நமக்கெல்லாம் மிகவும் பரிச்சயமான ஒரு கதை உள்ளது. ஒரு சிறிய கிராமத்தில் ஒரு குறும்புக்கார சிறுவன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு மற்றவர்களை ஏமாற்றுவது ஒரு விளையாட்டு போல இருந்தது. அவன் அடிக்கடி கிராம மக்களை தவறாக நம்ப வைத்து, அவர்களை சிரிக்க வைப்பதிலே மகிழ்ச்சி அடைந்தான்.
ஒருநாள், அவன் திடீரென “புலி வருது! புலி வருது!” என்று கூச்சலிட்டான். அவன் குரலைக் கேட்ட கிராம மக்கள் சிலர் அங்கே ஓடி வந்தனர். ஆனால் அங்கே எந்தப் புலியும் இல்லை. சிறுவன் சிரித்துக் கொண்டே, “உங்களை ஏமாத்திட்டேன்!” என்று சொன்னான். இதனால் மக்கள் எரிச்சலடைந்தனர்.
அடுத்த சில நாட்களிலும் அவன் இதே செயலை மீண்டும் மீண்டும் செய்தான். ஒவ்வொரு முறையும், “புலி வந்துவிட்டது” என்று பொய் சொல்லி மக்களை ஏமாற்றினான்.
ஆரம்பத்தில் நம்பிய மக்கள், பின்னர் அவனை அலட்சியமாகக் காணத் தொடங்கினர். “அவன் எப்போதும் பொய்யாகத்தான் பேசுவான்” என்ற எண்ணம் அவர்களிடத்தில் உருவானது.
ஒருநாள், உண்மையிலேயே ஒரு புலி அந்தக் கிராமத்திற்கு வந்தது. அது நேராக அந்த சிறுவனை நோக்கி வந்தது. பயந்துபோன அவன் முழு குரலிலும் “புலி! புலி! என்னைக் காப்பாத்துங்க!” என்று கத்தினான். ஆனால், இந்த முறை யாரும் அவனை நம்பவில்லை. “இது அவன் வழக்கமான நாடகம் தான்” என்று நினைத்து யாரும் உதவிக்கு வரவில்லை. இறுதியில், அவன் உண்மையாக உதவி கேட்டபோதும், அவனுக்கு உதவி கிடைக்கவில்லை.
இந்தச் சிறிய கதை ஒரு பெரிய உண்மையை நமக்கு கற்றுத் தருகிறது. பொய் சொல்லும் பழக்கம், மனிதனின் நம்பகத்தன்மையை முற்றிலும் அழித்து விடும். ஒருவன் எத்தனை முறை உண்மையைப் பேசினாலும், அவன் அடிக்கடி பொய் சொன்னால், அவன் சொல்வதை யாரும் நம்ப மாட்டார்கள்.
நம்பிக்கை என்பது வாழ்க்கையில் மிகப் பெரிய செல்வம். அது பணத்தால் வாங்க முடியாத ஒன்று. ஒருமுறை அது உடைந்துவிட்டால், அதை மீண்டும் பெறுவது மிகவும் கடினம். ஒருவர் உண்மையாக இருப்பதால் தான், அவர் மற்றவர்களிடத்தில் மதிப்பையும் மரியாதையையும் பெறுகிறார்.
சிலர் “இது சின்ன பொய்தான்” என்று நினைத்து பொய் சொல்ல ஆரம்பிக்கிறார்கள். ஆனால் அந்தச் சிறிய பொய்களே, நாளடைவில் பெரிய பிரச்சனைகளுக்குக் காரணமாக மாறுகின்றன. பொய் சொல்லும் பழக்கம் வளர்ந்துவிட்டால், அது ஒருநாள் நம்மையே ஆபத்தில் தள்ளிவிடும்.
இதனால்தான் இறைவேதம் மிகவும் தெளிவாகச் சொல்லுகிறது: “பொய்யைப் பகைத்து அருவருக்கிறேன்” (சங்கீதம் 119:163) “பொய்சொல்லுகிறவன் என் கண்முன் நிலைப்பதில்லை” (சங்கீதம் 101:7)
இறைமக்களே, உண்மை என்பது வெறும் நல்ல குணம் மட்டுமல்ல; அது நம்மை பாதுகாக்கும் கவசம். உண்மையாக நடப்பவன் எங்கு சென்றாலும் நம்பிக்கையைப் பெறுவான். அவன் சொல் மதிக்கப்படும். அவன் வாழ்க்கை உறுதியானதாக இருக்கும். எனவே, நம்முடைய வாழ்க்கையில் எத்தனை சோதனைகள் வந்தாலும், உண்மையை விட்டுவிடாதிருப்போம். “உண்மையே உயர்ந்த தர்மம்” என்ற பழமொழியை மனதில் நிறுத்திக்கொண்டு வாழ்வோம். அப்போது நம்முடைய வாழ்க்கை நம்பிக்கையாலும், மரியாதையாலும், பாதுகாப்பாலும் நிரம்பியதாக இருக்கும்.
– போதகர். பெ. பெவிஸ்டன்