ஒரு ஊரில் வில்லியம் என்கிற ஒருவர் வாழ்ந்து வந்தான். அவன் யாருக்கும் பயப்படாதவனாக வாழ்ந்தான். காரணம், அவன் தன் மாம்சத்தில் காணப்படும் பலத்தையே அதிகமாக நம்பியிருந்தான். இந்த உலகத்தில் மனிதர்கள் மேன்மையாக கருதும் சக்தி, வலிமை, ஆற்றல் ஆகியவற்றில் தான் அவன் நம்பிக்கை வைத்திருந்தான். “என் பலத்திற்கு முன்பாக எதுவும் நிற்க முடியாது” என்பதே அவன் எண்ணமாக இருந்தது.
ஆனால் இறைவேதம், மாம்சத்தின் மேல் நம்பிக்கை வைக்காதிருங்கள் என்று எச்சரிக்கிறது. ஏனெனில் மாம்சம் மனிதனுக்கு இறுதியில் அழிவையே உண்டாக்கும். இதனை அறியாமல், எந்த காரியத்தையும் தன்னால் செய்து முடிக்க முடியும் என்ற ஆணவத்துடன் வில்லியம் தன் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தான்.
நாட்கள் சென்றன. ஒரு நாள் அந்த ஊருக்கு கர்த்தருடைய ஒரு ஊழியக்காரர் வந்தார். அவர் தேவனுடைய கிருபையால் அந்த ஊரில் மிகவும் மரியாதைக்குரியவராக உயர்ந்தார். பலரும் அவரை பயபக்தியுடன் மதிக்கத் தொடங்கினர். இதை கண்ட வில்லியம், “நான் மக்களை பயமுறுத்தினால்தான் அவர்கள் என்னைக் கவனிக்கிறார்கள்; ஆனால் இவரிடம் மக்கள் உண்மையான மரியாதையுடன் நடக்கிறார்கள்” என்று உள்ளுக்குள் கோபம் கொண்டான்.
அந்த கோபத்தின் காரணமாக, அவன் அந்த ஊழியக்காரரிடம் தேவையில்லாமல் பிரச்சனைகளை உருவாக்க ஆரம்பித்தான். ஒருநாள் அவன் அவரை அடித்துவிட்டான். ஆனால் அந்த ஊழியக்காரர் எந்த கோபமும் காட்டாமல் அமைதியாக அங்கிருந்து சென்றார். இதை கவனித்த வில்லியம், “இவர் என்ன செய்வார்?” என்ற ஆர்வத்தில் அவரை பின்தொடர்ந்தான்.
அப்போது அவன் பார்த்த காட்சி அவனை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. தன்னை அடித்த அந்த வாலிப னுக்காகவே, அந்த ஊழியக்காரர் முழங்காலில் மண்டியிட்டு ஜெபித்து கொண்டிருந்தார். “இவன் மனந்திரும்ப வேண்டும்” என்று அவர் தேவனை நாடி ஜெபித்துக் கொண்டிருந்தார். இந்த செயல் வில்லியத்திற்கு கோழைத்தனமாக தோன்றியது. ஆகவே அவன் தொடர்ந்து அவரைத் தொந்தரவு செய்தான்.
ஆனால் உண்மையில், அந்த ஊழியக்காரரின் ஜெப ஆயுதத்துக்கு முன்பாக வில்லியத்தின் மாம்ச பலம் வீழ்ந்தது. நாட்கள் கழிந்தபோது, வில்லியம் திடீரென நோயுற்று படுக்கையிலே கிடக்கத் தொடங்கினான். அவனுக்கு என்ன நடக்கிறது என்பது புரியவில்லை. பயமும் குழப்பமும் அவனை ஆட்கொண்டது.
அந்த நிலையில் கூட, அந்த ஊழியக்காரர் அவனைத் தேடி வந்து ஜெபித்தார். அவரது ஜெபத்தின் மூலம், வில்லியம் மீண்டும் பலம் பெற்று எழுந்தான். இதைக் கண்ட வில்லியம் ஆழமாக சிந்தித்தான். “இந்த உலகத்தில் மனிதனால் உருவாக்கப்பட்ட எந்த ஆயுதமும் உண்மையான சக்தி அல்ல; ஜெபமே வெற்றி தரும் ஆயுதம்” என்பதை உணர்ந்தான்.
அந்த உண்மையை உணர்ந்தவுடன், அவன் ஒரு முக்கியமான முடிவை எடுத்தான். அந்த ஊழியக்காரரிடம் சென்று, அந்த அழியாத ஆவிக்குரிய ஆயுதமான ஜெபத்தை கற்றுக்கொள்ளத் தொடங்கினான். இவ்வாறு அவன் தனது வாழ்க்கையை மாற்றிக் கொண்டு, ஆவிக்குரிய பாதையில் நடக்க ஆரம்பித்தான்.
இறைமக்களே, இறைவேதம் இவ்வாறு கூறுகிறது: “நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல் எல்லாவற்றையுங் குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்” (பிலிப்பியர் 4:6).
எனவே, நமது வாழ்க்கையில் எந்த சிக்கலும் வந்தாலும், மாம்சத்தின் பலத்தை அல்ல, ஜெபத்தின் சக்தியை நம்பிக்கொள்ள வேண்டும். ஜெபம் மனிதனை மாற்றும்; சூழ்நிலைகளையும் மாற்றும்; இறுதியில் வாழ்வையே மாற்றும்.
– போதகர். பெ. பெவிஸ்டன்