ஒருவன் தனது வாழ்க்கையை முன்னேற்ற வேண்டும் என்ற தீவிர எண்ணத்துடன் வெளிநாடு செல்லத் தீர்மானித்தான். அவன் வாழ்க்கை எளிதானது அல்ல. இருந்தாலும், “ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்தால் என் வாழ்க்கை மாறும்” என்ற நம்பிக்கை அவனை உற்சாகப்படுத்தியது. அந்த நம்பிக்கைக்காக அவன் தன்னிடம் இருந்த சொத்துக்கள் அனைத்தையும் விற்றான். இறுதியாக கிடைத்த பணத்தால் ஒரு கப்பல் பயணத்திற்கான டிக்கெட்டை வாங்கினான். அந்த டிக்கெட் அவனுக்கு ஒரு பயண சீட்டாக மட்டும் இல்லை; அது அவனுடைய எதிர்கால கனவுகளுக்கான கதவாக இருந்தது.
ஆனால் அந்த மகிழ்ச்சியின் பின்னால் ஒரு பெரிய பிரச்சனை இருந்தது. டிக்கெட் வாங்கிய பிறகு அவனிடம் ஒரு ரூபாய்கூட மீதியாக இல்லை. உணவு வாங்கிக் கொள்ளவும் பணம் இல்லை. கப்பலில் ஏறியபோது, அவன் மனதில் ஒரு முடிவு எடுத்தான்: “இந்தப் பயணம் முடியும் வரை பட்டினி இருந்தாலும் பரவாயில்லை; அக்கரை சென்றவுடன் வேலை செய்து சாப்பிடலாம்.” அவன் தனது தேவையை ஒதுக்கி, எதிர்காலத்தை நம்பிக் கொண்டு அமைதியாக இருந்தான்.
கப்பல் கடலில் பயணம் செய்தது. மற்ற பயணிகள் உணவகத்திற்குச் சென்று சுவையான உணவுகளை உண்டு மகிழ்ந்தனர். ஆனால் அவன் அந்த இடத்திற்கு செல்லத் தயங்கினான். “என்னிடம் பணம் இல்லை; நான் எப்படி சாப்பிடுவது?” என்ற எண்ணம் அவனைத் தடுத்து நிறுத்தியது. தினமும் அவன் பசியுடன் இருந்தான். முதல் நாள் சற்றே சகித்தான். இரண்டாம் நாள் கஷ்டப்பட்டான். மூன்றாம் நாள் அவன் உடல் பலவீனமடைந்தது. ஆனாலும் அவன் தன் மனதை கட்டுப்படுத்திக் கொண்டான்.
நாட்கள் கடந்து சென்றன. பசி அவனை மெதுவாக சோர்வடையச் செய்தது. உடல் சக்தி குறைந்தது. மனமும் தளர்ந்தது. ஒரு நாள், அவன் தாங்க முடியாமல் மயங்கி விழுந்தான். அவனைச் சுற்றியிருந்த பயணிகள் அவசரமாக ஓடி வந்து, அவன் முகத்தில் தண்ணீர் தெளித்து அவனை எழுப்பினர். சிறிது நேரம் கழித்து அவன் விழித்துக் கொண்டான்.
அவர்கள் அவனிடம் கவலையுடன் கேட்டார்கள்: “என்ன ஆயிற்று? ஏன் இப்படி மயங்கி விழுந்தாய்?” அப்போது அவன் தன் நிலையை வெளிப்படையாகச் சொன்னான்: “என்னிடம் பணம் இல்லை. இந்தப் பயணத்திற்காக என் எல்லா சொத்து களையும் விற்றுவிட்டேன். அதனால் நான் உணவு வாங்க முடியவில்லை. அக்கரை சென்றபின் தான் சாப்பிட முடியும்.”
அதை கேட்டவர்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு, சிரமத்துடன் அவனிடம் சொன்னார்கள்: “அட, உனக்கு இது தெரியாதா? இந்தக் கப்பலில் பயணம் செய்ய டிக்கெட் வாங்கும்போதே, உணவுக்கான கட்டணமும் அதில் சேர்த்து செலுத்தப்பட் டிருக்கிறது. நீ விரும்பினால் எந்த நேரமும் உணவகத்திற்குச் சென்று சாப்பிடலாம். நீ இத்தனை நாட்களாக தேவையில்லாமல் பட்டினி கிடந்து உன் உடலை கெடுத்துக் கொண்டாயே!”
