ஒரு தோட்டத்தில் புதிதாக ஒரு வாழைக் கன்று நடப்பட்டது. அதற்கு அருகில் ஏற்கனவே ஒரு தென்னங்கன்று இருந்தது. சில நாட்களில் வாழைக்கன்று வளரத் தொடங்கியது. அது தென்னங்கன்றை நோக்கி, “நீ இங்கே எத்தனை வருடமாக இருக்கிறாய்?” என்று கேட்டது. தென்னங்கன்று அமைதியாக “ஒரு வருடம்” என்று பதிலளித்தது.
அதைக் கேட்ட வாழைக்கன்று சிரித்துக் கொண்டு, “ஒரு வருடமா? ஆனா என்னைவிட கொஞ்சம்தான் உயரமா இருக்கே! உனக்கு வளர்ச்சி இல்லையா?” என்று கேலி செய்தது. ஆனால் தென்னங்கன்று எந்த பதிலும் கூறாமல் அமைதியாக இருந்தது. நாட்கள் செல்லச் செல்ல, வாழைக்கன்று வேகமாக வளர்ந்து, சில மாதங்களிலேயே தென்னங்கன்றை விட உயரமாகி விட்டது. அதன் பெருமையும் அதே அளவுக்கு அதிகரித்தது. தினமும் அது தென்னங்கன்றை பார்த்து கேலி செய்தது.
“நாம ஒரே மண்ணில்தான் இருக்கோம், ஒரே தண்ணி குடிக்கிறோம், ஆனா பாரு நான் எவ்வளவு வேகமா வளர்ந்துட்டேன். உனக்கு வளர்ச்சி கிடைக்கல போல!” என்று இகழ்ந்தது. ஆனால் தென்னங்கன்று எப்போதும் போல அமைதியாகவே இருந்தது. அது எந்த கிண்டலுக்கும் பதில் சொல்லவில்லை.
சில காலத்தில், வாழைமரம் அழகாக வளர்ந்து குலையையும் கொடுத்தது. காய்களால் நிரம்பி அது பெருமையுடன் காட்சி அளித்தது. இதனால் அதன் அகங்காரம் மேலும் அதிகரித்தது.
ஒருநாள் ஒரு மனிதன் தோட்டத்துக்கு வந்து வாழைமரத்தை சுற்றிப் பார்த்தான். அதன் காய்களை பரிசோதித்தான். தென்னை மரத்தை கவனிக்கவே இல்லை. இதைக் கண்ட வாழைமரம் மிகுந்த பெருமை கொண்டது. ஆனால் அதற்குப் பிறகு சில நிமிடங்களில் மற்றொரு மனிதன் கத்தியுடன் வந்தான். வாழைமரத்தின் குலைகள் வெட்டப் பட்டன. பின்னர் முழு மரமும் வெட்டி சாய்க்கப் பட்டது. சில நேரத்தில், உயர்ந்து நின்ற வாழைமரம் முழுமையாக அழிக்கப்பட்டது. ஆனால் தென்னை மரம்? அது அங்கேயே நின்றுகொண்டே இருந்தது. அமைதியாக, மெதுவாக வளர்ந்து கொண்டிருந்தது. அதன் வளர்ச்சி தாமதமாக இருந்தாலும், அது நிலையானது.
இந்த நிகழ்வு ஒரு பெரிய உண்மையை நமக்கு உணர்த்துகிறது. வேகமாக வளர்வது வெற்றி அல்ல; நிலைத்து நிற்பதே உண்மையான வெற்றி. பொறுமை இல்லாத வளர்ச்சி நீண்ட நாட்கள் நிலைக்காது.
வாழ்க்கையிலும் இதேபோல் தான். சிலர் விரைவாக முன்னேறுவார்கள். சிலர் மெதுவாக வளர்வார்கள். அதனால் தாழ்வு உணர்ச்சி கொள்ள வேண்டியதில்லை. ஒவ்வொரு வருக்கும் அவரவர் நேரம் உண்டு. இறைவேதமும் இதையே வலியுறுத்துகிறது: “ஒரு காரியத்தின் முடிவு அதன் தொடக்கத்தை விட சிறந்தது; பெருமையுள்ளவனைவிட பொறுமையுள்ளவன் மேன்மையானவன்.”
எனவே, பிறர் சொல்வதைக் கேட்டு மனம் தளராமல், நிதானமாகவும் பொறுமையுடனும் முன்னேற வேண்டும். எல்லா கேலிகளுக்கும் பதில் சொல்ல வேண்டியதில்லை. அமைதியாக உங்கள் பாதையில் செல்லுங்கள். உண்மை, நேர்மை, பொறுமை இவை மூன்றும் இணைந்தால், உங்கள் வாழ்க்கை நிச்சயம் நிலையான வெற்றியை அடையும்.
– போதகர். பெ. பெவிஸ்டன்