையும் என்னையும் சுத்தியலால் அடிக்கிறார்கள். ஆனால் நான் அமைதியாக இருக்கிறேன். நீ ஏன் ஒவ்வொரு அடிக்கும் இவ்வளவு சத்தமிட்டு கதறுகிறாய்?” என்று கேட்டது.
அதற்கு இரும்பு அமைதியாகப் பதிலளித்தது: “தங்கமே, உன்னை அடிப்பவன் உன் இனத்தைச் சேர்ந்தவன் அல்ல. அதனால் அந்த அடியின் வலியை உன்னால் ஒருவிதமாகத் தாங்கிக்கொள்ள முடிகிறது. ஆனால் என்னை அடிப்பவன் அந்நியன் அல்ல; என்னைப் போன்ற அதே இரும்பால் செய்யப்பட்டவன். என்னைப் போன்றவனே என்னை ஓங்கி அடிக்கிறான். ஒரே இனம்… ஒரே தன்மை… என்னைப் போன்றவனிடமிருந்தே வரும் அடி என்பதால்தான் அந்த வலி இன்னும் அதிகமாக உணரப்படுகிறது.
அந்நியன் கொடுக்கும் காயத்தைவிட, நம்மைச் சேர்ந்தவன் கொடுக்கும் காயம்தான் இருதயத்தில் ஆழமாகப் பதிகிறது. ஏனென்றால் அந்நியனிடம் நாம் எதிர்பார்ப்பதில்லை; ஆனால் நம்முடையவர்களிடம் அன்பையும், நம்பிக்கையையும், ஆதரவையும் எதிர்பார்க்கிறோம்.”
இரும்பின் வார்த்தைகளைக் கேட்ட தங்கம் அமைதியாக இருந்தது.
இறைமக்களே, நம் வாழ்க்கையிலும் இப்படித்தான். வெளியிலிருந்து வரும் காயங்களைவிட, நம்மை நம்பியவர்களிடமிருந்து வரும் காயங்கள்தான் அதிகமாக வலிக்கின்றன. அந்நியன் சொல்லும் ஒரு கடுமையான வார்த்தையை நாம் சில நேரங்களில் எளிதாகக் கடந்து சென்றுவிடலாம். ஆனால் நம்முடையவர் சொல்லும் ஒரு வார்த்தை, பல நாட்கள் கடந்தாலும் மனதை விட்டு விலகுவதில்லை.
நாம் அதிகமாக நேசித்தவர்களிடமிருந்து வரும் ஏமாற்றம்… நாம் நம்பியவர்களிடமிருந்து வரும் துரோகம்… நம்முடையவர்களிடமிருந்து வரும் புறக்கணிப்பு… நாம் எதிர்பார்த்தவர்களிடமிருந்து கிடைக்கும் நிராகரிப்பு… இவை அனைத்தும் வெளியில் தெரியாத காயங்களை இருதயத்தில் ஏற்படுத்துகின்றன.
சில காயங்களுக்கு மருந்து போடலாம். ஆனால் சில வார்த்தைகளால் ஏற்பட்ட காயங்களுக்கு எந்த மருந்தையும் உடனடியாகக் கண்டுபிடிக்க முடியாது. ஏனென்றால் அது உடலில் ஏற்பட்ட காயம் அல்ல; இருதயத்தில் ஏற்பட்ட காயம். ஆனால், அந்தக் காயத்திலேயே நம் வாழ்க்கை முடிந்துவிட வேண்டியதில்லை.
தங்கத்தின் மீது விழுந்த ஒவ்வொரு சுத்தியல் அடியும் அதை அழிப்பதற்காக அல்ல; அதை ஒரு அழகான வடிவமாக மாற்றுவதற்காக. அதுபோல, நம்முடைய வாழ்க்கையில் விழும் ஒவ்வொரு அடியும் நம்மை அழிப்பதற்காகவே வந்தது என்று நினைக்க வேண்டியதில்லை.
