ராக்காலம் பெத்லெம் மேய்ப்பர்கள்
தம் மந்தை காத்தனர்;
கர்த்தாவின் தூதன் இறங்க,
விண் ஜோதி கண்டனர்.
அவர்கள் அச்சங்கொள்ளவும்,
விண்தூதன்: “திகில் ஏன்?
எல்லாருக்கும் சந்தோஷமாம்
நற்செய்தி கூறுவேன்.”
புரோடெஸ்டென்ட் கிறிஸ்தவ சபை உருவான 16-ஆம் நூற்றாண்டிலிருந்து 18-ஆம் நூற்றாண்டு வரை, திருச்சபைகளில் பாடப்பட்ட பாடல்கள் பெரும்பாலும் “Sternhold and Hopkins Psalter” என்ற சங்கீதத் தொகுப்பை அடிப்படையாகக் கொண்டிருந்தன. இப்பாடல்கள் கரடுமுரடான கவிநடையிலும் சிக்கலான இசை அமைப்பிலும் இருந்ததால், பொதுமக்கள் எளிதாகப் பாடுவதற்கு ஏற்றதாக இருக்கவில்லை.
இதனால், சங்கீதங்களை நவீன கவிநடையிலும் எளிதாகப் பாடக்கூடிய வடிவிலும் மாற்றியமைக்க 1696-ஆம் ஆண்டு இங்கிலாந்தின் அரசவைக் கவிஞர்களான நாகூம் டேட் (Nahum Tate) மற்றும் நிக்கோலஸ் பிராடி (Nicholas Brady) ஆகியோர் முயற்சி மேற்கொண்டனர்.
அவர்களின் இந்தப் புதிய முயற்சிக்கு ஆரம்பத்தில் கடுமையான எதிர்ப்புகள் எழுந்தன. இருந்தபோதிலும், இங்கிலாந்து மன்னர் வில்லியம் III-இன் ஆதரவால், புதிய சங்கீதத் தொகுப்பு இங்கிலாந்து திருச்சபைகளில் பயன்பாட்டிற்கு வந்தது.
அதனைத் தொடர்ந்து, 1700-ஆம் ஆண்டு அவர்கள் சங்கீதங்களின் மற்றொரு துணைத் தொகுப்பை வெளியிட்டனர். அந்தத் தொகுப்பில் சங்கீதங்களுடன் கூடுதலாக 16 கிறிஸ்தவப் பாடல்களும் இடம்பெற்றன. அவற்றுள் குறிப்பிடத்தக்க பாடல்களில் ஒன்றே “ராக்காலம் பெத்லெம் மேய்ப்பர்கள்” என்ற இக்கிறிஸ்துமஸ் கீதமாகும்.
இந்தப் பாடல், Luke 2:8–16-ல் பதிவு செய்யப்பட்டுள்ள, பெத்லெம் வயல்வெளியில் தங்கள் மந்தையை காத்துக் கொண்டிருந்த மேய்ப்பர்களுக்கு தேவதூதர்கள் இயேசு கிறிஸ்துவின் பிறப்பை அறிவித்த மகத்தான நிகழ்வை எளிமையான தமிழ்நடையிலும் இனிமையான கீத வடிவிலும் எடுத்துரைக்கிறது.
காலப்போக்கில் பல பழமையான கிறிஸ்தவப் பாடல்கள் பயன்பாட்டிலிருந்து மறைந்து போனாலும், “ராக்காலம் பெத்லெம் மேய்ப்பர்கள்” என்ற இந்த கிறிஸ்துமஸ் கீதம் பல நூற்றாண்டுகளாக உலகம் முழுவதும் பாடப்பட்டு வருகிறது. கிறிஸ்துமஸ் தரும் உண்மையான மகிழ்ச்சி, இரட்சகரின் பிறப்பு, எல்லா மக்களுக்கும் அறிவிக்கப்பட்ட நற்செய்தி ஆகியவற்றை நினைவூட்டும் நிலையான கிறிஸ்தவப் பாடலாக இது இன்றளவும் சிறப்பிடம் பெற்றுள்ளது.
நன்றி: தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்