ஜீவிக்கிறார்! இயேசு ஜீவிக்கிறார்!
அந்த நற்செய்திக் கூட்டத்தில் சலசலப்பு நிலவியது. சிறப்புச் செய்தியாளர் இன்னும் வந்து சேரவில்லை. அரசியல் கூட்டங்களில் அறிவிப்பது போல, “பிரசங்கியார் இதோ வந்துகொண்டே இருக்கிறார்!” என்று ஒலிபெருக்கியில் அறிவிக்கப்பட்டது. ஆனால் அதுவரை கூட்டத்தை எப்படி அமைதிப்படுத்துவது? பாடுவதற்கான சிறப்புப் பாடல் கைப்பிரதியும் அச்சடிக்கப்படவில்லை.
சமயோசித புத்தியுள்ள போதகர் ஒருவர் மேடையில் எழுந்து வந்து, “இப்போது நாம் ஆண்டவரைத் துதித்துப் பாடப் போகிறோம். அனைவருக்கும் தெரிந்த சில பாடல்களைப் பாடுவோம்,” என்றார். உடனே, “மகிழ்வோம், மகிழ்வோம்…”, “அல்லேலூயா கர்த்தரையே ஏகமாகத் துதியுங்கள்”, “இயேசு கிறிஸ்துவின் நல் சீடராகுவோம்”, “பரிசுத்தர் கூட்டம் நடுவில்”, “ஜீவிக்கிறார்! இயேசு ஜீவிக்கிறார்!” என்று பாடல்கள் ஒன்றன்பின் ஒன்றாக முழங்கின. செய்தியாளர் தாமதமாக வந்த குறையை அந்தப் பாடல் நேரமே இனிதாக நிறைவு செய்தது.
இவ்வாறு, கிறிஸ்தவத் தமிழ் உலகில் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவராலும் மனப்பாடமாகப் பாடப்படும் எண்ணற்ற பாடல்களை இயற்றியவர், அகில உலக வானொலி ஊழியத்தின் தென் ஆசிய இயக்குநராகப் பணியாற்றிய சகோதரர் எமில் ஜெபசிங். இந்தியாவின் சிறந்த மிஷனரி இயக்கங்களில் ஒன்றாக விளங்கும் நண்பர் சுவிசேஷ ஜெபக்குழுவின் ஆரம்பகால தலைவர்களில் இவரும் முக்கியமானவர். “பாடலென்றால் எமில்” என்று கூறப்படும் அளவிற்கு, மக்கள் உற்சாகமாய் பாடக்கூடிய பல பாடல்களை அவர் எழுதியுள்ளார். அழிந்துபோகும் கோடிக்கணக்கான மக்கள்மீதான அவரது ஆத்துமபாரம், அவரது ஒவ்வொரு பாடல் வரியிலும் ஒலிக்கிறது. இனிமையான ராகங்களும் அவரது பாடல்களின் தனிச்சிறப்பாகும்.
சகோதரர் எமில் ஜெபசிங் 10.01.1941 அன்று, மறைத்திரு Y. C. நவமணி ஐயர் மற்றும் கிரேஸ் அம்மையாருக்கு மகனாகப் பிறந்தார். தனது வாலிப வயதில், சகோதரர் P. சாம் மற்றும் சகோதரர் N. ஜீவானந்தம் ஆகிய தேவவல்லமை நிறைந்த ஊழியர்களின் வழிநடத்துதலால், திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பண்ணைவிளையில் தனது 17-வது வயதில் ஆண்டவரின் அன்பை அனுபவித்தார். ஏமி கார்மைக்கேல், தாமஸ் வாக்கர், ஈசாக்கு ஐயர் போன்ற பரிசுத்த தேவ ஊழியர்கள் பணியாற்றிய அந்தப் புனிதமான ஊரிலே, கிறிஸ்துவின் இரத்தத்தால் பாவமன்னிப்பும், மிஷனரி தரிசனமும் பெற்றதால், பண்ணைவிளையை “பரிசுத்த பூமி” என்று அவர் வாழ்நாள் முழுவதும் நன்றியுடன் நினைவுகூர்ந்தார்.
ஆண்டவருக்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணித்த எமில், முதலில் பண்ணைவிளையில் தனது வாலிப நண்பர்களை ஆண்டவருக்காக ஆதாயப்படுத்தினார். அவர்கள் அனைவரும் ஒன்றுகூடி ஜெபித்து, ஆவிக்குரிய ஐக்கியத்தில் வளர்ந்தனர்.
