ஒரு நாட்டின் அரசன், தனது அரண்மனையில் வாழ்ந் தாலும் மனநிம்மதியின்றி வாழ்ந்து கொண்டிருந்தான். அவனிடம் செல்வமும், அதிகாரமும், வசதிகளும் அனைத்தும் இருந்தன. ஆனாலும் அவன் உள்ளத்தில் ஒரு வெறுமை இருந்தது. அவன் மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை. ஒருநாள், அவன் தனது சேவகர்களின் வாழ்க்கையை கவனித்துக் கொண்டிருந்த போது, ஒருவன் அவன் கவனத்தை ஈர்த்தான். அந்தச் சேவகர் மிகவும் ஏழை. அவனிடம் பெரும் சொத்துகளோ, வசதிகளோ எதுவும் இல்லை. இருந்தாலும் அவன் தினமும் முகம் மலர்ந்தபடி, மகிழ்ச்சியுடன் தனது வேலையைச் செய்து கொண்டிருந்தான்.
அதைப் பார்த்த அரசனுக்கு ஆச்சரியமும், ஒரு விதமான குழப்பமும் ஏற்பட்டது. “எனக்கு எல்லாம் இருக்கிறது; ஆனாலும் எனக்கு அமைதி இல்லை. ஆனால் அவனிடம் எதுவும் இல்லை; இருந்தும் அவன் சந்தோஷமாக இருக்கிறான். இதற்குக் காரணம் என்ன?” என்று அவன் யோசித்தான். இதற்கான பதிலை அறிய, அவன் தனது மந்திரியை அழைத்து கேட்டான்.
அதற்கு மந்திரி அமைதியாக சிரித்துக் கொண்டு, “அரசே, அந்த சேவகன் இன்னும் ‘99 ஆட்டத்தில்’ சேரவில்லை” என்றான். அரசன் அதைக் கேட்டதும் குழப்பமடைந்தான். “99 ஆட்டம் என்றால் என்ன?” என்று கேட்டான். அதற்கு மந்திரி ஒரு யோசனையைச் சொன்னான்: “99 பொற்காசுகளை ஒரு பையில் போட்டு, அதன் மேல் ‘100 பொற்காசுகள் கொண்ட அன்புப் பரிசு’ என்று எழுதுங்கள். அதை அந்த சேவகனின் வீட்டின் வாசலில் வைத்து விடுங்கள். பிறகு என்ன நடக்கிறது என்று கவனியுங்கள்.”
அரசன் அதைப் போலவே செய்தான். மறுநாள் காலை, அந்த சேவகன் வீட்டின் வாசலில் அந்தப் பையை கண்டான். அதைத் திறந்து பார்த்தவுடன் அவன் மகிழ்ச்சியில் மூழ்கிப் போனான். “எனக்கு இவ்வளவு பெரிய பரிசு!” என்று அவன் ஆச்சரியப்பட்டான். அவன் அவற்றை எண்ணத் தொடங்கினான். எண்ணியபோது 99 பொற்காசுகள் மட்டுமே இருந்தன.
அவன் உடனே நினைத்தான்: “ஒரு காசு எங்காவது தவறி விழுந்திருக்க வேண்டும்.” அந்த ஒரு காசைத் தேட அவன் தொடங்கினான். அவனது மனைவியும், பிள்ளைகளும் அவனுடன் சேர்ந்து தேடினார்கள். வீட்டு மூலைமுடுக்குகள் எல்லாம் தேடப்பட்டன. ஆனால் அந்த ஒரு காசு கிடைக்க வில்லை. தேடல் நீண்டபோது, அவனது மனநிலை மாறத் தொடங்கியது. நேற்று வரை இருந்த மகிழ்ச்சி மெதுவாக மறைந்து, அதற்குப் பதிலாக கவலை, எரிச்சல், மனஅழுத்தம் வந்தது.
அவன் கோபத்துடன் பேசத்தொடங்கினான். குடும்பத் தினர் மீது சினந்தான். அவன் மனநிம்மதி முற்றிலும் குலைந்தது. ஒரே ஒரு காசு இல்லாததால், அவன் கையில் இருந்த 99 காசுகளின் மகிழ்ச்சியையே இழந்துவிட்டான்.
