ஒரு கப்பல் அமைதியான கடலில் தனது பயணத்தைத் தொடங்கியது. எல்லாம் நிதானமாகவும் நிம்மதியாகவும் இருந்த அந்த நேரத்தில், திடீரென ஒரு பயங்கரமான புயல் எழுந்தது. கடும் காற்று வீசியது; அலைகள் மலைபோல் எழுந்து கப்பலை தாக்கின. சில நொடிகளில் அந்த அமைதியான பயணம் உயிர்ப்பாயாக மாறியது. கப்பல் கட்டுப்பாட்டை இழந்து கடலில் மூழ்கியது. அந்த விபத்தில் இருந்த பலர் உயிரிழந்தார்கள். ஆனால் ஒருவன் மட்டும் எப்படியோ கடலில் மிதந்து உயிர் தப்பினான்.
பல மணி நேரம் அலைகளுடன் போராடியபின், அவன் ஒரு சிறிய தீவின் கரையை அடைந்தான். அந்த தீவு மனிதர் கள் வாழாத, முற்றிலும் தனிமையான இடமாக இருந்தது. கரையை அடைந்தவுடன், அவன் வானத்தை நோக்கி கண்ணீருடன் கூவினான்: “இறைவா! என்னை இங்கிருந்து காப்பாற்று. என் குடும்பத்தாரை மீண்டும் பார்க்க வேண்டும்.” அந்த நாள் முதல் அவன் தினமும் கடலை நோக்கி பார்த்துக் கொண்டே இருந்தான். “இன்று யாராவது வருவார்களா?” என்ற நம்பிக்கையே அவனை உயிரோடு வைத்திருந்தது. ஆனால் நாட்கள் கடந்தன; வாரங்கள் சென்றன; எவரும் வரவில்லை.
அவன் தனக்காக ஒரு குடிசையை கட்டிக்கொண்டான். கடலில் இருந்து கிடைத்த மரத்துண்டுகள், இலைகள், கற்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி ஒரு எளிய இருப்பிடத்தை உருவாக்கினான். உணவு தேடி அலைந்தான்; மழையையும் வெயிலையும் தாங்கிக் கொண்டான். வாழ்க்கை மிகவும் கடினமாக இருந்தாலும், அவன் ஒரு விஷயத்தை மட்டும் விடவில்லை. அது ஜெபம். “தேவன் என்னை மறக்க மாட்டார்” என்ற நம்பிக்கையை அவன் மனத்தில் உறுதியாக பிடித்துக் கொண்டிருந்தான்.
ஒருநாள், வழக்கம்போல் உணவு தேடி தீவின் உள்ளே சென்றிருந்தான். சில மணி நேரங்கள் கழித்து திரும்பி வந்த போது, அவன் கண்முன் நடந்த காட்சி அவனை அதிர்ச்சிய டையச் செய்தது. அவன் கட்டியிருந்த ஒரே குடிசை தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. புகை வானத்தை நோக்கி எழுந்தது. அந்தக் காட்சியைப் பார்த்தவுடன் அவன் மனம் உடைந்தது. அவன் துவண்டு அழுதான்: “இறைவா! நான் உம்மை நம்பி னேன். என்னை காப்பாற்றும்படி ஜெபித்தேன். ஆனால் இருந்த ஒரே பாதுகாப்பையும் நீர் எடுத்துக்கொண்டீரே! இது என்ன நீதி?” அவனுடைய நம்பிக்கை தளர்ந்தது. வாழ்வதற்கான ஆசையும் குறைந்தது.
ஆனால் அதே நேரத்தில், தூரத்தில் ஒரு சத்தம் கேட்டது. அவன் தலை நீட்டி பார்த்தான். ஒரு கப்பல் அந்தத் தீவை நோக்கி வந்து கொண்டிருந்தது! அவன் அதிர்ச்சியுட னும் மகிழ்ச்சியுடனும் பார்த்துக்கொண்டிருந்தான். சில நிமிடங் களில் அந்தக் கப்பலில் இருந்தவர்கள் அவனை அடைந்து காப்பாற்றினர். அவன் ஆச்சரியத்துடன் கேட்டான்: “நான் இங்கே இருப்பதை உங்களுக்கு எப்படி தெரிந்தது?” அவர்கள் சிரித்த படி பதிலளித்தனர்: “இந்தத்தீவில் புகை எழுவது பார்த்தோம். யாரோ உதவி கேட்டு சிக்னல் கொடுக்கிறார்கள் என்று நினைத்து வந்தோம்.”
அந்த வார்த்தைகள் அவன் இதயத்தை ஆழமாகத் தொட்டன. அப்போது தான் அவனுக்கு உண்மை புரிந்தது. அவன் இழந்ததாக நினைத்த குடிசை தான் அவனை காப்பாற்றிய அடையாளமாக இருந்தது. அவன் தேவனை குற்றம் சாட்டியதை நினைத்து வெட்கப்பட்டான். கண்ணீருடன் தேவனை நன்றி கூறினான்.
இறைமக்களே, இந்தக் கதை நமக்கு ஒரு மிகப்பெரிய வாழ்க்கைப் பாடத்தை உணர்த்துகிறது. நம் வாழ்க்கையிலும் பல நேரங்களில் நாம் விரும்பாத சம்பவங்கள் நடக்கின்றன. நாம் கட்டிய “குடிசைகள்” அதாவது நம் திட்டங்கள், ஆசைகள், நம்பிக்கைகள் சில நேரங்களில் உடைந்து போகின் றன. அந்த நேரத்தில் நாம் கேட்கிறோம்: “ஏன் இது எனக்கு நடந்தது?” என்று. ஆனால் நாம் அறியாத ஒன்று என்னவென் றால், அந்தச் சம்பவங்களே நம்மை காப்பாற்றும் தேவனுடைய திட்டமாக இருக்கலாம்.
நாம் பார்க்கிறோம் இழப்பை;
தேவன் பார்க்கிறார் மீட்சியை.!
நாம் பார்க்கிறோம் முடிவை;
தேவன் பார்க்கிறார் புதிய ஆரம்பத்தை!!.
இதைத்தான் இறைவேதம் உறுதியாகச் சொல்கிறது: “தேவனிடத்தில் அன்பு கூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறது” (ரோமர் 8:28).
ஆகையால், நம் வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வையும் உடனே தீர்ப்பளிக்காமல், நம்பிக்கையுடன் ஏற்றுக்கொள்ள கற்றுக் கொள்ள வேண்டும். சில இழப்புகள் நம்மை உயர்த்துவதற்கான பாதையாக இருக்கலாம். சில வேதனைகள் நம்மை பாதுகாக்கும் கரமாக இருக்கலாம்.
முடிவாக, ஜெபத்தை விடாதீர்கள். நம்பிக்கையை இழக்காதீர்கள். தேவனை சந்தேகிக்காதீர்கள். நாம் இழந்த தாக நினைப்பது, தேவன் கொடுக்க நினைக்கும் பெரிய நன்மைக்கான தொடக்கமாக இருக்கலாம்.
எரிந்த குடிசையும் கூட.., தேவனின் காப்பாற்றும் கரமாக மாறும்..!
– போதகர். பெ. பெவிஸ்டன்