வாழ்க்கையில் நாம் பல நேரங்களில் நிராகரிப்பைச் சந்திக்க நேரிடுகிறது. ஒருவரின் “இல்லை” என்ற ஒரு வார்த்தை கூட சில சமயங்களில் நம்மை மனதளவில் அதிர்ச்சியடையச் செய்யலாம். குறிப்பாக காதல், வேலை, நட்பு போன்ற முக்கியமான உறவுகள் மற்றும் வாய்ப்புகளில் ஏற்படும் நிராகரிப்புகள், உள்ளத்தை ஆழமாகப் புண்படுத்தக்கூடியவை. அந்த வலி சில நேரங்களில் நம்முடைய மதிப்பையே சந்தேகிக்கச் செய்கிறது. ஆனால், ஒவ்வொரு நிராகரிப்பிற்குப் பின்னாலும் ஒரு ஆழமான உண்மை மறைந்திருக்கிறது என்பதை நாம் உணர வேண்டும்.
ஒரு துணிக்கடையில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் நூற்றுக்கணக்கான ஆடைகளில், சிலவற்றே நம் கவனத்தை ஈர்க்கின்றன. மற்ற ஆடைகள் அழகாக இருந்தாலும், அவை நமக்கானதாக இருக்காது. அவை யாரோ மற்றொருவருக்காகத் தான் உருவாக்கப்பட்டவை. இதுபோலத்தான் வாழ்க்கையும். யாரோ ஒருவர் உங்களை நிராகரிக்கிறார் என்றால், அது நீங்கள் குறைவானவர் என்பதற்கான அடையாளமல்ல; மாறாக, நீங்கள் அவர்களுக்கு பொருத்தமானவர் அல்ல என்பதற்கான ஒரு எளிய உண்மை மட்டுமே.
அந்த நிராகரிப்பை ஒரு தோல்வியாகக் கருதாமல், ஒரு புதிய தொடக்கத்தின் வாய்ப்பாகக் காண வேண்டும். ஒதுக்கப்பட்ட ஒரு துணி யாருக்கோ சரியாக பொருந்துவது போல, உங்களையும் முழுமையாக ஏற்றுக்கொள்ளும் ஒருவர் இந்த உலகத்தில் இருக்கிறார். உங்கள் தனித்துவத்தையும் திறமைகளையும் மதிக்கத் தெரியாதவர்களுக்காக துக்கப்பட வேண்டியதில்லை. உங்கள் மதிப்பு, பிறர் ஏற்றுக்கொள்ளும் அளவினால் நிர்ணயிக்கப்படுவதில்லை.
நீங்கள் உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள். உங்கள் இலக்குகளை நோக்கி தொடர்ந்து முன்னேறுங்கள். வாழ்க் கையின் பாதையில் சில கதவுகள் மூடப்படுவது, மற்ற சிறந்த கதவுகள் திறக்கப்படுவதற்கான முன்னோட்டமாக இருக்கலாம். ஒரு நாள், உங்களை முழு மனதுடன் ஏற்றுக் கொள்ளும் நபரோ அல்லது உங்களுக்கு உரிய வாய்ப்போ உங்களைத் தேடி வரும். எனவே நிராகரிப்புகளை தடைகளாக அல்ல, வழி காட்டும் அடையாளங்களாகப் பார்க்கக் கற்றுக் கொள்ளுங்கள்.
இறைமக்களே, நிராகரிப்பின் வலியை மிகவும் ஆழமாக அனுபவித்தவர் இயேசு கிறிஸ்து தான். இறைவேதம், “இயேசு தம்முடையவரிடத்தில் வந்தார்; ஆனால் அவருடையவர்கள் அவரை ஏற்கவில்லை” (யோவான் 1:11) என்று கூறுகிறது. உலகத்தை நேசித்தவரையே உலகம் நிராகரித்தது. ஆகையால் உங்கள் ஏமாற்றங்களையும், அவமானங்களையும், தோல்வி களையும் நீங்கள் சொல்லுவதற்குமுன்பே, அவற்றின் பாரத்தை இயேசு அறிந்திருக்கிறார்.
சில நேரங்களில் உங்கள் வாழ்க்கைப் பயணத்தில் உங்களுடன் இருந்தவர்கள், சோதனைக் காலத்தில் உங்களை மறந்துவிடலாம். சிலர் மறந்தது போல நடிக்கவும் கூடலாம். ஆனால் அதற்காக மனம் உடைய வேண்டாம். இறைவன் கொடுத்த வாக்குறுதி உறுதியானது:
“நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவனும் உனக்கு
முன்பாக எதிர்த்து நிற்பதில்லை நான் உன்னைவிட்டு
விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை”
(யோசுவா 1:5).
மனிதர்கள் தங்கள் வாக்குறுதிகளை மறந்துவிடலாம். ஆனால் நேற்றும் இன்றும் என்றும் மாறாத இறைவன் இயேசு, உங்களை ஒருபோதும் மறப்பதில்லை; உங்களை விட்டுப் பிரிவதுமில்லை. ஆகையால் நிராகரிப்பின் மறுபக்கத்தில் இறைவனின் அன்பை காண கற்றுக்கொள்ளுங்கள். இன்று நீங்கள் நிராகரிக்கப்பட்ட இடத்திலேயே, ஒருநாள் நீங்கள் மதிக்கப்படும் நிலைக்கு உயர்த்தப்படுவீர்கள்.
நினைவில் கொள்ளுங்கள் வலி என்பது வீழ்ச்சிக்கான காரணம் அல்ல; அது வலிமைக்கு வழிவகுக்கும் ஒரு பயிற்சி. காயப்படுத்தும் அனுபவங்களே, நம்மை உறுதியானவர்களாக மாற்றுகின்றன. ஆகவே தளராதீர்கள். உங்கள் பயணத்தை தொடருங்கள். தேவன் உங்களை சரியான நேரத்தில் சரியான இடத்தில் நிலைநிறுத்துவார்.
– போதகர். பெ. பெவிஸ்டன்