இதையெல்லாம் பார்த்த அரசனுக்கு, “99 ஆட்டம்” என்றதன் அர்த்தம் தெளிவாகப் புரிந்தது. அவன் மனதில் ஒரு உண்மை வெளிப்பட்டது: மனிதன் தன்னிடம் உள்ளவற்றைக் காணாமல், இல்லாத ஒன்றிற்காக ஏங்கும் போது, அவன் சந்தோஷத்தை இழக்கிறான்.
இறைமக்களே, இந்தக் கதை நமது வாழ்க்கையை யும் பிரதிபலிக்கிறது. தேவன் நமக்கு ஏராளமான ஆசீர்வாதங்களை அளித்திருக்கிறார். நமக்குக் கிடைத்திருக்கும் பல நல்லவற்றை நாம் கவனிக்காமல், இல்லாத ஒரு விஷயத்திற்காகவே கவலைப்படுகிறோம். நமக்குக் கிடைத் திருக்கும் ஆரோக்கியம், குடும்பம், உணவு, பாதுகாப்பு இவை அனைத்தும் மிகப் பெரிய ஆசீர்வாதங்கள். ஆனால் நாம் அவற்றை மறந்து, “என்னிடம் அது இல்லை”, “இது கிடைக்கவில்லை” என்று எண்ணி வருந்துகிறோம்.
ஒரு குறை காரணமாக, நமது முழு வாழ்க்கையை யும் இருளாக்கிக் கொள்ளக் கூடாது. திருப்தி இல்லாத மனம் எப்போதும் அமைதியைக் காணாது. எவ்வளவு கிடைத்தாலும், இன்னும் ஒன்று வேண்டும் என்ற எண்ணம் தொடர்ந்து கொண்டே இருக்கும். அதுவே “99 ஆட்டம்”. அது ஒரு போதும் முடிவதில்லை. ஆனால் திருப்தி கொண்ட மனம் மிகப்பெரிய செல்வம். அது வெளிப்புற சூழ்நிலைகளால் வருவதில்லை; அது உள்ளத்திலிருந்து வருகிறது. நன்றி கூறும் மனப்பான்மை, மனிதனை உண்மையான மகிழ்ச்சிக்கு இட்டுச் செல்கிறது.
இறைவேதம் கூறுகிறது: “போதுமென்ற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம்.” இந்த வசனம் நமக்கு ஒரு ஆழமான ரகசியத்தைச் சொல்லுகிறது. உண்மையான செல்வம் என்பது நாம் சேர்த்துக் கொண்ட பொருட்களில் இல்லை; நாம் கொண்டிருக்கும் திருப்தியில் உள்ளது.
இறைமக்களே, நாம் எதை இழந்திருக்கிறோம் என்பதை எண்ணிக் கொண்டே வாழ்ந்தால், நாம் ஒருபோதும் சந்தோஷமாக இருக்க முடியாது. ஆனால் நாம் பெற்றிருக்கும் நன்மைகளை எண்ணி நன்றி கூறத் தொடங்கினால், நம் வாழ்க்கை மாற்றமடையும்.
ஆகையால், இல்லாததை எண்ணி வருந்தாதீர்கள். இருப்பதை எண்ணி நன்றி கூறுங்கள். நம்மிடம் உள்ள சிறிய நன்மைகளும், பலருக்கு கிடைக்காத பெரிய ஆசீர்வாதங்கள் என்பதை உணருங்கள். ஒரு குறையைப் பற்றிக் கவலைப்பட்டு, நூறு நன்மைகளை இழக்காதீர்கள். தொண்ணூறு ஒன்பது ஆசீர்வாதங்களை மறந்து, ஒரு குறையைப் பற்றிக் கவலைப் படாதீர்கள். நன்றி மனப்பான்மையோடு வாழும் வாழ்க்கையே உண்மையான ஆனந்த வாழ்க்கை.
– போதகர். பெ. பெவிஸ்டன்