சில அனுபவங்கள் நம்மை உடைக்கலாம். சில மனிதர்கள் நம்மை காயப்படுத்தலாம். சில வார்த்தைகள் நம்மை அழவைக்கலாம். சில புறக்கணிப்புகள் நம்மை தனிமையாக உணரச் செய்யலாம். ஆனால், அவற்றின் வழியாகவே தேவன் நம்மை இன்னும் வலிமையானவர்களாகவும், பொறுமையானவர்களாகவும், முதிர்ச்சியானவர்களாகவும் மாற்றுகிறார். எனவே, உன்னை காயப்படுத்தியவர்களின் செயலால் உன் மதிப்பை அளவிடாதே.
ஒருவர் உன்னை நிராகரித்ததால் நீ மதிப்பற்றவன் அல்ல. ஒருவர் உன்னைப் புறக்கணித்ததால் நீ தேவையற்றவன் அல்ல. ஒருவர் உன்னைப் புரிந்துகொள்ளாததால் உன் வாழ்க்கைக்கு அர்த்தமில்லை என்று நினைக்காதே. மனிதர்கள் உன்னை உடைத்த இடத்தில், தேவன் உன்னை வலிமையான வடிவமாக்க முடியும்.
நம்மை காயப்படுத்தியவர்களை நினைத்து வாழ்ந்துகொண்டே இருப்பது, நம்முடைய காயத்தை மீண்டும் மீண்டும் திறப்பதற்குச் சமம். அதற்குப் பதிலாக, அந்தக் காயத்தை தேவனுடைய கரங்களில் ஒப்படைக்க வேண்டும்.
மன்னிப்பது என்பது நடந்த நிகழ்வை சரி செய்வதற்கு மட்டுமல்ல. நமக்கு ஏற்பட்ட வலியை மறந்துவிடுவதும் அவசியப்படுகிறது.
தங்கம் சுத்தியலின் அடியால் அதன் மதிப்பை இழக்கவில்லை; மாறாக, அந்த அடிகளுக்குப் பிறகுதான் அதன் அழகும் மதிப்பும் வெளிப்பட்டது. அதுபோல, உன் வாழ்க்கையில் விழுந்த ஒவ்வொரு அடியும் உன்னை அழிக்க வந்தது என்று நினைக்காதே. சில அடிகள் உன்னை இன்னும் அழகான மனிதனாக மாற்றியிருக்கலாம். சில காயங்கள் உனக்குள் இருந்த வலிமையை வெளிக்கொண்டு வந்திருக்கலாம். சில புறக்கணிப்புகள், உன் உண்மையான மதிப்பு மனிதர்களின் அங்கீகாரத்தில் இல்லை என்பதை கற்றுக்கொடுத்திருக்கலாம்.
உன்னை காயப்படுத்தியவர்கள் உன் கதையின் ஒரு அத்தியாயமாக இருக்கலாம்; ஆனால் அவர்கள் உன் முழு கதையல்ல.
இன்று உன் இருதயத்தில் யாரோ ஒருவர் ஏற்படுத்திய காயம் இருக்கலாம். நீ நம்பிய ஒருவர் உன்னை ஏமாற்றியிருக்கலாம். நீ நேசித்த ஒருவர் உன்னைப் புறக்கணித்திருக்கலாம். உனக்குச் சொந்தமானவர் என்று நினைத்த ஒருவரே உன்னை காயப்படுத்தியிருக்கலாம். அந்த வலியில் நின்றுவிடாதே.
“நீங்கள் நன்மைசெய்து பாடுபடும்போது பொறுமையோடே சகித்தால் அதுவே தேவனுக்குமுன்பாகப் பிரீதியாயிருக்கும்.” (1 பேதுரு 2:20) இறைவேதாகமம் சொல்லுகிறது. எனவே, மனிதர்களால் வந்த காயங்களை, தேவனுடைய கரங்களில் ஒப்படைத்துவிடு. இன்று உன்னை அழவைத்த அனுபவமே, நாளை இன்னொருவரின் கண்ணீரைத் துடைக்கும் அனுபவ ஆறுதலாக மாறும்.
அருள்முனைவர். பெ. பெவிஸ்டன்