ஒரு அமைதியான கிராமத்தில் செழித்து வளர்ந்து, இனிய கனிகள் கொடுக்கும் ஒரு ஆப்பிள் மரம் இருந்தது. அந்த மரம் கிராமத்தின் நடுவில் உயரமாக நின்று, பலருக்கும் நிழலும் நன்மையும் அளித்தது. ஆனால் அந்த மரத்திற்கு மிகவும் நெருக்கமானவன் ஒரு சிறுவன். அவன் தினமும் அந்த மரத்தருகில் வந்து விளையாடுவான். மரத்தின் கிளைகளில் ஏறி சிரித்துக்கொண்டே ஆடுவான்; அதன் நிழலில் அமர்ந்து ஓய்வெடுப்பான்; அதன் இனிய கனிகளை சுவைத்து மகிழ்வான். அந்த மரத்துக்கும் அந்தச் சிறுவனுக் கும் இடையே ஒரு ஆழமான பாசம் உருவானது. சிறுவன் வராத நாட்களில் மரம் ஒரு வெறுமையை உணர்ந்தது போல இருந்தது.
காலம் நகர்ந்தது. சிறுவன் வளர்ந்து பள்ளிக்குச் செல்லும் பருவத்தை அடைந்தான். படிப்பு, நண்பர்கள், புதிய உலகம் ஆகியவற்றால் அவன் வாழ்க்கை மாறியது. அந்த மரத்தருகில் வருவதும் குறைந்தது. சில நாட்களில் முற்றிலும் வராமல் போனான். இருந்தாலும், மரம் அவனை மறக்கவில் லை; அவன் மீண்டும் வரும் நாளை எதிர்பார்த்து காத்திருந் தது.
ஒருநாள் பல நாட்கள் கழித்து அவன் மீண்டும் வந்தான். அவனை பார்த்த மரம் மகிழ்ச்சியுடன் கேட்டது: “தம்பி, நீ எங்கே போனாய்? நான் எப்போதும் உனக்காக காத்திருக்கிறேன்.” அதற்கு சிறுவன், “நான் இப்போது பெரியவனாகிவிட்டேன். மரத்தடியில் விளையாடும் வயதை கடந்துவிட்டேன். எனக்கு இப்போது விளையாட்டு பொருட்கள் வேண்டும். உன்னால் என்ன செய்ய முடியும்?” என்று கேட்டான். மரம் மெதுவாகச் சொன்னது: “என்னிடம் விளையாட்டு பொருட்கள் இல்லை. ஆனால் என் கனிகளை எடுத்துச் சென்று விற்று, உனக்கு தேவையானதை வாங்கிக் கொள்.” அந்தச் சிறுவன் மரத்தின் கனிகளை எல்லாம் பறித்து விற்று, தன் ஆசைகளை நிறைவேற்றிக் கொண்டான். அதன் பின் மீண்டும் மரத்தை நாடவில்லை.
ஆண்டுகள் சென்றன. ஒரு நாள் அவன் மீண்டும் வந்தான். இப்போது அவன் முகத்தில் கவலையும் சோகமும் இருந்தது. மரம் அன்புடன் கேட்டது: “என்ன தம்பி? ஏன் இவ்வளவு கவலை?” அவன் பதிலளித்தான்: “நான் கல்லூரி யில் படிக்க வேண்டும். ஆனால் எனக்கு பணம் இல்லை.” உடனே மரம் சொன்னது: “கவலைப்படாதே. என் கிளைகளை வெட்டி எடுத்துச் சென்று விற்று, உன் படிப்பை தொடரு.” அந்த மனிதன் மரத்தின் கிளைகளை வெட்டி எடுத்துச் சென்றான். மரம் தன் அழகை இழந்தாலும், அவன் எதிர்காலம் உருவாக வேண்டும் என்பதற்காக மகிழ்ந்தது. மீண்டும் அவன் வரவில்லை.
