ஒரு கிராமத்தில் இரண்டு விவசாய நண்பர்கள் வாழ்ந்து வந்தனர். அவர்களிடம் நீண்ட நாட்களாகப் பயிரிடப் படாமல் இருந்த ஒரு தரிசு நிலம் இருந்தது. அந்த ஆண்டில் நல்ல மழை பெய்ததால், அந்த நிலத்தில் ஏதாவது பயிரிட்டால் நல்ல விளைச்சல் கிடைக்கும் என அவர்கள் எண்ணினர். ஆலோசித்த பின் தக்காளி பயிரிட முடிவு செய்து மறுநாளே உற்சாகமாக வேலையைத் தொடங்கினர். நிலத்தை தயார் செய்து விதைகளை விதைத்தனர். சில நாட்களில் செடிகள் முளைத்து வளரத் தொடங்கின.
அப்போது முதல் விவசாயி தனது தோட்டத்தை மிகுந்த கவனத்துடன் பராமரிக்கத் தொடங்கினான். தோட்டத்தைச் சுற்றி வலுவான வேலியைக் கட்டினான். அவ்வப்போது வந்து களைகளை பிடுங்கி அகற்றினான். தினமும் சரியான நேரத்தில் நீர் பாய்ச்சினான். அவன் உழைப்பும் பொறுப்பும் அந்த தோட்டத்தில் தெளிவாக வெளிப்பட்டது.
ஆனால் இரண்டாவது விவசாயி இவற்றைக் கண்டு கிண்டலாகப் பேசினான். “இதற்கெல்லாம் இவ்வளவு சிரமம் வேண்டுமா? வேலி போட வேண்டுமா? களை பிடுங்க வேண்டுமா? தண்ணீர் ஊற்றினால் போதுமே!” என்று அவன் அடிக்கடி முதல் விவசாயியை ஏளனப்படுத்தினான். அவன் தனது தோட்டத்தை குறைந்த கவனத்தோடு வைத்திருந்தான்.
காலம் கடந்தது. இரண்டு தோட்டங்களிலும் தக்காளி செடிகள் நன்றாக வளர்ந்து காய்த்து குலுங்கின. தினமும் மாலை இருவரும் தோட்டங்களைப் பார்வையிட்டனர். அப்போது இரண்டாவது விவசாயி பெருமையாக, “பார்! நான் வேலி போடவில்லை, களை பிடுங்கவில்லை. ஆனாலும் என்னுடைய தோட்டமும் உன்னுடையதைப் போலவே காய்த்திருக்கிறது. நீ செய்த உழைப்பு வீணானது” என்று மீண்டும் ஏளனம் செய்தான்.
ஒருநாள் அவர்கள் ஆலோசித்து, “இப்போது காய்கள் முழுவதும் முற்றிவிட்டன. நாளை அதிகாலையில் வந்து பறித்து சந்தைக்கு கொண்டு போவோம்” என்று முடிவு செய்தனர். மறுநாள் அதிகாலையில் சாக்குகளுடன் தோட்டத்திற்கு வந்த போது, அவர்களை ஒரு அதிர்ச்சியான காட்சி எதிர்கொண்டது. வேலி இல்லாத இரண்டாவது விவசாயியின் தோட்டம் முழுவதும் சிதைந்திருந்தது. அதில் இருந்த அனைத்து தக்காளிகளும் யாரோ வந்து பறித்து கொண்டு போயிருந்தனர். தோட்டம் அலங்கோலமாக கிடந்தது.
நெடுநாளாக அந்த தோட்டத்தை யாரோ கவனித்து, சரியான நேரத்தில் வந்து அனைத்தையும் எடுத்துச்சென்றிருந் தனர். வேலி இல்லாததால் எந்த தடையும் இல்லாமல் அவர்கள் தங்கள் காரியத்தைச் செய்துவிட்டனர். இதைக் கண்ட இரண்டாவது விவசாயி மிகுந்த துக்கமடைந்தான். தன் அலட்சியத்தின் விளைவாக இழந்ததை உணர்ந்து மன வேதனையுடன் அங்கிருந்து திரும்பினான்.
இறைமக்களே, இந்தச் சம்பவம் நமக்கு ஒரு ஆழமான ஆன்மீக உண்மையை உணர்த்துகிறது. இறைவேதம், “எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள்; அதனிடத் தினின்று ஜீவஊற்று புறப்படும்” (நீதிமொழிகள் 4:23) என்று கூறுகிறது. நம் இருதயத்தை காக்க வேண்டியது மிக முக்கியமானது. தேவனுடைய வார்த்தைகளை நம் உள்ளத்தில் பதித்து வைத்திருக்க வேண்டும். சோதனைகள் வரும் போது அவற்றை பயன்படுத்தி நம்மை காத்துக் கொள்ள வேண்டும்.
இயேசு கிறிஸ்து கூட பிசாசின் சோதனைகளை எதிர் கொண்டபோது, தனது வல்லமையால் அல்ல, தேவனுடைய வார்த்தைகளால் அதை வென்றார். “மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படும் ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்” என்று சொல்லி சோதனையை ஜெயித்தார். இதுவே நமக்கும் ஒரு முன்னுதாரணம்.
நல்ல அறுவடையைப் பாதுகாக்க வேலி அவசியமானது போல, நமது வாழ்க்கையையும் காக்க ஆன்மீக வேலி அவசியமாகிறது. நமது சிந்தனை, கண்கள், காதுகள், வார்த்தைகள், செயல்கள் இவற்றையெல்லாம் கட்டுப்பாட்டுடன் காக்க வேண்டும். கட்டுப்பாடின்றி விடப்பட்ட மனம் எளிதில் சோதனைகளுக்கு இரையாகிவிடும்.
ஆகையால், தேவனுடைய வசனம் என்னும் வேலியினால் நம்மை பாதுகாப்போம். நமது வாழ்க்கையை பரிசுத்தமாக வைத்துக் கொள்வோம். அப்போது நம்முடைய வாழ்க்கை பலருக்கும் சாட்சியாக மாறும். தேவன் நம்மை உயர்த்துவார். அவரை பின்பற்றி தீமையிலிருந்து விலகி வாழும் நமக்கு, முடிவு நிச்சயமாக ஜீவ ஊற்றைப்போல ஆசீர்வாதமாக இருக்கும்.
– போதகர். பெ. பெவிஸ்டன்