தந்தானைத் துதிப்போமே…
பாடலாசிரியர்: வே. மாசிலாமணி ஐயர்
வேதாகம அடிப்படை: சங்கீதம் 95:1–2
ராகம்: வே. மாசிலாமணி
பல்லவி
தந்தானைத் துதிப்போமே;
திருச்சபையாரே,
கவி பாடிப் பாடி.
இந்துப் பின்னணியிலிருந்து இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட ஒரு குடும்பத்தின் மூன்று சகோதரர்களும் தங்களை ஆண்டவரின் ஊழியத்திற்கு அர்ப்பணித்து, திருச்சபையைக் கட்டியெழுப்பும் முழுநேரப் போதகர்களாக விளங்கியது கிறிஸ்தவ வரலாற்றில் குறிப்பிடத்தக்க நிகழ்வாகும். அந்தக் குடும்பத்தின் மூத்த சகோதரராக விளங்கியவர் வே. மாசிலாமணி ஐயர். அவரது இளைய சகோதரரான வே. சந்தியாகு ஐயரும் சிறந்த பாடலாசிரியரும் இசை வல்லுநருமாகப் புகழ்பெற்றவர்.
வே. மாசிலாமணி ஐயர் திருப்புவனத்தில் போதகராகப் பணியாற்றிய காலத்தில் “தந்தானைத் துதிப்போமே” என்ற இக்கும்மிப் பாடலை இயற்றினார். ஆண்டவரின் மகிமையை எல்லோரும் அறிந்து, திருச்சபையினர் மகிழ்ச்சியுடன் ஒன்றுகூடி அவரைப் புகழ்ந்து பாட வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்தப் பாடலை எழுதியுள்ளார்.
சிறந்த வயலின் வித்துவானாக விளங்கிய மாசிலாமணி ஐயர், தமக்குக் கிடைத்த இசை மற்றும் பாடலாசிரியர் திறமைகளை முழுமையாக நற்செய்திப் பணிக்காகவே அர்ப்பணித்தார். அவரது இசை, சுவிசேஷ அறிவிப்பிற்கான வல்லமையான கருவியாக அமைந்தது.
திருவண்ணாமலையில் வாரச் சந்தை நடைபெறும் நாட்களில், தனது நண்பர்களுடன் அங்கு சென்று இசைக்கச்சேரிகளை நடத்துவது அவரது வழக்கமாக இருந்தது. அவரது இனிமையான இசையையும் பாடல்களையும் கேட்க சந்தைக்கு வந்த மக்கள் பெருமளவில் திரண்டனர். அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, பாடல்களின் வழியாக நற்செய்தியை எளிமையாகவும் ஆழமாகவும் அறிவித்து, ஆண்டவரின் அன்பை மக்களுடைய இதயங்களில் விதைத்தார்.
வே. மாசிலாமணி ஐயர் இயற்றிய “ஆர் இவர் ஆராரோ” என்ற கிறிஸ்துமஸ் பாடல், “வந்தனம் வந்தனமே” மற்றும் “ஆனந்தமே ஜெயா ஜெயா” போன்ற புத்தாண்டுப் பாடல்கள், இன்றளவும் கிறிஸ்தவச் சமூகத்தில் மிகவும் பிரபலமான பண்டிகைப் பாடல்களாகத் திகழ்கின்றன. இப்பாடல்கள் பண்டிகைகளின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்குவதோடு, கிறிஸ்துவை மையமாகக் கொண்ட ஆராதனை உணர்வையும் மக்களிடையே ஏற்படுத்துகின்றன.
கருத்துச் செறிவும், எளிமையான சொல்லாட்சியும், இனிமையான இசையமைப்பும் ஒன்றிணைந்துள்ளதால், இந்தப் பாடல்கள் நூற்றாண்டைக் கடந்தும் திருச்சபைகளில் தொடர்ந்து பாடப்பட்டு வருகின்றன. குறிப்பாக “ஆனந்தமே ஜெயா ஜெயா” என்ற பாடலைப் பாடும்போது, பாடல் வரிகளும் இசையும் ஒன்றோடொன்று இயல்பாக இணைந்து ஆராதனையின் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதை எளிதாக உணர முடிகிறது.
வே. மாசிலாமணி ஐயரின் இசை மற்றும் பாடல் ஊழியம், தமிழ் கிறிஸ்தவ இசை மரபில் அழியாத தடத்தைப் பதித்துள்ளது. அவர் இயற்றிய கீர்த்தனைகள் இன்று வரை பல தலைமுறைகளாக திருச்சபைகளில் ஒலித்து, விசுவாசிகளை ஆண்டவரைத் துதிக்க ஊக்குவித்து வருகின்றன.
நன்றி: SMS