1959-ஆம் ஆண்டு பெரிய வெள்ளிக்கிழமையன்று, வழக்கம்போல் அந்த வாலிபர் குழு ஜெபிக்க ஒன்றுகூடியது. அன்று ஆண்டவரின் சிலுவைப்பாடுகளையும் மரணத்தையும் தியானித்தபோது, அவர்களுடைய இதயங்கள் ஆழ்ந்த பாரத்தால் நிறைந்திருந்தன. முதலில் ஆண்டவரைத் துதித்துப் பாடிவிட்டு பின்னர் ஜெபிக்கலாம் என்று அவர்கள் முடிவு செய்தனர்.
அந்த நேரத்தில் பரிசுத்த ஆவியானவர் எமில் ஜெபசிங்கை விசேஷமாகத் தொடந்தார். அருகில் இருந்த கரும்பலகையையும் சாக்குத் துண்டையும் எடுத்துக்கொண்டு, ஆவியின் வழிநடத்துதலின்படி, அவர் வேகமாக ஒரு புதிய பாடலை எழுதத் தொடங்கினார். அதே நேரத்தில், அந்தப் பாடலுக்கான இனிய ராகமும் அவரது உள்ளத்தில் ஊற்றெடுத்தது.
“பெரிய வெள்ளிக்கிழமையன்றும் என் இயேசு ஜீவிக்கிறார்! என்னைப் பாவ வாழ்விலிருந்து மீட்பதற்காக சிலுவையில் உயிர்தந்தார். ஆனால் அவர் மரணத்தில் நிலைத்திருக்கவில்லை; இன்று என்றும் உயிரோடு ஜீவிக்கிறார். அவரை ஏற்றுக்கொண்ட என் உள்ளத்திலும் அவர் ஜீவிக்கிறார்!” என்ற சிந்தனை அவரது இதயத்தை நிரப்பியது.
“அவர் ஏன் என் உள்ளத்தில் ஜீவிக்கிறார்?” என்ற கேள்வி எழுந்தபோது, “உன் வாழ்வில் அற்புதங்களைச் செய்வதற்காகவே,” என்ற ஆவியின் பதில் அவரது உள்ளத்தில் ஒலித்தது. உடனே வேதாகமத்தில் காணப்படும் தேவனுடைய அற்புதங்கள் ஒன்றன்பின் ஒன்றாக நினைவுக்கு வந்தன. செங்கடல் பிளந்தது, எரிகோ மதில்கள் இடிந்தது, குருடர்கள் பார்வை பெற்றது, குஷ்டரோகிகள் சுகமடைந்தது போன்ற அற்புதங்கள் அவரது மனதில் வரிசையாக தோன்றின. அவை அனைத்தும் பாடல் வரிகளாக கரும்பலகையில் வடிவம் பெற்றன.
அந்தச் சில நிமிடங்களிலேயே, அங்கு கூடியிருந்த வாலிபர்கள் அனைவரும் அந்தப் பாடலைக் கற்றுக்கொண்டு உற்சாகமாகப் பாடினர். சோகத்தின் நாளாக நினைக்கப்பட்ட பெரிய வெள்ளிக்கிழமை, உயிர்த்தெழுந்து என்றென்றும் ஜீவிக்கிற ஆண்டவரை மகிமைப்படுத்தும் ஆராதனை நாளாக மாறியது. சோர்வும் பாரமும் நீங்கி, புதிய பெலனும் உற்சாகமும் பெற்ற அந்த வாலிபர்கள், ஆண்டவரின் சந்நிதியில் நீண்ட நேரம் ஜெபத்தில் தரித்திருந்தனர்.
இன்றும் “ஜீவிக்கிறார்! இயேசு ஜீவிக்கிறார்!” என்ற இந்தப் பாடல், தமிழ் கிறிஸ்தவ உலகின் மிகவும் பிரபலமான உயிர்த்தெழுதல் பாடல்களில் ஒன்றாக விளங்குகிறது. ஆண்டவர் உயிரோடு இருக்கிறார், விசுவாசிகளின் உள்ளத்தில் ஜீவிக்கிறார், இன்னும் அற்புதங்களைச் செய்கிறார் என்ற மாபெரும் சுவிசேஷ உண்மையை இந்தப் பாடல் தலைமுறைகள் கடந்தும் அறிவித்துக்கொண்டே இருக்கிறது.
நன்றி: மீட்பர்