பல ஆண்டுகள் கழித்து, வாழ்க்கையின் சுமைகளால் சோர்ந்து போன மனிதனாக அவன் திரும்பி வந்தான். மரம் அவனை உடனே அடையாளம் கண்டது. ஆனால் இப்போது மரம் மிகவும் மாறிவிட்டது. கிளைகளும் இல்லை; கனிகளும் இல்லை; ஒரு வேரும் தண்டு மட்டும் தான் இருந்தது. மரம் வருத்தத்துடன் சொன்னது: “என்னிடம் இப்போது உனக்கு கொடுக்க எதுவும் இல்லை.” அதற்கு அந்த மனிதன் மெதுவாகச் சொன்னான்: “எனக்கு இப்போது எதுவும் தேவை யில்லை. என் வாழ்க்கை சுமைகளால் நான் சோர்ந்துவிட் டேன். உன் வேர்களில் சாய்ந்து ஓய்வெடுக்க வந்தேன்.” உடனே அந்த மரம் அவனை அன்புடன் தழுவியது போல தனது வேர்களில் அவனை சாயவைத்தது. அந்த தருணத் தில், எந்தப் பொருளும் இல்லாமல் இருந்தாலும், அது அவனுக்கு அமைதியையும் ஆறுதலையும் கொடுத்தது.
இறைமக்களே, இந்தக் கதை ஒரு மரம் மற்றும் ஒரு மனிதன் பற்றியது மட்டுமல்ல. அது நமது வாழ்க்கையை பிரதிபலிக்கும் ஒரு உண்மை. பலர் உறவுகளை தேவைக் கேற்ப அணுகுகிறார்கள். தேவையிருக்கும்போது தேடுகிறார்கள்; தேவையில்லை என்றால் மறந்து விடுகிறார்கள். நாம் தேவனை அணுகும் விதமும் பல நேரங்களில் இப்படித்தான் இருக்கிறது. பிரச்சினை வந்தால் மட்டுமே தேடுகிறோம்; நிம்மதி வந்தால் மறந்து விடுகிறோம்.
ஆனால் உண்மையான உறவு என்பது தேவைக்காக அல்ல, அன்புக்காக இருக்க வேண்டும். தேவனை நாம் தேவைகளை நிறைவேற்றும் கருவியாக மட்டும் பார்க்காமல், அவரையே நமது தேவையாகக் கொள்ள வேண்டும். ஏனெனில், எல்லா சூழ்நிலைகளிலும் நம்மை விட்டு விலகாத வர் அவர் மட்டுமே. நாம் மாறினாலும், அவர் மாறமாட்டார்.
இந்தக்கதை பெற்றோரின் அன்பை நமக்கு நினைவூ ட்டுகிறது. அவர்கள் அந்த மரம் போலவே இருக்கிறார்கள். நாம் சிறியவர்களாக இருந்தபோது நமக்காக எல்லாவற்றை யும் தியாகம் செய்கிறார்கள். நாம் வளர்ந்த பின், பல நேரங் களில் அவர்களை மறந்து விடுகிறோம். ஆனால் அவர்கள் அன்பு ஒருபோதும் குறையாது. அதனால் தான் இறைவேதம் கூறுகிறது:
“உன் தகப்பனையும் உன் தாயையும் கனம் பண்ணுவாயாக” (யாத்திராகமம் 20:12).
அன்பு என்பது கொடுத்து கொண்டே இருக்கும் ஒரு மரம் போன்றது. அது எதையும் எதிர்பார்க்காது; கொடுக்க மட்டுமே விரும்பும். நாம் அன்பைப் பெறுகிறோமா என்று கேட்பதற்கு முன், நாம் அன்பை அளிக்கிறோமா என்று சிந்திக்க வேண்டும். தேவைகளை மட்டும் தேடாமல், அன்பை மதித்து, தேவனைத் தேடுவோம்; நம்மை நேசிப்ப வர்களை மதிப்போம்; அன்பை வாழ்வின் மையமாகக் கொண்டு வாழ்வோம்.
– போதகர். பெ. பெவிஸ்டன்