ஒரு மாலை நேரத்தில், ஒரு முதியவர் தனது பேரனுடன் வீட்டின் முன்பாக அமைதியாக அமர்ந்து கொண்டிருந்தார். வாழ்க்கைப் பாடங்களை எளிமையாகவும் ஆழமாகவும் சொல்லும் பழக்கம் அவருக்கிருந்தது. அந்த நாளில் அவர் பேரனை நோக்கி சிரித்தபடி ஒரு வாக்கியம் கூறினார்: “பேரனே, சொர்க்கத்திற்கு நுழைவது இலவசம்; ஆனால் நரகத்திற்கு நுழைய பணம் வேண்டும்.” இந்த வார்த்தைகள் பேரனின் மனதில் ஆச்சரியத்தை ஏற்படுத்தின. உடனே அவன் ஆர்வத்துடன் கேட்டான்: “தாத்தா, இது எப்படி சாத்தியம்? சொர்க்கம் இலவசமா? நரகத்துக்கு பணமா?”
முதியவர் சிரித்தபடி மெதுவாக விளக்கத் தொடங்கி னார்: “மகனே, நன்றாக சிந்தித்துப் பார். சூதாட்டத்தில் ஈடுபட பணம் வேண்டும். மதுபானம் அருந்த பணம் வேண்டும். சிகரெட் புகைக்க பணம் வேண்டும். தீய பழக்கங்களில் ஈடுபடவும், தவறான வழிகளில் செல்லவும் பணம் தேவைப்படுகின்றது. மனிதன் தன் வாழ்க்கையை அழிக்கும் பல விஷயங்களுக்கு பணத்தை செலவழிக்கிறான். இவை அனைத்தும் அவனை மெதுவாக அழிவின் பாதைக்கு இட்டுச் செல்கின்றன. அதனால் தான் நான் சொன்னேன். நரகத்திற்கு போக பணம் தேவை என்று.”
அவர் சிறிது நேரம் அமைதியாக இருந்தார். பின்னர் தொடர்ந்து கூறினார்: “ஆனால், அன்பு காட்ட பணம் தேவை யில்லை. ஒருவரை ஆறுதல் கூற பணம் தேவையில்லை. தேவனை வணங்க பணம் தேவையில்லை. மன்னிப்பு கேட்க வும், மன்னிக்கவும் பணம் தேவையில்லை. தாழ்மையாக நடக்கவும், நேர்மையாக வாழவும் எந்தச் செலவும் இல்லை. ஒருவர் மற்றவருக்கு உதவுவது, சேவை செய்வது, நல்லதை தேர்ந்தெடுத்து வாழ்வது. இவை அனைத்தும் இலவசமாக கிடைக்கும் வாய்ப்புகள். அதனால்தான் சொர்க்கத்திற்கு
செல்லும் பாதை இலவசம் என்று சொன்னேன்.”
இந்த வார்த்தைகள் பேரனின் உள்ளத்தில் ஆழமாக பதிந்தன. முதியவர் அவனை நோக்கி ஒரு முக்கியமான கேள்வியை எழுப்பினார்: “இப்போது நீயே சொல்லு மகனேஞ் பணம் செலவழித்து அழிவைத் தேர்ந்தெடுக்கிறாயா? அல்லது இலவசமாகக் கிடைக்கும் நல்ல வாழ்க்கையைத் தேர்ந்தெடு க்கிறாயா?” அந்தக் கேள்வி அவனை சிந்திக்க வைத்தது.
இறைமக்களே, இந்தச் சிறிய உரையாடல் ஒரு பெரிய உண்மையை நமக்கு உணர்த்துகிறது. நாம் வாழும் வாழ்க் கையில், நமது நேரம், பணம், ஆற்றல் ஆகியவை எதற்காக பயன்படுத்தப்படுகின்றன என்பதுதான் நமது எதிர்காலத்தை தீர்மானிக்கிறது. பலர் அறிந்திருந்தும் தவறான பழக்கங்களுக்கு பணம் செலவழிக்கிறார்கள். அது உடலையும், மனதையும், குடும்பத்தையும் பாதிக்கிறது. ஆனால் நல்ல வாழ்க்கையை வாழ்வதற்கு பெரும்பாலும் பணம் தேவையில்லை; மனம் மட்டும் போதும். இறைவேதமும் இதையே எச்சரிக்கிறது:
“பாவிகளுடைய பாதையில் பிரவேசியாதே; தீயோருடைய வழியில் நடவாதே” (நீதி.4:14,15). மேலும், “நல்லவர்களின் வழியிலே நடந்து, நீதிமான்களின் பாதைகளைப் பின்பற்று” (நீதி. 2:20) என்று அறிவுறுத்துகிறது.
எந்தப் பாதையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை இந்த வசனங்கள் நமக்கு தெளிவாகச் சொல்கின்றன. வாழ்க்கை என்பது தினமும் நாம் எடுக்கும் சிறிய முடிவுகளின் தொகுப்பாகும். ஒவ்வொரு நாளும் நாம் இரண்டு வழிகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கிறோம். நல்ல வழி அல்லது தீயவழி. தீய வழி ஆரம்பத்தில் இனிமையாகத் தோன்றலாம்; ஆனால் அதன் முடிவு அழிவு. நல்ல வழி ஆரம்பத்தில் சிரமமாக இருக்கலாம்; ஆனால் அதன் முடிவு அமைதியும் ஆசீர்வாதமும் ஆகும். ஆகையால், நாம் எச்சரிக்கையுடன் வாழ வேண்டும். தீய பழக்கங்களைத் தவிர்க்க வேண்டும். நல்லவற்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அன்பையும் தாழ்மை யையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். தேவனை நம் வாழ்க்கையின் மையமாக்க வேண்டும். நம்முடைய வாழ்க்கை பணத்தால் மட்டுமே நிர்ணயிக்கப்படாது; நம்முடைய தேர்வுக ளால் நிர்ணயிக்கப்படுகிறது.
முடிவாக, வாழ்க்கை ஒரு தேர்வு. அந்தத் தேர்வு நம் கைகளில் உள்ளது. நாம் பணம் செலவழித்து அழிவை வாங்கிக் கொள்ள வேண்டுமா? அல்லது இலவசமாகக் கிடைக்கும் கிருபையையும் நன்மையையும் தேர்ந்தெடுத்து வாழ வேண்டுமா?
செலவு செய்து நரகத்தைத் தேர்ந்தெடுக்காதீர்;
இலவசமான பாதையைத் தேர்ந்தெடுத்து
சொர்க்கத்தில் வாழுங்கள்.
– போதகர். பெ. பெவிஸ்டன்