அந்த வார்த்தைகள் அவன் இதயத்தைத் தாக்கின. அவன் திகைத்துப் போனான். அவன் முகத்தில் ஆச்சரியமும் வருத்தமும் கலந்த உணர்வு தெரிந்தது. “என்னிடம் இருந்த வசதியை நான் அறியாமையால் பயன்படுத்தாமல் இவ்வளவு நாள் துன்பப்பட்டேனா?” என்று அவன் மனதில் வருந்தினான். அவனுக்குக் கிடைத்திருந்த உரிமையை அறியாமை மறைத்துவிட்டது.
இறைமக்களே, இந்தச் சம்பவம் நமது ஆன்மீக வாழ்க்கைக்கும் ஒரு மிகப் பெரிய பாடமாக இருக்கிறது. பல நேரங்களில் நாம் அந்த மனிதனைப் போலவே வாழ்கிறோம். தேவன் நமக்காக ஏற்கனவே ஏற்பாடு செய்திருக்கும் ஆசீர்வாதங்களை அறியாமல், இல்லாததை நினைத்து கவலைப்படுகிறோம். நாம் தேடுகிற சமாதானம், சந்தோஷம், நம்பிக்கை, வழிநடத்தல் இவை அனைத்தும் நமக்குத் தூரத்தில் இல்லை. அவை கிறிஸ்துவுக்குள் ஏற்கனவே நமக்காக வைத்திருக்கப்படுகின்றன.
இறைவேதம் கூறுகிறது: “அவருக்குள் ஞானமும் அறிவும் ஆகிய பொக்கிஷங்களெல்லாம் அடங்கியிருக்கிறது.” இந்த வசனம் ஒரு ஆழமான உண்மையை வெளிப்படுத்துகிறது. நாம் தேடும் அனைத்தும் கிறிஸ்துவுக்குள் உள்ளது. ஆனால் நாம் அதை அறியாமல், நம்மையே துன்பப்படுத்திக் கொள்கிறோம்.
இறைமக்களே, தேவன் நமக்காக சிலுவையில் ஏற்கனவே பெரிய கிரயத்தை செலுத்திவிட்டார். நாம் வாழ்வில் வெற்றி பெற தேவையான ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள் அனைத்தும் நமக்குக் கொடுக்கப்பட்டு விட்டன. நாம் செய்ய வேண்டியது ஒன்றே: அவற்றை அறிந்து, ஏற்றுக் கொண்டு, பயன்படுத்துவது.
நாம் பல நேரங்களில் “எனக்கு இல்லை”, “எனக்கு முடியாது”, “என் வாழ்க்கை இப்படித்தான்” என்று எண்ணி நம்மையே கட்டுப்படுத்திக் கொள்கிறோம். ஆனால் உண்மை என்னவென்றால், தேவன் நமக்குக் கொடுத்திருக்கிற கிருபை நம்மை முன்னேற்ற வல்லது. நாம் அறியாமையில் வாழ்ந்தால், ஆசீர்வாதம் இருந்தாலும் அனுபவிக்க முடியாது.
ஆகையால், இறைமக்களே, தேவன் கொடுத்த வாய்ப்பு களை அறிந்துகொள்ளுங்கள். உங்களுக்கு அளிக்கப்பட்ட கிருபையை மதித்து பயன்படுத்துங்கள். உங்கள் வாழ்க் கையின் மையமாக இயேசு கிறிஸ்துவை வைத்துக் கொள்ளுங்கள். அவருக்குள் நிலைத்திருக்கிறவர்களுக்கு, வாழ்க்கை வெறுமையாய் இருக்காது; அது நிறைவாகவும் அர்த்தமுள்ளதாகவும் இருக்கும்.
முடிவாக நாம் நினைவில் கொள்ள வேண்டியது இதுதான்: நமக்குக் கிடைத்திருப்பதை அறியாமை இழக்கச் செய்யும்; அறிவு அதை அனுபவிக்கச் செய்யும்.
· தேவன் கொடுத்ததை அறிந்துகொள்ளுங்கள்
· கிடைத்த கிருபையை பயன்படுத்துங்கள்
· கிறிஸ்துவில் நிறைந்த வாழ்க்கையை வாழுங்கள்
அப்பொழுது தான், நாம் பட்டினியில் அல்ல நிறைவில் வாழக்கற்றுக்கொள்வோம்.
– போதகர். பெ. பெவிஸ்டன்