ஒருநாள், நான் என் நண்பருடன் பேசிக்கொண்டே சாலையில் நடந்து கொண்டிருந்தேன். திடீரென ஒரு கார் மிக வேகமாக வந்து எங்களை உரசியபடி கடந்து சென்றது. அதிர்ச்சியுடன் திரும்பிப் பார்த்தேன். அந்தக் காரின் பின்புறக் கண்ணாடியில், “என் சமூகம் உனக்கு முன்பாகச் செல்லும்” என்று எழுதப்பட்டிருந்தது. அதோடு ஒரு சிலுவையின் படமும் ஒட்டப்பட்டிருந்தது.
அதைப் பார்த்த என் நண்பர் சிரித்துக் கொண்டு, “சிலுவை படம் போட்டும், வசனம் ஒட்டியும் எப்படி ஓட்டுகிறான் பாருங்க!” என்றார். அதற்கு நான், “வசனங்களை காரில் ஒட்டினால் மட்டும் ஒருவன் நல்லவனாக மாறிவிட முடியாது” என்று பதிலளித்தேன்.
இறைமக்களே, இது ஒரு தனிப்பட்ட சம்பவம் அல்ல; நாம் அன்றாடம் காணும் ஒரு உண்மை. பல வாகனங்களில் ஆன்மீக வாசகங்களும் மதச்சின்னங்களும் காணப்படுகின்றன. ஆனால் அவற்றை ஓட்டுபவர்களின் நடத்தை அதற்கு முற்றிலும் மாறாக இருக்கும். அவசரமாக, ஆவேசமாக, மற்றவர்களை அச்சுறுத்தும் விதமாக வாகனங்கள் பறந்து செல்கின்றன.
இத்தகைய செயல்கள் அந்த மதத்தின் மேல் மரியாதையை வளர்க்காது. மாறாக, மற்றவர்களின் மனதில் கோபத்தையும் வெறுப்பையும் உருவாக்கும். நாம் கூறும் வார்த்தைகளுக்கும், நாம் நடத்தும் வாழ்க்கைக்கும் இடையே பொருந்தாமை இருந்தால், அந்த வார்த்தைகளின் அர்த்தமே மங்கிவிடும்.
நமது ஆன்மீகம் வார்த்தைகளில் அல்ல, செயல்களில் வெளிப்பட வேண்டும். நிதானமாக வண்டி ஓட்டுவது, சாலையை கடக்க நினைப்பவர்களுக்கு வழிவிடுவது, அவசர வாகனங்களுக்கு முன்னுரிமை கொடுப்பது, தவறு செய்தால் புன்னகையுடன் மன்னிப்பு கேட்பது இவை எல்லாம் உண்மை யான ஆன்மீகத்தின் அடையாளங்கள். இந்தச் செயல்கள் சிறியதாக தோன்றினாலும், மனிதநேயத்தையும் இறைபக்தி யையும் வெளிப்படுத்தும் பெரிய சாட்சிகளாகும்.
வசனங்களை கண்ணாடியில் ஒட்டுவது எளிது; சுவரில் எழுதுவதும் எளிது. ஆனால் அவற்றை இதயத்தில் பதிப்பதும், வாழ்க்கையில் நடைமுறைப்படுத்துவதும் தான் முக்கியம். வெளிப்புற அலங்காரமாக அல்ல, உள்ளார்ந்த மாற்றமாக வசனங்கள் நம்மை உருவாக்க வேண்டும்.
கைநிறைய மருந்துகள் இருந்தாலும், அதை உட்கொள்ளா விட்டால் நோய் குணமடையாது. அதுபோலவே, இறை வசனங்களை வைத்திருப்பதால் மட்டும் மாற்றம் வராது. அவற்றை வாழ்வில் செயல்படுத்தினால்தான் அதன் பயன் நமக்குக் கிடைக்கும்.
இறைவேதம் இவ்வாறு கூறுகிறது: “நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்” (ரோமர் 12:2).
இந்த வசனம் நமக்கு ஒரு தெளிவான அழைப்பை வழங்குகிறது. வெளிப்புறமாக அல்ல, உள்ளார்ந்த மாற்றம் அவசியம் என்பதை வலியுறுத்துகிறது.
கிறிஸ்தவத்தின் அடிப்படை என்பது வசனங்களை அறிதல் மட்டுமல்ல; கிறிஸ்துவைப் போன்று வாழ்வதாகும். நமது வாழ்க்கைதான் மற்றவர்களுக்கு சாட்சி ஆக வேண்டும். நாம் பேசும் வார்த்தைகள் அல்ல, நாம் நடத்தும் வாழ்க் கையே நம்மை வெளிப்படுத்த வேண்டும். எனவே இறைமக்களே, வேத வார்த்தைகளை வெறும் தாள்களிலும், கண்ணாடிக ளிலும் காட்டாமல், தினசரி வாழ்வில் காண்பிப்போம். நமது செயல்களால் இறைஅன்பை வெளிப்படுத்துவோம். அப்பொழுது நாமும் மாற்றம் அடைவோம்; நம்மை சுற்றிய உலகமும் மாற்றம் அடையும். இறை வார்த்தைகளை வாழ்வில் நிறைவேற்றுவோம்; இறையாசீரை அனுபவிப்போம்!
– போதகர். பெ. பெவிஸ்டன்