“உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக.”
– மத்தேயு 22:39
ஒரு போர்வீரன் வியட்நாம் போர் முடிந்து, தன் வீட்டிற்குத் திரும்பும் நேரம் வந்தது. சான் பிரான்சிஸ்கோ நகரில் இருந்த தன் பெற்றோரை அவன் தொலைபேசியில் அழைத்து, “நான் வீட்டிற்கு வரப்போகிறேன். ஆனால் உங்களிடம் ஒரு உதவியைக் கேட்கிறேன். என்னோடு என் நண்பனும் வர இருக்கிறான்” என்று கூறினான்.
அதற்கு பெற்றோர்கள், “ஓ, தாராளமாகக் கூட்டிக்கொண்டு வா. அவனை நாங்களும் பார்க்க ஆவலாயிருக்கிறோம்” என்றார்கள்.
அதற்கு மகன், “அவன் நடந்த போரில் நிலத்தில் வைக்கப்பட்டிருந்த கண்ணியில் காலை வைத்ததினால், அவனுடைய ஒரு காலையும் ஒரு கையையும் இழந்துவிட்டான். அவனுக்கு யாரும் இல்லாததால், அவன் என்னோடு இருப்பதை விரும்புகிறேன்” என்று கூறினான்.
பெற்றோர், “மகனே, அதைக் கேட்க மிகவும் விசனமாயிருக்கிறது. இருந்தாலும், அவனை நாம் வேறொரு இடத்தில் தங்க வைக்க ஆயத்தப்படுத்துவோம். நம்மோடு அவன் இருக்க முடியாது. அவனை வைத்துப் பார்த்துக்கொள்வது மிகவும் கஷ்டம் என்பது உனக்குத் தெரியும். இந்த வயதான காலத்தில் எங்களுக்கு இப்படிப்பட்ட ஒரு பாரம் இருந்தால் மிகவும் கஷ்டம். இதைப் புரிந்துகொண்டு, அவனை வேறு இடத்தில் விட்டுவிட்டு, நீ மட்டும் வா” என்று கூறினர்.
மகன் போனை வைத்துவிட்டான்.
சிறிது நாட்கள் கழித்து, சான் பிரான்சிஸ்கோ நகர போலீசார் அந்த பெற்றோரை அழைத்து, “உங்கள் மகன் ஒரு உயரமான கட்டிடத்திலிருந்து விழுந்து தற்கொலை செய்துகொண்டான். நீங்கள் வந்து பார்த்து அது உங்கள் மகன்தானா என்று உறுதி செய்யுங்கள்” என்று கூறினார்கள்.
உடனே பதறிய பெற்றோர் அங்கு சென்று பார்த்தபோது, அது அவர்களுடைய மகன்தான் என்று தெரிந்தது. அப்போது அவர்களுக்குத் தெரியாத ஒரு காரியமும் வெளிப்பட்டது. அவர்களுடைய மகனுக்கே ஒரு கையும் ஒரு காலும் இல்லாமல் இருந்தது.
பிரியமானவர்களே, நம்மில் அநேகரும் இப்படித்தான் இருக்கிறோம். நம்மைப் போல எல்லாவற்றையும் உடையவர்களாகவும், அழகாகவும், அறிவாளிகளாகவும் இருந்தால் அவர்களோடு பழகத் துடிக்கிறோம்; பழகுகிறோம். ஆனால் நம்மைவிட அழுக்காகவோ, உடல் ஊனமுற்றவர்களாகவோ இருந்தால், அவர்களைத் தவிர்க்கவே விரும்புகிறோம்.
மேலே சொல்லப்பட்ட கதையில், அந்த பெற்றோர் தங்கள் பிள்ளைதான் ஊனமடைந்திருக்கிறான் என்று தெரிந்திருந்தால், நிச்சயமாக வீட்டிற்கு அழைத்து வந்து அவனைப் பராமரித்திருப்பார்கள். ஆனால், வேறு யாரோ என்று நினைத்து, “அவனுக்காக நான் ஏன் இதைச் செய்ய வேண்டும்?” என்று எண்ணியதாலேயே அவர்கள் தங்கள் சொந்த மகனையே இழக்க வேண்டியதாயிற்று.
நமக்கு ஒருவர் உண்டு. அவருடைய அன்பு நிபந்தனையற்றது. நாம் எத்தனை அழகற்றவர்களாயிருந்தாலும், அறிவற்றவர்களாயிருந்தாலும், அவர் நம்மை நேசித்து, பராமரித்து, போஷித்து, காத்து, வழிநடத்துகிற நம் தேவன். அவர் பட்சபாதமில்லாதவர்.
அவருடைய பிள்ளைகள் என்று சொல்லிக்கொள்ளும் நாமும் அப்படிப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்பதையே அவர் விரும்புகிறார்.
“அப்பொழுது, நீதிமான்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: ஆண்டவரே, நாங்கள் எப்பொழுது உம்மைப் பசியுள்ளவராகக் கண்டு உமக்குப் போஜனங் கொடுத்தோம்? எப்பொழுது உம்மைத் தாகமுள்ளவராகக் கண்டு உம்முடைய தாகத்தைத் தீர்த்தோம்? எப்பொழுது உம்மை அந்நியராகக் கண்டு உம்மைச் சேர்த்துக்கொண்டோம்? எப்பொழுது உம்மை வஸ்திரமில்லாதவராகக் கண்டு உமக்கு வஸ்திரங்கொடுத்தோம்? எப்பொழுது உம்மை வியாதியுள்ளவராகவும் காவலிலிருக்கிறவராகவும் கண்டு, உம்மிடத்தில் வந்தோம் என்பார்கள். அதற்கு ராஜா பிரதியுத்தரமாக: மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார்.”
(மத்தேயு 25:37–40)
என்று இயேசு கிறிஸ்து கூறுகிறார்.
நாம் மற்றவர்களுக்குச் செய்யும் ஒவ்வொரு நன்மையும் தேவனுக்கே செய்ததுபோலாகும்.
நம்மால் இயன்றதை மற்றவர்களுக்கு உதவியாகச் செய்வோமா? “உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக” என்ற கற்பனையை நிறைவேற்றுவோமா?
நமக்கு உதவி செய்ய முடியும் போது, அதற்குத் தகுதியானவர்களுக்கு உதவி செய்யாமல் இருக்கக்கூடாது. நிச்சயமாகச் செய்வோம். நம் பலன் பரலோகத்தில் சேர்த்து வைக்கப்படும்.
ஆமென்! அல்லேலூயா!
ஜெபம்
எங்கள் அன்பின் பரலோகத் தகப்பனே, இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் இருந்தபோது நன்மை செய்பவராய்ச் சுற்றித்திரிந்தார் என்று வேதத்தில் பார்க்கிறோமே. அதுபோல நாங்களும் மற்றவர்களுக்கு நன்மை செய்ய எங்களுக்கு உணர்த்தும்.
தேவையுள்ளவர்களுக்கு நாங்கள் செய்யும் உதவி உமக்கே செய்தது என்பதை உணர்ந்து, எங்களால் இயன்றதைச் செய்யத் தக்கவர்களுக்கு செய்ய கிருபை தாரும்.
எங்கள் ஜெபத்தைக் கேட்டு எங்களுக்குப் பதில் கொடுப்பவரே, உமக்கே நன்றி.
இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம், எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே. ஆமென்!