ஒரு கிராமத்தில் கடவுளை மிகவும் பக்தியுடன் சேவித்த ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் வாழ்க்கை முழுவதும் இறைவனைச் சார்ந்திருந்தது. எந்நேரமும் ஜெபமும் தியானமும் அவன் வாழ்வின் ஒரு பகுதியாக இருந்தது. “என்னை எல்லா சூழ்நிலைகளிலும் இறைவன் காத்துக் கொள்வார்” என்ற உறுதியான நம்பிக்கை அவன் உள்ளத்தில் ஆழமாக பதிந்திருந்தது.
ஒருநாள் அந்த கிராமத்தில் கடும் மழை பெய்தது. புயலும் அதனைத் தொடர்ந்து பெருவெள்ளமும் ஏற்பட்டது. கிராமம் முழுவதும் தண்ணீர் சூழ்ந்தது. உயிர் பிழைக்க கிராம மக்கள் அனைவரும் அவசரமாக அந்த இடத்தை விட்டு வெளியேறத் தொடங்கினர். அப்போது ஒருவன் அந்த பக்தரிடம் வந்து, “ஐயா, இங்கு இருப்பது மிகவும் ஆபத்து. நீங்களும் எங்களுடன் வாருங்கள். உடனே இந்த இடத்தை விட்டு வெளியேற வேண்டும்” என்று கேட்டான். அதற்கு அந்த பக்தன் அமைதியாக, “என்னை இறைவன் பார்த்துக்கொள்வார். நீங்கள் செல்லுங்கள்” என்று கூறி அவரை அனுப்பிவிட்டான்.
காலம் கடந்தது. மழை அதிகரித்தது. தண்ணீர் மெதுவாக உயர்ந்து, அவன் இடுப்பு அளவுக்கு வந்தது. அப்போது ஒரு படகு அங்கே வந்தது. “ஐயா, தண்ணீர் இன்னும் அதிகரிக்கப் போகிறது. உடனே இந்த படகில் ஏறிவிடுங்கள்” என்று படகில் இருந்தவர்கள் அழைத்தனர். ஆனால் அந்த பக்தன் மீண்டும் அதே பதிலையே கூறினான்: “என்னை இறைவன் காப்பாற்றுவார். நீங்கள் போங்கள்.”
சில நேரங்களில் தண்ணீர் கழுத்து வரை உயர்ந்தது. உயிர் ஆபத்தில் இருந்தது. அப்போது மீட்பு குழுவினர் ஹெலிகாப்டரில் வந்து, ஒரு கயிற்றை கீழே விட்டனர். “ஐயா! உடனே இந்த கயிற்றைப் பிடித்து மேலே வாருங்கள். இது கடைசி வாய்ப்பு!” என்று கூப்பிட்டனர். ஆனால் அந்த பக்தன் உறுதியாக, “என்னை இறைவன் காப்பாற்றுவார்” என்று சொல்லி, அந்த வாய்ப்பையும் நிராகரித்தான்.
சில நிமிடங்களில் தண்ணீர் முழுவதும் அவனை மூழ்கடித்தது. அந்த பக்தன் உயிரிழந்தான். அவன் இறைவன் முன்னிலையில் நின்றபோது, கோபத்துடன் கேட்டான்: “கெட்டவர் களையும், திருடர்களையும், பாவிகளையும் காப்பாற்றினாய். ஆனால் உன்னை நம்பிய என்னை மட்டும் காப்பாற்ற வில்லை. இது நியாயமா?” அதற்கு இறைவன் அமைதியாகப் பதிலளித்தார்: “முதலில் உன்னை எச்சரிக்க ஒரு மனிதனை அனுப்பினேன். பின்னர் ஒரு படகை அனுப்பினேன். கடைசியாக ஹெலிகாப்டரையும் அனுப்பினேன். நான் கொடுத்த எல்லா வாய்ப்புகளையும் நீயே நிராகரித்தாய். அதற்கு நான் என்ன செய்ய முடியும்?”
இறைமக்களே, இந்த நிகழ்வு நமக்கு ஒரு மிக முக்கியமான உண்மையை எடுத்துரைக்கிறது. தேவன் நம்மை காப்பாற்றும்போது, அது எப்போதும் அதிசயமான வழிகளி லேயே வரவேண்டும் என்று இல்லை. பல நேரங்களில், மனிதர்கள் மூலம், சூழ்நிலைகள் மூலம், சாதாரண வாய்ப்புகள் மூலம் அவர் நமக்கு உதவுகிறார். ஆனால் நாம் அந்த வாய்ப்புகளை அறியாமல் விட்டுவிட்டால், அது நம்முடைய இழப்பாகிவிடும்.
நாம் சில நேரங்களில், “தேவன் உதவவில்லை” என்று குறை கூறுகிறோம். ஆனால் உண்மையில், அவர் ஏற்கனவே பல வாய்ப்புகளை நமக்குக் கொடுத்திருக்கலாம். ஒரு நல்ல ஆலோசனை, ஒரு நண்பரின் உதவி, ஒரு பெற்றோரின் அறிவுரை, ஒரு போதகரின் வார்த்தை. இவை அனைத்தும் தேவன் நமக்கு தரும் வழிகாட்டுதல்களாக இருக்கலாம். எனவே இறைமக்களே, தேவன் அனுமதிக்கும் சூழ்நிலைகளை சரியாகப் புரிந்து கொள்ளுங்கள். அவர் தரும் வாய்ப்புகளை அலட்சியப் படுத்தாதீர்கள். விசுவாசம் என்பது காத்திருப்பதற்கே அல்ல; செயல்படுவதற்கும் ஆகும்.
நாம் செய்ய வேண்டியது என்னவென்றால்: தேவன் தரும் வாய்ப்புகளை உணர வேண்டும், அவற்றைப் பயன்படுத்த துணிவு கொள்ள வேண்டும், அதன் மூலம் முன்னேற வேண்டும். இறைவன் கதவைத் திறக்கிறார்; ஆனால் அந்த கதவுக்குள் நடக்க வேண்டியது நாமே. அவர் வாய்ப்பைக் கொடுக்கிறார்; ஆனால் அதை பயன்படுத்துவது நம் பொறுப்பு.
எனவே இறைமக்களே, உங்கள் வாழ்க்கையில் வரும் ஒவ்வொரு நல்ல வாய்ப்பையும் இறைவனின் பரிசாக ஏற்றுக் கொண்டு, அதைச் சரியாகப் பயன்படுத்துங்கள். அப்போது உங்கள் வாழ்க்கை வீணாகாமல், அர்த்தமுள்ளதாக மாறும்.
– போதகர். பெ. பெவிஸ்டன்